* யாழ். மாவட்ட அரச அதிபர்
`மனிதன் சிந்தித்துச் செயற்படும் போது எதிர்பார்க்கும் இலக்கை அடையமுடியும். சமூகத்தில் மறுமலர்ச்சி விழிப்புணர்வு ஏற்படச் சகலரும் பங்களிக்க வேண்டும். சமூகம் சீரழிய அனுமதியளிக்கக்கூடாது. எதிர்கால கல்வித்தரத்தை மேம்படுத்தும் முயற்சிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட வேண்டும்'
இவ்வாறு பருத்தித்துறை கலட்டி றோ.க. பாடசாலையின் ஆரம்பப் பிரிவுக் கட்டிடத் திறப்பு விழாவிலே பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய யாழ். அரச அதிபர் கே.கணேஷ் குறிப்பிட்டார்.
இந்த ஆரம்பப்பிரிவு கட்டிடத்தை சேவாலங்கா நிறுவனம் நிர்மாணித்து வழங்கியிருந்தது. பாடசாலை அதிபர் பி.அருமைச்சந்திரன் தலைமையில் நடைபெற்றன. விழாவில் தொடர்ந்து உரையாற்றிய அரச அதிபர் கணேஷ் குறிப்பிட்டதாவது;
இப்பாடசாலை கடல்கோளினால் பாதிக்கப்பட்ட பாடசாலையாகும். இப்பாடசாலையில் இன்று திறந்து வைக்கப்பட்ட ஆரம்ப பிரிவுக் கட்டிடத்தை சேவாலங்கா நிறுவனம் நிர்மாணித்து வழங்கியுள்ளது. சேவாலங்கா நிறுவனம் மேற்கொண்டுவரும் அபிவிருத்திப் பணிகள் பாராட்டுக்குரியன.
இன்றைய மாணவர்களின் கல்வி மேம்பாடடைய வேண்டும். ஒழுக்கம் நிறைந்த, பண்பான பெற்றோரை மதிக்கும் மற்றவர்களிடத்தில் `அன்பு' காட்டும் சமுதாயம் உருவாக வேண்டும். எதிர்காலத்திற்கு ஆளுமையும் தலைமைத்துவமும் கொண்ட தலைவர்கள் உருவாக்கப்படவேண்டும்.
அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள்கள் சமயத் தலைவர்கள் தங்கள் பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஊழியரும் தொண்டராக செயற்படவேண்டும்.
ஊழல், இலஞ்சம், மோசடிகள் ஒழிக்கப்படவேண்டும். கடமை செய்யாமலும், கடமையைச் செய்யாது தடுப்பதும் குற்றமாகும்.
சமூகச் சீரழிவுகளுக்கு இடம்கொடுக்கக் கூடாது. சட்டமும் ஒழுங்கும் நிலை நாட்டப்பட வேண்டும். இல்லையேல் இருள் சூழ்ந்த எதிர்காலமே ஏற்படும்.
கடல்கோள், யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர் இவர்களுக்கு பல்வேறு உதவிகள் தேவைப்படுகின்றன அவற்றை செய்து கொடுக்க வேண்டும் என்றார்.