பிரதேச ஊடகவியலாளர்களுக்கு தகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதேச ஊடகவியலாளர் என்ற பதத்தை அகற்ற நடவடிக்கை மேற்கொள்வதாக ஊடக தகவல் துறை அமைச்சர் மகிந்த யாப்பா அபயவர்தன உறுதியளித்துள்ளார்.
ஊடக தகவல்துறை அமைச்சு அரசாங்க தகவல் திணைக்களத்தினூடாக மாவட்டம் தோறும் நடத்திவரும் பிரதேச ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வின் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வுறுதிமொழியை வழங்கினார்.
மேற்படி, செயலமர்வின் போது பிரதேச ஊடகவியலாளர்களுக்குரிய பிரச்சினைகளை முன் வைக்குமாறு வாய்ப்பளித்த போது இங்கு முன் வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு உறுதியளித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையினால் தாம் பிரித்து நோக்கப்படுவதாகவும் இதனால் தமக்கு தமது ஊடகக் கடமையை நிறைவேற்றுவதில் இடர்பாடுகளும், பாரபட்சங்களும் பரவலாக இடம்பெறுவதாகவும் இங்கு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இவ்வாறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டதையடுத்து அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட மற்றும் அமைச்சர் ஆகியோர் பதிலளித்து உரையாற்றினர்.
நாட்டில் நிலவும் பாதுகாப்புப் பிரச்சினையை மையமாக வைத்தே ஊடகவியலாளர் என்ற பதம் சேர்க்கப்பட்டதாகவும் நாட்டில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவிய பல சந்தர்ப்பங்களில் பலர் ஊடகவியலாளர் அடையாள அட்டையைத் துஷ்பிரயோகம் செய்து தவறான வழியில் நடக்க முயற்சித்தமையும் இதனால் சில சமயங்களில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவியமையும் சுட்டிக்காட்டிய அமைச்சர் இவ்வருடத்திற்கான தகவல் திணைக்கள அடையாள அட்டை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போது, பிரதேச ஊடகவியலாளர் என்ற பதத்தை மேற்படி அடையாள அட்டையிலிருந்து உடனடியாக அகற்றுவது சாத்தியமில்லாமையினால் அடுத்த ஆண்டு முதல் இப்பதம் ஊடகவியலாளர் அடையாள அட்டையிலிருந்து நீக்கப்படுமெனவும் அவர் உறுதியளித்தார்.