*தொ.வி.மு.குற்றச்சாட்டு
அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்வைக் கண்டித்து ஐக்கிய தேசியக் கட்சியினால் எதிர்வரும் 3 ஆம் திகதி நாடாளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாவது, மக்களை மேலும் கஷ்டத்துக்குள்ளாக்கும் செயல் என்று தெரிவித்துள்ள தொழிலாளர் விடுதலை முன்னணியின் தலைவர் டி.அய்யாத்துரை போராட்டம் நடத்துவதைவிட புத்தாண்டை முன்னிட்டு இலவச உணவு, தானியங்கள் மற்றும் உடைகளை வழங்குவதன் மூலம் பொதுமக்களின் ஆதரவையும், அரசாங்கத்திற்கு நெருக்கடியையும் ஏற்படுத்த முடியுமென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக அறிக்கையொன்றையும் விடுத்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நமது நாட்டில் மிகப்பெரிய பணக்காரக் கட்சி ஐக்கிய தேசியக்கட்சி என்பது நாடறிந்த உண்மையாகும். அந்தக் கட்சி அயல் நாடான தமிழ் நாட்டு அரசியலை பின்பற்றுவதன் மூலம் நாட்டின் புதிய நடைமுறையை ஏற்படுத்தி அரசாங்கத்திற்கும் ஒரு எச்சரிக்கை விடுக்கலாம். தமிழ் நாட்டில் கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் போட்டி போட்டுக் கொண்டு இலவச உணவுகளையும், இலவச உடைகளையும் வழங்குவது மட்டுமல்ல இலட்சக்கணக்கான ஏழை மக்களுக்கு தொலைக்காட்சிப் பெட்டிகளையும் துவிச்சக்கர வண்டிகளையும் வழங்கும் போது, இலங்கையில் இலட்சக்கணக்கான ஏழைப் பொது மக்களுக்கும் இந்தக் கட்சிக்கே காலம் முழுவதும் வாக்களிக்கும் பெருந்தோட்ட மக்களுக்கு புத்தாண்டை முன்னிட்டு இலவச உணவு, தானியங்களை வழங்க முன்வர வேண்டும்.
விலையுயர்வைக் கண்டித்துப் பொதுமக்கள் போராட்டம் நடத்துவது மக்களை துன்பத்தில் ஆழ்த்திவிடும் ஒரு போராட்டமாகும்.
நாட்டில் போராட்டம் செய்ய முன்வருபவர்கள் ஏழை மக்களும் உழைக்கும் மக்களும் தான். பணக்காரர்கள் என்றுமே போராட்டம் நடத்த முன்வர மாட்டார்கள். இது யதார்த்தமான உண்மையாகும்.
ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள தலைவர்கள் அனைவரும் பெரும் பணக்காரர்கள் என்பது நாடறிந்த உண்மையாகும். ஒரு தேர்தலில் தங்களின் வெற்றிக்காக ஒவ்வொரு தொகுதியிலும் கோடிக்கணக்கான பணத்தைச் செலவு செய்கிறார்கள்.
அந்த வகையில் இந்த விலையுயர்வால் பொது மக்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.