* தந்தை செல்வா நினைவு வழிபாட்டில் ஆயர் ஜெபநேசன்
தந்தை செல்வநாயகம் ஒருபோதுமே தன்னை ஒரு கிறிஸ்தவனாக அடையாளப்படுத்தியதில்லை. எல்லா மதங்களையும் சார்ந்த தமிழ் மக்களைத் தனது மக்களாகவே நேசித்துவந்த பெரியார். தமிழ் மக்களுக்காக அனுதினமும் பிரார்த்திப்பார். தள்ளாத வயதிலும் முழங்காலில் அமர்ந்து செபிப்பதை நான் அவதானித்துள்ளேன்.
தென்னிந்திய திருச்சபையின் ஓய்வுபெற்ற ஆயரும் அறங்காவல் குழுவின் தலைவருமான அதி.வண.எஸ்.ஜெபநேசன் இவ்வாறு கூறினார்.
சுண்டுக்குளி புனித யோவான் தேவாலயத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற தந்தை செல்வநாயகத்தின் 110 ஆவது பிறந்த தினத்தையொட்டிய இறைவனுக்கு நன்றி செலுத்தும் வழிபாட்டில் அருளுரையாற்றும்போதே ஆயர் இவ்வாறு கூறினார்.
ஆயர் ஜெபநேசன் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;
"தந்தை செல்வா தனது கொள்கையில் இருந்து வழுவாது தமிழ் மக்களுக்காகவே இறுதி வரையும் அர்ப்பணிப்புடன் 1956 முதல் 1977 வரையும் பணியாற்றியதால் தமிழ்பேசும் மக்களின் தலைவராக இருந்து வந்தார்.
இந்திய, பாகிஸ்தான் வாக்குரிமையைப் பறிக்கும் சட்டம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டபோது இன்று இவர்களுக்கு எதிராகக் கொண்டு வரப்படும் சட்டத்தைப் போலவே நாளை தமிழர்களின் உரிமைகளைப் பறிக்கும் சட்டங்களும் கொண்டு வரப்படும் என்று தீர்க்கதரிசனமாக கூறியிருந்தார்.
1952 இல் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்து வடக்குக் கிழக்கில் போட்டியிட்டபோது வடக்கில் வன்னியசிங்கமும் கிழக்கில் இராஜவரோதயமும் வெற்றி பெற்றனர். எனினும் தந்தை செல்வா மனம் தளரவில்லை. தமிழ் மக்களின் உரிமைக்காக பல போராட்டங்களை நடத்தினார்.
1956 பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி அமோக வெற்றிபெற்றது. வடக்குக் கிழக்கில் இருந்து 10 ஆசனங்கள் கிடைத்தன. அன்றிலிருந்து நன்நெறிதவறாத அரசியல்வாதியாக தமிழ் மக்களின் தலைவராக தந்தை செல்வா விளங்கினார்.
தந்தை செல்வா ஓரு போதுமே மற்றவர்களின் பணத்தில் தமிழரசுக் கட்சியை வளர்க்கவில்லை. தனது தென்னந்தோட்டத்தை விற்று கட்சிக்காக செலவு செய்தவர். அவரிடம் இருந்த பண்புகளால் அவர் எல்லா மக்களாலும் கவரப்பட்டார்.
அவரது அமைதியான குணம், வைராக்கியம் அவரை உயர்வான நிலைக்குக் கொண்டு சென்றது. ஒரு போதும் விலைபோகாத தலைவராகவே வாழ்ந்தார்.
தமிழ் மக்களும் சிங்கள மக்களைப் போல சகல உரிமைகளும் பெற்ற இனமாக சுதந்திரமாகவே வாழ வேண்டும் என்று போராடி வந்தார்.
அத்தகைய பெருமகனை நாம் இன்று நினைவு கூருகின்றோம். இப்படிப்பட்ட ஒரு தமிழ்த் தலைவரை எமது இளம் சமுதாயம் அறிந்துகொள்வதற்கு வசதியாக தந்தை செல்வா அறங்காவல் குழுவினரின் அவரது வாழ்க்கையைத் திரைப்படமாகத் தயாரிக்க வேண்டும் என்ற கனவு எதிர்காலத்தில் நிறைவேறும்.
தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுவதற்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்கு இறைவனுக்கு நன்றி செலுத்துவோமாக" என்றார் .
இந்த நிகழ்வில் பெரும்திரளானவர்கள் கலந்துகொண்டனர்.