* சென்னை உயர் நீதிமன்றில் திருமாவளவன் மனுத்தாக்கல்
தமிழர்களை இழிவுபடுத்தும் வகையிலான `பிரபாகரன்' என்ற பெயரிலான சிங்களத் திரைப்படத்தை கையகப்படுத்தி மத்திய அரசு அழிக்க வேண்டும் என்றும் அப்படத்தை சென்னை வண்ணக் கலையகத்திலிருந்து வெளியே எடுக்க இலங்கை துணைத் தூதுவர் ஹம்சா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
தொல். திருமாவளவன் நேற்று செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது;
`பிரபாகரன் என்ற சிங்களத் திரைப்படம் தமிழர்களை இழிவு படுத்தும் வகையிலான காட்சிகளைக் கொண்டதாக உள்ளது.
இலங்கையில் நடைபெற்று வரும் இனப் படுகொலையால் இலட்சக்கணக்கான தமிழர்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும் தமிழ் நாட்டிலும் அகதிகளாக அல்லற்படுகின்றனர். ஆனால், பிரபாகரன் என்ற பெயரிலான சிங்களத் திரைப்படத்திலோ புலிகளின் போரினால் மிக மோசமாக அகதி முகாம்களில் சிங்கள மக்கள் அவதிப்படுவதாகப் பொய்யாக சித்திரிக்கப்படுகிற காட்சிகள் உள்ளன.
3 தசாப்த கால இனப்போரின் வரலாற்றை தமிழ் நாட்டு வரலாற்று ஆசிரியர்களும் வழக்குத் தொடர்ந்துள்ள நாமும் நன்கு அறிவோம்.
கொத்துக் கொத்தாக சிங்களவர்கள் கொல்லப்படுவது போன்றும் இடம்பெயருவது போன்ற காட்சிகள் அனைத்துமே மிகப் பொய்யானவை மட்டுமல்ல பாரிய கற்பனையும் கூட.
சில காட்சிகளில் `சிறார்களை' கொண்டு இனப்படுகொலை செய்வதாகவும் காட்டப்பட்டுள்ளது. அதனைவிட மிக மோசமாகக் களமுனையில் கொல்லப்பட்ட சிறார்களுக்குப் பாடசாலைச் சீருடைகளை அணிவித்து பள்ளிக்குழந்தைகளை இராணுவம் கொன்றதாகப் புலிகள் பிரசாரம் செய்கிறார்கள் என்று ஒரு காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
செஞ்சோலை என்ற சிறார் காப்பகத்தின் மீது இலங்கை விமானப் படை 16 வான் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதால் 50க்கும் மேற்பட்ட சிறார்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அவர்களை ஆயுதப் பயிற்சிக்குச் சென்ற சிறார்கள் என்று இலங்கை அரசாங்கம் கூறியது.
ஆனால், ஐ.நா.வின் சிறார் அமைப்பான யுனிசெப் பாடசாலை சிறார்களே படுகொலை செய்யப்பட்டோர் எனக் கூறியது.
இப்படத்தில் இலங்கையின் பொய்யான பிரசாரத்தை தூக்கி நிறுத்தும் வகையிலேயே வன்மத்துடன் திட்டமிட்டு காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இப்படத்தின் நோக்கமே விடுதலைப் புலிகளுக்கு எதிரானது என்று இப்படத்தின் இணையத்தளத்திலேயே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது என்று குமுதம் றிப்போர்ட்டர் வாரமிரு முறை இதழில் சுட்டிக்காட்டியுள்ளது.
இப்படத்தின் தொழில்நுட்பம் மற்றும் பதனீட்டுச் செயற்பாடுகளுக்கான பணிகள் ஜெமினி கலையகத்தில் நடைபெற்றது. இதற்கு எமது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் உட்பட தமிழ் ஆர்வலர்கள் பலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்த போது நிலைமையை சீராக்க பொலிஸார் அங்கு வந்தனர். பொலிஸ் துணை ஆய்வாளர்கள் முன்னிலையிலேயே பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. தமிழ்ப் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகளுக்கு இப்படம் திரையிட்டுக் காண்பிக்கப்படும் என்று படத்தின் இயக்குநர் துசார பீரிஸ் உறுதியளித்திருந்தார். கடந்த 27 ஆம் திகதி தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தினருக்கு படம் திரையிடப்பட்டது.
தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் இராம.நாராயணனும் இந்தத் திரைப்படத்தைப் பார்த்து விட்டு தமிழர்களின் உணர்வுகளை அவமதிக்கும் படம் இது என்று கருத்துத் தெரிவித்திருந்தார். அதேநேரத்தில் பேச்சுவார்த்தையில் துசார பீரிஸ் கலந்து கொள்ளவில்லை.
உலகத் தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் வகையிலான இப்படத்தை ஜெமினி வண்ணக் கலையகத்தை விட்டு வெளியே அனுப்பக் கூடாது என்று கடந்த மார்ச் 28 ஆம் திகதி தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தினருக்கு முறைப்பாடு செய்திருந்தோம்.
இந்நிலையில், தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தினரிடம் ஜெமினி கலையகத்தினர் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தினரால் அப்படத்தின் பிரதிகளை தம்மிடமோ அல்லது தாம் குறிப்பிடும் நபர்களிடமோ ஒப்படைக்க வேண்டும் என்று மிகவும் அழுத்தம் கொடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
தமிழ் மக்களினது உணர்வுகளைப் புறந்தள்ளிவிட்டு இலங்கைத் துணைத் தூதரகம் இப்படியான செயற்பாடுகளை மேற்கொள்கிறது.
அப்படத்தின் பிரதிகளை வெளியே கொடுத்தால் பல இடங்களில் திரையிட வாய்ப்பு உண்டு. இது இலங்கையில் இன மோதலை மேலதிகமாக மிக மோசமாகத் தூண்டி விடும்.
அதனால், தமிழ் நாட்டில் 1980 களில் நடந்தது போன்ற உணர்வுமிக்க போராட்டங்களும் நடைபெறும்.
தமிழ் நாட்டின் ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு பொது மக்களினதும் இயல்பு வாழ்க்கை முற்றாக சீர்குலையும்.
இப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதிப்பதுடன், படத்தின் பிரதிகளை எவரிடமும் கொடுக்கக் கூடாது என்று ஜெமினி கலையகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
மேலும், இலங்கைத் துணைத் தூதரகத்தின் அழுத்தங்களுக்கு அமைய மத்திய மற்றும் மாநில உள்துறைச் செயலாளர் இந்த விவகாரத்தில் தலையிட்டு ஜெமினி கலையகத்திற்கு உத்தரவிடுவதைத் தடுக்க வேண்டும்.
அத்துடன், இப்படத்தின் பிரதிகள் உள்ளிட்ட அனைத்து வகையானவற்றையும் மத்திய உள்துறைச் செயலகம் கைப்பற்றி அழிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிடக் கோருகிறோம் என்று அதில் திருமாவளவன் கோரியுள்ளார்.
தொல். திருமாவளவனுக்காக சட்டவாளர்கள் கோபிகிருஷ்ணா என்ற ஆர்வலன், பொன்.இரவி என்ற இளந்திரையன், கே.பாலகிட்ணன் என்ற இளமாறன், இ.அங்கையற்கண்ணி, சிவலிங்கம்,சுரேசு என்ற அகரன் ஆகியோர் இம்மனுவைத் தாக்கல் செய்தனர்.