* ஐ.தே.க.எம்.பி.கயந்த கருணாதிலக்க
எம்.ஏ.எம்.நிலாம்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலை எவருமே ஒத்திவைக்குமாறு கோராத நிலையில், அரசு தரப்பு தேர்தல் எக்காரணம் கொண்டும் பிற்போடப்படமாட்டாது என பிரசாரப்படுத்துவதில் பலத்த சந்தேகம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் ஐக்கிய தேசியக்கட்சி, அரசு தரப்புக்குச் சவாலாக போட்டியிட கட்சி தீர்மானித்ததையடுத்து ஆளும் தரப்பு தடுமாற்றமடைந்து காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியது.
ஜனாதிபதி தேர்தலில் புலிகளின் ஒத்துழைப்புடன் ஏழு இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை தடுத்து நிறுத்தி மேற்கொண்ட ஜனநாயக விரோதச் செயலைக் கையாண்ட மகிந்த ராஜபக்ஷ இன்று கிழக்கு மாகாணசபையை புலிகளுடன் சேர்ந்து ரணில் பறிக்க முயற்சிப்பதாக தெரிவிக்கத் தொடங்கி இருப்பதாகவும் ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.
அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
`மட்டக்களப்பு உள்ளூராட்சித் தேர்தலின் போது அத்தேர்தலை ஐக்கிய தேசியக் கட்சி புறக்கணித்தது போன்று கிழக்கு மாகாண சபைத்தேர்தலையும் பகிஷ்கரிக்கும் என்று அரசாங்கத்தரப்பு கனவு கண்டது. ஐ.தே.க.வை.தவிர்ப்பதற்காக சவால் வேறு விட்டுப் பார்த்தனர். திடீரென கட்சி இத்தேர்தலை சந்திப்பதென எடுத்த முடிவால் ஜனாதிபதியும் ஆளும் தரப்பும் குழம்பிப் போயுள்ளனர்.
ஆயுதக்குழுவை வைத்து கிழக்கு மாகாணசபையையும் தம்வசப்படுத்திக் கொள்ள முடியுமென அவர்கள் திட்டம் தீட்டியிருந்தனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தல், மட்டக்களப்பு உள்ளூராட்சித் தேர்தல் என்பவற்றின்போது இடம்பெற்ற சம்பவங்களை மக்கள் அறியாமலில்லை, மறந்துவிடவுமில்லை. அன்று தமிழ் மக்களின் வாக்குரிமையை பறித்தனர். பின்னர் மட்டக்களப்பில் பிள்ளையானின் ஆயுதக்குழுவை நிறுத்தி அதிகாரத்தைப் பெற்றனர்.
பொதுஜன ஐக்கிய முன்னணியோ, சுதந்திரக்கட்சியோ தனித்து கிழக்கில் அதிகாரத்தைப்பெற முடியாது என்பதை அரசாங்கம் நன்கு தெரிந்து வைத்துள்ளது. ஆனால், ஐக்கிய தேசியக்கட்சி மீது தமிழ் மக்களும் முஸ்லிம்களும் பூரண நம்பிக்கை வைத்திருக்கின்றனர். எனவே தான் நாம் தைரியமாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போட்டியிடத் தீர்மானித்தோம்.
இதனைக் கேள்விப்பட்ட பின்னர் ஜனாதிபதியும், அரசாங்கமும் குழப்பமடைந்து காணப்படுகின்றனர். புலிகளுடன் கைகோர்த்த மகிந்த ராஜபக்ஷ இப்போது பிள்ளையானை இறுக அணைத்துக்கொண்டு ரணில் புலிகளுடன் சேர்ந்து கிழக்கு மக்களுக்கு துரோகமிழைக்கப் போவதாக பிரசாரப்படுத்துகின்றார். இந்த ஏமாற்று வார்த்தைகளை நம்ப கிழக்கு மக்கள் தயாராகவில்லை. கிழக்குத் தேர்தல் பின்போடப்படமாட்டாது என்று அரசுதரப்பினர் புதுக்கதை பேசுகின்றனர். தேர்தலை பின்போடுமாறு யாராவது கேட்டார்களா? கேட்காதவொன்றை வைத்துக் கொண்டு வாய் பிதற்றுவது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
பெற்றோலிய விலை அதிகரிக்கப்படமாட்டாது என்று கூறிக் கொண்டே திடீரென விலை அதிகரிக்கப்படுவதைப் போன்று தேர்தல் பிற்போடப்படமாட்டாது என்று கூறிவிட்டு போலிக் காரணம் காட்டி தேர்தலை அரசு தவிர்க்கப்போகின்றதோ என்ற சந்தேகம் வலுவடைந்து வருகின்றது.
இத்தேர்தல் நீதியாகவும் நேர்மையாகவும் நடத்தப்படுவதை அரசும் பாதுகாப்புத் தரப்பும் உறுதி செய்ய வேண்டும். பிள்ளையான் குழுவிடமிருந்து ஆயுதம் களையப்படவேண்டும். கிழக்கில் பாதுகாப்புத் தரப்பினரிடம் மட்டுமே ஆயுதம் இருக்க வேண்டும். ஏனையவர்கள் நிராயுதபாணிகளாக்கப்பட வேண்டும்.
அங்குள்ள அரசியல்வாதிகள் வேட்பாளர்கள், பொதுமக்கள் அனைவரது பாதுகாப்பை உறுதிசெய்ய அரசு அதிஉச்ச பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டு" மெனவும் தமது கட்சி வலியுறுத்துவதாக ஜயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.