* நிலைமைக்கு அரசே பொறுப்பு; ஜனாதிபதிக்கு மாவை கடிதம்
அரசாங்கத்தின் நிர்வாக இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின் யாழ். குடாநாட்டு மக்களின் நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதாகவும் அதனை சீர்ப்படுத்த வேண்டிய முழுப்பொறுப்பும் அரசினுடையதே என்றும் தெரிவித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு யாழ்.மாவட்ட எம்.பி. மாவை சேனாதிராஜா அவசரக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
அத்துடன், கடந்த இரு வருடங்களாக நிலைமை மிக வேகமாக மோசமடைந்து கொண்டு செல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அரசாங்கத்தின் கடுமையான பாதுகாப்புத் தொடர்பாக சுட்டிக்காட்டத் தேவையில்லையெனவும் உதாரணமாக ஒவ்வொரு 10 மீற்றர் தூர இடைவெளிக்கும் ஒரு இராணுவ சோதனைச் சாவடியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள மாவை எம்.பி. மேலும் தெரிவித்திருப்பதாவது;
"தினமும் மாலையிலிருந்து காலை வரை ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. அதனால், அவசரத் தேவைகளுக்கு கூட மக்கள் வெளியே செல்ல முடியாத நிலைமை உள்ளது. அதேசமயம் இனந்தெரியாத ஆயுதபாணிகள் இலக்க தகடற்ற வான்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் ஊரடங்கு அமுலிலுள்ள நேரத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இவர்கள் கடத்தல் நடவடிக்கைகளிலும் நகை, பணம் என்பனவற்றை கொள்ளையடிப்பதிலும் ஈடுபடுகின்றனர். அரைவாசிப் பேர் வெளியே காவலுக்கு நிற்கும் போது மீதிப்பேர் உள்ளே சென்று இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இளப் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களும் இடம்பெறுகின்றன.
கடத்தல்கள் பின்னர் காணாமற் போதல் படுகொலைகளில் முடிவடைகின்றன. மிக மோசமான விளைவுகள் ஏற்படுமென்ற அச்சத்தால் அநேகமான இச்சம்பவங்கள் தொடர்பாக பொலிஸாரிடம் முறையிடுவதில்லை.
இத்தகைய மோசமான சூழ்நிலையால் பொருளாதார ரீதியிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னொரு போதுமில்லாத அளவுக்கு குடாநாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரித்திருக்கிறது. தெற்கிலும் பார்க்க படுமோசமான விதத்தில் வாழ்க்கைச் செலவு அதிகரித்திருப்பதுடன் 90 சதவீதமான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் தள்ளப்பட்டு பரம ஏழைகளாகியுள்ளனர்.
இத்தகைய நிலைமைக்கு அரசாங்கமே முழுப் பொறுப்புமாகும். இது தொடர்பாக சாதகமான நடவடிக்கையை துரிதமாக மேற்கொள்ளுமாறு தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்" என்றும் மாவை சேனாதிராஜா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.