* மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பு குற்றச்சாட்டு
ராய்ட்டர் செய்திச்சேவை
2006 இல் இடம்பெற்ற கடல்கோள் நிவாரணப் பணியாளர்கள் 17 பேரின் படுகொலை தொடர்பாக பாதுகாப்புப்படையினரை குற்றம் சாட்டியிருக்கும் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பு, இச்சம்பவத்தை வெளிப்படையாக அரசாங்கம் மூடி மறைப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
`அக்ஷன் கொன்ட்ரீ லாபாய்ம்' (பட்டினிக்கு எதிரான இயக்கம்) என்ற பிரெஞ்சு தன்னார்வ தொண்டர் நிறுவனத்தின் உள்ளூர் பணியாளர்கள் 17 பேர் படுகொலையுண்ட சம்பவமானது 2003 இல் பாக்தாத்தில் ஐ.நா.கட்டித்திற்திகுள் இடம்பெற்ற மனிதாபிமான பணியாளர்கள் மீதான தாக்குதலின் பின் இடம்பெற்ற மிகமோசமான தாக்குதலாக கருதப்படுகிறது.
ஆகஸ்ட் 2006 இல் மூதூரில் இந்தப் படுகொலை இடம்பெற்றது. படுகொலையுண்ட தமிழர்கள் 17 பேரும் கடல்கோள் நிவாரணப் பணியில் ஈடுபட்டவர்களாகும்.
படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான மோதல்களில் இவர்கள் சிக்குண்டவர்களென்று இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தப் படுகொலையைப் புரிந்தவர்கள் உள்ளூர் ஊர்காவல்படைவீரரும் இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களும் என்று இலங்கையைச் சேர்ந்த மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பு பெயர் குறிப்பிட்டுள்ளது.
பொலிஸார் உட்பட அரசின் பாதுகாப்புப் படைகளே 17 நிவாரணப் பணியாளர்களையும் கொன்றதாக சாட்சியம் வெளிப்படுத்துவதாகவும் இதனை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மூடி மறைத்துவிட்டதாகவும் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பைச் சேர்ந்த ராஜன்கூல் தெரிவித்திருக்கிறார்.
மோதல் தருணத்தில் பொதுமக்கள் கொல்லப்படுவது போர்க்குற்றமாகும். குற்றவாளிகளும் அவர்களின் மேலதிகாரிகளும் நீதி விசாரணைக்கு நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
படுகொலை இடம்பெற்ற சமயத்தில் அநேகமான மூதூர்வாசிகள் இடம்பெயர்ந்து விட்டனர். பின்னர் முதலுதவிக்குழு நகருக்குச் பட்டினிக்கு எதிரான இயக்கத்தின் வளாகத்தில் இறந்தவர்களின் உடல்களைக் கண்டுள்ளது. சமீபமாக இருந்து சுடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் நிராகரித்ததுடன் விடுதலைப் புலிகளே இதனைச் செய்ததாக குற்றஞ்சாட்டியிருந்தது.
இச்சம்பவம் இடம்பெறுவதற்கு முதல்நாள் முஸ்லிம் ஊர்காவல் படைவீரரின் சகோதரர் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அதற்காக பழிவாங்குவதாக அவர் சூளுரைத்திருந்ததாகவும் அறிக்கை கூறுகிறது. அத்துடன், எந்தவொரு தமிழ் பேசுவோர் சாதாரண உடையில் தென்பட்டாலும் முடித்துவிடுமாறு நகரிலிருந்த விசேடபடைகளின் தளபதி பாதுகாப்புப் படையினருக்கு கட்டளையிட்டதாக அறிக்கை மேலும் தெரிவித்தது.
அதாவது, சந்தேகத்தின் பேரில் எவர் காணப்பட்டாலும் முடித்துவிடுமாறு பணித்ததாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க, படுகொலைச் சம்பவத்தின் பின்னர் மூதூர் பொலிஸ் நிலையத்தில் `மகிழ்ச்சிக் கொண்டாட்டம்' இடம்பெற்றதாக சாட்சிகள் விபரித்திருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முஸ்லிம் ஊர்காவல் படைவீரரின் விசனமானது ஏதோவொன்றைச் செய்ததற்கான போலிக்காரணமெனவும் அருகிலுள்ள திருகோணமலை நகரிலுள்ள சிரேஷ்ட உறுப்பினர்கள் கொலைகளின் பின்னணியில் இருந்ததாகத் தென்படுவதாகவும் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, 2006 முற்பகுதியில் இடம்பெற்ற 5 தமிழ் மாணவர்கள் படுகொலைச் சம்பவமும் மூடிமறைக்கப்பட்டதாகவும் இதற்கு பொறுப்பான அதிகாரிகளில் ஒருவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதாகவும் இது சிறப்புரிமையை தயாரிக்கும் கலாசாரமெனவும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பின் அறிக்கையை சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசாரணைப் பணியின் புத்திசாலித்தனமான பணி என்று வர்ணித்திருக்கிறது.
பட்டினிக்கு எதிரான இயக்கப் பணியாளர்களின் குரூரப் படுகொலைக்கு பொறுப்பானோரின் பெயர்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று மனித உரிமை கண்காணிப்பகத்தின் சிரேஷ்ட சட்ட ஆலோசகர் ஜேம்ஸ் ரோஸ் சுட்டிக்காட்டியுள்ளதுடன் படுகொலை தொடர்பான அரசாங்கத்தின் விசாரணைகள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் சர்வதேச சமூகத்தினர் மீதான தந்திரமான விளையாட்டு என்பதை வெளிப்படுத்துகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கையை நெருக்கடியின்றி தயாரிக்கவில்லையெனவும் குறிப்பாக 3 சாட்சிகள் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டதாகவும் நான்காவது சாட்சி காணாமல் போய் விட்டதாகவும் ஏனையோர் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகவும் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.