* இணக்கப்பாடு சாத்தியம் என்கிறார் திஸ்ஸ அத்தநாயக்கா
எம்.ஏ.எம்.நிலாம்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் முஸ்லிம் காங்கிரஸும் இணக்கப்பாடு கண்டுள்ள போதிலும் இறுதி தீர்மானத்தை ஏற்படுத்துவதற்காக நேற்று செவ்வாய் மாலையும் தொடர்ந்து பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டன.
பெரும்பாலும் கூட்டணி அமைப்பது ஊர்ஜிதமாகிவிட்டதாக ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
இரண்டு கட்சிகளும் தமது வேட்பாளர்களை யானைச் சின்னத்திலேயே நிறுத்துவதென உடன்பாடு கண்டுள்ளன.
இத்தேர்தலில் கிழக்கு மாகாண சபையை வென்றெடுப்பதன் பொருட்டு ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம் காங்கிரஸுக்கு பல விட்டுக் கொடுப்புகளை செய்ய இணங்கியுள்ளது. முதலமைச்சர் பதவியைக் கூட முஸ்லிம் காங்கிரஸுக்கே விட்டுக் கொடுக்க ஐ.தே.க. உடன்பட்டுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலி தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்க்கிழமை காலையில் இரு கட்சிகளுக்குமடையில் கொழும்பில் ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் சுமார் மூன்று மணி நேரம் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாகவும் இந்த இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தையின் போதே இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவதென்ற பொது இணக்கப்பாட்டுக்கு வர முடிந்ததாக ஹஸன் அலி தெரிவித்தார்.
இந்த உடன்பாட்டையடுத்து நேற்றுப் பிற்பகல் இருதரப்பும் இணைந்து வேட்பாளர் பட்டியலைத் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபாடு காட்டியுள்ளன. வேட்பாளர் பட்டியல் தயாரிப்புப் பணிகள் நேற்றிரவுக்குள் முடிவுக்கு வந்ததும் இன்று புதன்கிழமை இருகட்சிகளும் கூட்டறிக்கையொன்றை வெளியிடவிருப்பதாகவும் நாளை வியாழக்கிழமை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் பொருட்டு இருகட்சிகளினது உயர் மட்டக்குழுக்கள் மூன்று மாவட்டங்களுக்கும் செல்ல விருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவும் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் எம்.ரி.ஹஸன் அலியும் தெரிவித்தனர்.
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு விட்டுக் கொடுக்க ஐக்கிய தேசியக் கட்சி முன் வந்திருப்பதையடுத்து, முதலமைச்சர் வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமுமான எம்.ரி.ஹஸன் அலி நியமிக்கப்படலாமெனத் தெரியவருகின்றது. இது குறித்து முடிவெடுப்பதற்காக ஷ்ரீ லங்கா முஸ்லிம் கால்கிரஸின் அவசர உயர் மட்டக் குழுக்கூட்டம் நேற்றிரவு நடைபெற ஏற்பாடாகியிருந்தது.