தென்னாபிரிக்கா அரசாங்கம் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுக்கு பல்வேறு உதவிகள் ஆதரவை வழங்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகியது இன்று நேற்றல்ல. 1995 ஆம் ஆண்டிலேயே தென்னாபிரிக்காவில் புலிகள் இயக்கத்தினர் ஆயுதப் பயிற்சிகளை பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் அவ்வாறு புலிகளுக்கு ஆயுதப் பயிற்சி வழங்குவதற்காக விசேட இராணுவ முகாம்களை அமைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று தென்னாபிரிக்கா அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறே தென்னாபிரிக்கா தேசிய காங்கிரஸ் அமைப்புடனும் அதன் தலைவர்களுடனும் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுக்கு நெருங்கிய தொடர்புகள் இருந்தன. புலிகளுக்கும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் பிரமுகர்களுக்கும் எவ்வாறான தொடர்புகள் இருந்தன என்பது பற்றி விசாரணைகளை மேற்கொண்டிருந்த இரகசிய புலனாய்வு சேவை உத்தியோகத்தர்கள் இதுபற்றி வெளியிட்டிருந்த தகவல்கள் தென்னாபிரிக்க தேசிய காங்கிரஸுடனும் அரசுடனும் புலிகள் வைத்திருந்த நெருங்கிய தொடர்புகளை நிரூபிக்கப் போதுமானவையாகும். இது சம்பந்தமாக குறிப்பிட்ட சர்வதேச புலனாய்வுப் பிரிவினரதும் தென்னாபிரிக்கா புலனாய்வுப் பிரிவினரதும் ஆதரவுடன் ஷ்ரீலங்கா புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகள் பற்றிய அறிக்கை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் தென்னாபிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கொடுக்கப்பட்டிருந்தது.
ஆயினும் இவ்வாறு புலிகள் இயக்கத்தினருக்கும் தென்னாபிரிக்காவின் தேசிய காங்கிரஸுக்கும் அரசுக்கும் இடையே இருந்த தொடர்புகள் பற்றிய தகவல்களை புலனாய்வு மூலம் அறிந்து அறிக்கை தயாரித்த குறித்த தென்னாபிரிக்க புலனாய்வு சேவை உத்தியோகத்தர்களை பின்னர் தென்னாபிரிக்க அரசு சேவையிலிருந்து நீக்கியது. அந்த அளவுக்கு தென்னாபிரிக்க தேசிய காங்கிரஸுடனும் அரசுடனும் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் 1995 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னிருந்தே நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தது. நிதியுதவி, ஆயுத உதவி மற்றும் வேறு வகையிலும் உதவிகளையும் ஆதரவையும் பெற்று வந்தனர் என்பதையே மேற்படி ஆபிரிக்க அரசின் புலனாய்வு உத்தியோகத்தர்களுக்கு எதிரான நடவடிக்கை தெளிவாக எடுத்துக் காட்டியது.
இவ்வாறான ஆதரவின் தொடர்ச்சியாகவே கடந்த 22 ஆம் திகதிகளில் கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் ஷ்ரீலங்கா இனப்பிரச்சினை சம்பந்தமாக நடந்த சர்வதேச கருத்தரங்கில் தென்னாபிரிக்காவின் மக்கள் தொடர்பாடல் விவகார பிரதி அமைச்சர் ரோய் படையாச்சி உரையாற்றுகையில் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுக்குச் சார்பாக கருத்துகளை வெளியிட்டுள்ளார். இந்த கருத்தரங்கு நிகழ்வை தமிழர்கள் கூடுதலாக அங்கம் வகிக்கும் உலகளாவிய சமாதான ஆதரவு அமைப்பு (Global Peace Support) ஏற்பாடு செய்திருந்தது.
மேலும் இந்த கருத்தரங்கில் புலிகள் இயக்கத்தினருடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருக்கும் அமெரிக்க அரசியல் சமூகப் பிரமுகராகிய கெறன் பார்க்காம் மற்றும் சுவீடன் நாட்டைச் சேர்ந்த பீற்றர் ஷல்க் என்னும் அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டு புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக உரையாற்றினர். இந்த கருத்தரங்கில் பங்குபற்றுவதற்காக லண்டன் சென்ற மேற்படி தென்னாபிரிக்காவின் பிரதி மக்கள் தொடர்பாடல் அமைச்சர் படையாச்சி சர்வதேச ஊடகவியலாளர்களுக்காகத் தெரிவித்த தகவல்களில் ஷ்ரீலங்காவில் வன்முறைகள் உச்சக்கட்டத்தில் இருப்பதாகவும் வன்முறைகள் தொடர்ந்து அதிகரிப்பதை தடுக்க வேண்டுமாயின் இனப்பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பினருமாகிய ஷ்ரீலங்கா அரசும் புலிகள் இயக்கமும் உடனடியாக சமாதானப் பேச்சுகளை ஆரம்பிக்க வேண்டுமெனவும் இவ்வாறு சமாதானப் பேச்சுவார்த்தைக்கும் ஏனைய சமாதான நடவடிக்கைகளுக்கும் எந்த நேரத்திலும் தென்னாபிரிக்க அரசும் அவரும் உதவி வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
படையாச்சி தென்னாபிரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரமுகராகும். இதனாலேயே மேற்படி கிழக்கு லண்டன் பல்கலைக்கழக கருத்தரங்கில் தென்னாபிரிக்க அரசாங்கத்தின் பிரதிநிதியாகப் பங்குபற்றியுள்ளார்.
-திவயின அரசியல் பகுதி 30.03.2008