ஒலிம்பிக் ஜோதி நேற்று முன்தினம் சீனா வந்து சேர்ந்தது. அதற்குப் பலத்த பாதுகாப்புடன் கோலாகல வரவேற்பளிக்கப்பட்டது.
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டி சீனத் தலைநகர் பீஜிங்கில் ஆகஸ்ட் 8 ஆம் திகதி தொடங்குகிறது. இதற்காக ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டு உலகம் முழுவதும் சுற்றிவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒலிம்பிக் போட்டி நடந்த ஏதென்சில் இருந்து ஒலிம்பிக் ஜோதி திங்கட் கிழமை சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்காக கடந்த வாரத்தில் முதலாவது ஒலிம்பிக் போட்டி நடந்த ஒலிம்பியா கிராமத்தில் வைத்து ஒலிம்பிக் ஜோதியை ஏற்றினார்கள். பின்னர் கிரீஸிலிருந்து ஒலிம்பிக் ஜோதி தனி விமானம் மூலம் சீனாவுக்குக் கொண்டு வரப்பட்டது. அது நேற்று முன்தினம் காலை சீனா வந்தடைந்தது.
விமான நிலையத்தில் ஒலிம்பிக் ஜோதிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. மாணவர்கள் உட்பட பல தரப்பினரும் சீனக் கொடி மற்றும் ஒலிம்பிக் கொடியசைத்து ஒலிம்பிக் ஜோதியை வரவேற்றனர்.
ஒலிம்பிக் ஜோதிக்கு முறைப்படியான வரவேற்பு மற்றும் ஜோதி ஓட்டத் தொடக்கவிழா புகழ்பெற்ற தியனன்மென் சதுக்கத்தில் நடந்தது. விழாவில் சீன ஜனாதிபதி ஹூஜின்டோ கலந்து கொண்டு ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தைத் தொடக்கி வைத்தார். ஜோதியை முன்னாள் ஒலிம்பிக் சம்பியன் லு ஜியாங் பெற்றுக் கொண்டு தொடர் ஓட்டத்தில் பங்கேற்றார். ஒலிம்பிக் ஜோதி சீனாவில் நேற்று முன்தினம் வலம் வந்தது.
இந்த விழாவையொட்டி தியனன்மென் சதுக்கம் விழாக்கோலம் பூண்டிருந்தது. அந்தப் பகுதிகளில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததுடன், வாகனப் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி பல்வேறு விதமான கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஒலிம்பிக் ஜோதி நேற்று செவ்வாய்க்கிழமை பீஜிங்கிலிருந்து கஜகஸ்தானுக்குப் புறப்பட்டது. உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்த ஜோதி, பல்வேறு நாடுகளில் 130 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறது. அதாவது 1 இலட்சத்து 37 ஆயிரம் கிலோ மீற்றர் தூரம் பயணிக்கிறது. ஏப்ரல் 17 ஆம் திகதி ஒலிம்பிக் ஜோதி டெல்லி வருகிறது. போட்டி தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன் ஒலிம்பிக் ஜோதி சீனா திரும்புகிறது.
இமயமலைக்கும் இந்த ஜோதி கொண்டு செல்லப்படுகிறது. திபெத்தியர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் ஒலிம்பிக் ஜோதிக்குப் பலத்த பாதுகாப்பளிக்க சீனா முடிவு செய்துள்ளது.