மப்றூக்
எங்களூரில் ஓர் ஆறு இருக்கிறது. இந்த ஆற்றைப் போல் இலங்கையில் எங்கும் இல்லை என்று எங்கள் பெரியப்பா ஒருவர் அடிக்கடி கூறுவார். ஊரின் வயிற்றுப் பகுதியால் வலமிருந்து இடமாகக் கிடையாக ஓடும் இந்த ஆறு, ஊரினது ஆரம்ப எல்லையில் தொடங்கி நிறைவு எல்லையில் முடிவடைகிறது! இப்படி ஊரின் ஆரம்பம், முடிவை தனது எல்லையாகக் கொண்டோடும் ஆறு, இலங்கையில் எங்கும் இல்லை என்பதே பெரியப்பாவின் வாதமாகும்.
ஆற்றுக்கு அப்பால் அல்லது கிழக்குப் பக்கமாக உள்ள நிலப் பிரதேசத்தை அக்கரை என்று அழைப்பார்கள். அக்கரைக்கு அடுத்தாற்போல் கடல் உள்ளது. இதனால் அக்கரைப் பிரதேசத்தில் வாழும் மக்களில் மிக அதிகமானோர் கடற்தொழில் செய்வோராகவும், மீனவர்களாகவுமே இருக்கின்றனர்.
இந்த மீனவர்களின் வாழ்க்கை முறை மீது எனக்கு எப்போதுமே அலாதியானதொரு விருப்பம்! நாளையைப் பற்றி இவர்கள் கவலைப்படுவதேயில்லை. இன்றைய தினத்தை எந்தளவு ரசித்து, சந்தோஷமாக வாழ முடியுமோ அப்படி வாழ்ந்து முடிப்பர். இன்றின் வருமானத்தை அவர்கள், வாயைக் கட்டி - வயிற்றைக் கட்டி நாளைகளுக்காகச் சேமிப்பதேயில்லை!
பெருநாட்களையும் வீட்டு வைபவங்களையும் இவர்கள் கொண்டாடும் விதமே அற்புதமானது. இவர்களின் வீட்டில் இடம்பெறும் திருமணம் மற்றும் விருத்தசேதன (கத்னா) நிகழ்வுகளை இந்த மீனவ மக்கள் ஒரு திருவிழாவைப் போலவே நடத்தி முடிப்பர். அந்த வைபவ நாட்களில் ஆகக்குறைந்தது ஒரு வாரத்திற்காவது இவர்கள் வீட்டில் ஒலிபெருக்கி பாடும். தென்னை மரத்தில் கட்டப்பட்டிருக்கும் ஒலிபெருக்கிகளுக்குள் இருந்து கொண்டு, ரி.எம்.சௌந்தரராஜன் மற்றும் சுசீலா ஆகியோர் பாடும் காதல் பாட்டுக்கள், ஆற்றில் இந்தப்பக்கமாக இருக்கும் எங்கள் வீடுகளுக்கும் காற்றில் கசிந்து வரும்! ரி.எம்.எஸ்.இன் பல பாடல்களை இப்போது கேட்டாலும் 1980 களின் ஞாபகங்கள் எனக்குள் சித்திரமாய் நீளும்!
கடற்றொழில் வருமானம் விசித்திரமானது. சில நாட்களில் பத்தாயிரம் கூட நபரொருவருக்கு கிடைக்கும். சில நாட்களில் பத்து ரூபா கூட கிடைக்காமலும் போகும். கடலுக்குள் போட்ட வலை எதுவுமில்லாமல் வெளியே வந்தால், அதை நம்பியிருந்தவர்களின் வீட்டில் பட்டினி அல்லது அரை வயிறுதான் நிலை! சற்றே விளக்கமாகச் சொன்னால், கடற்றொழில் செய்யும் மீனவர்களைப் போல செல்வத்தையும், வறுமையையும் அதன் தீவிரத் தன்மைகளுடன் மாறி மாறி அனுபவிக்கும் வேறொரு சமூகம் இல்லையென்றுதான் கூற வேண்டும்!
கடலுக்குள் செல்லும் இந்த மீனவர்களின் அன்றைய தொழில் தினம் நிகழ்தகவுகளால் ஆனது! சிலவேளை இவர்கள் கரைக்குத் திரும்பலாம், திரும்பாமலும் போகலாம்! ஆகக்குறைந்த உத்தரவாதம் கூட இல்லாத வாழ்க்கை முறை! கொஞ்சம் காற்று, மழை என்றால், அன்றைய தினம் தொழிலில்லை, வருமானமில்லை, வீட்டில் நல்ல சாப்பாடும் இல்லை!
தமது தொழிலுக்கான முதலீடுகளை இந்த மீனவர்களால் அநேகமாக சொந்தமாய் செய்ய முடிவதில்லை. அதனால், வசதிபடைத்த சிலர் இவர்களுக்கான தோணி, படகு, வலை மற்றும் ஏனைய உபகரணங்களையும் வசதிகளையும் செய்து கொடுக்க... இவர்கள் நாட்கூலிகளாகவே வேலை பார்க்கின்றனர். இதில் சோகத்துக்குரிய சுவாரஸ்யம் என்னவென்றால், முதலீடு மட்டும் செய்துவிட்டு, வீட்டில் `ஹாயா'க அமர்ந்திருக்கும் முதலாளிக்கு செலவு கழித்து கிடைக்கும் வருமானத்தில் ஐந்தில் இரண்டு பங்கு கிடைக்கிறது. ஆழ்கடல் சென்று உப்புக்காற்றில் உழைத்து வரும் தொழிலாளிகள் எல்லோருக்குமாகக் கிடைக்கும் பங்கோ ஐந்தில் மூன்றுதானாம்.
"செலவு கழித்து கிடைக்கும் வருமானம் என்கிறீர்களே, இந்த தொழிலில் நீங்கள் எதற்காக அதிகம் செலவிடுகிறீர்கள்" என்று மீனவர் பாறுக்கிடம் கேட்போம்! "எரிபொருளுக்குத்தான் அதிகம் செலவாகிறது. சாதாரணமாக எங்களுக்கு ஒரு நாளைக்கு 3 ஆயிரம் ரூபா பெறுமதியான மண்ணெண்ணெய் செலவாகிறது. சிலவேளை காற்று, மழையில் சிக்கினால் ஐந்தாயிரம் ரூபா பெறுமதியான எரிபொருளும் தேவைப்படும். ஆனால் பாருங்கள், சிங்களப்பகுதிகளிலுள்ள மீனவர்களுக்கு எரிபொருளுக்கான மானியத்தை அரசாங்கம் வழங்குகிறது.ஆனால், எமது பிரதேசங்களிலுள்ள முஸ்லிம்களுக்கு அப்படியொன்றும் வழங்கப்படுவதில்லை" என்று கவலையோடு கூறினார் அவர்! பாறூக் அம்பாரை மாவட்ட கரையோரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
பாறூக் பேசி முடிப்பதற்கிடையில் குறுக்கிட்டார் சரீப்தீன். இவர் பாறூக்கின் சக தொழிலாளி! "முஸ்லிம் பகுதிகளில் அறவே மானியம் கொடுக்காமலில்லை. சில பகுதிகளில், கொஞ்சப்பேர் எரிபொருள் மானியத்தை பெறுகிறார்கள்தான். ஆனால், சிங்களப் பகுதிகளோடு ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவானது" என்று தன் நேர்மையை வெளிப்படுத்தினார் சரீப்தீன்.
குறிப்பாக கடல் பிரதேசத்தை அண்டி வாழும் இந்த மீனவத் தொழிலாளிகள் மிக இளவயதிலேயே திருமணம் செய்து கொள்கிறார்கள். சின்ன வயதிலேயே கடல் தொழில் செய்து, அதன் மூலம், பணம் உழைத்துக் கொள்ளும் வாய்ப்புகள் உள்ளதால், கலியாணம் செய்வதற்கோ, குடும்பத்தைக் கொண்டு நடத்துவது பற்றியோ பெரிதாக இவர்கள் அஞ்சுவதுமில்லை. கவலைப்படுவதுமில்லை! 15,16 வயதுடைய ஆண்கள், திருமணம் செய்து இல்லற வாழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை, மிகச்
சாதாரணமாகவே இப்பகுதிகளில் நாம் பார்க்கலாம். ஆண்களுக்கே 15 என்றால் மனைவிமாரின் வயதை சற்றே ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்.
அது மட்டுமன்றி சுயவருமானத்தை சிறிய வயதிலேயே பெற்றுக் கொள்வதால் இவர்களில் பலரிடம் புகைத்தல் குறிப்பாக கஞ்சா போன்ற போதை வஸ்துப் பாவனை இலகுவில் தொற்றிக் கொள்கிறது. கஞ்சாவை இவர்களில் பலர் போதைப்பொருளாக நினைப்பதேயில்லை. அவர்களின் கணக்கில் அது ஒரு மூலிகை. ஆழ்கடலில் படகு ஓட்டி வலை விரித்து , இழுத்து சவள் வலித்து.......என்று கடுமையான வேலைகளில் ஈடுபடும் இவர்கள் உடல் வலி மற்றும் களைப்பிலிருந்து விடுபடுவதற்காகவே இந்த மூலிகையை (கஞ்சா) பயன்படுத்துகிறார்களாம்.
நாம் கடற்கரைக்குச் சென்றிருந்த சமயம் கவிழ்த்துப் போடப்பட்டிருந்த இயந்திரப் படகொன்றை சிலர் நிமிர்த்திக் கொண்டிருந்தனர். அவர்களின் வேலை முடியும் வரை பார்த்துக் கொண்டிருந்தோம். "என்ன நடந்தது படகுக்கு" என்று கேட்டார். கூட வந்திருந்த ஊடக நண்பர் அறூஸ். கடல்கோளுக்குப் பிறகு சத்தமில்லாமல் தப்பிய படகுதான் இது. ஆனால், ஏனோ தெரியவில்லை அவ்வாறு தப்பிய படகுகளும், தோணிகளும் இப்போது உடைய ஆரம்பிக்கின்றன. அவ்வாறு உடைந்ததுதான் இந்தப் படகும். அதைத்தான் ஒட்டித் திருத்தி எடுத்திருக்கிறோம் என்று விளக்கமளித்தார் மீனவ நண்பர் ஒருவர்! பக்கத்தில் நின்றிருந்த மற்றைய மீனவ நண்பரும் இது தொடர்பாக அவர் பங்குக்கும் விடயங்களைப் பகிர்ந்து கொண்டார். "சில நாட்களுக்கு முன்னர் ஆழ்கடலுக்கு சென்றிருந்தோம். திடீரென எங்கள் தோணியில் வெடிப்பு விழுந்தது. என்ன செய்வதென்றே ஒரு கணம் புரியவில்லை. பிறகு உடைய ஆரம்பித்த தோணியை ஒருவாறு கரைசேர்த்தோம். ஆண்டவன்தான் எங்களைக் காப்பாற்றினார்" என்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கூறினார் அவர்!
இதேவேளை, சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கென தொண்டு நிறுவனங்கள், படகு மற்றும் தோணிகளை இப்பகுதிகளில் வழங்கியிருப்பதை அவதானிக்க முடிந்தது! ஆனாலும், அவைகளில் குறிப்பிடத்தக்க அளவு உரியவர்களைச் சென்றடையவில்லை என்றும் அவைகளை வழங்குவதில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் இப்பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களில் பலர் நம்மிடம் குறைபட்டுக் கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது! விசாரித்துப் பார்த்தபோது, அவ்வாறான குற்றச்சாட்டுகளில் நிறையவே உண்மைகள் இருந்தன!
தொழிலில்லாத நாட்களில் அல்லது மீன் கிடைக்காத நாட்களில் எப்படிச் சமாளிப்பீர்கள் என்று எமது சந்தேகத்தைக் கோட்போம். "மழை, கடும் காற்று என்று காலநிலை சாதகமில்லாத நாட்களில் கடலுக்குப் போவதை முடிந்தவரை தவிர்த்துக் கொள்வோம். அவ்வாறான நாட்களில் வருமானம் இல்லை. ஆனால்,ஒரு சில முதலாளிமார்கள் மட்டும், அவர்களின் படகு, தோணிகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பணம் வழங்கி உதவி செய்வார்கள். ஆனால், மிகக் குறைவான முதலாளிகளுக்கே இந்த நல்ல மனசு இருக்கிறது. மீன் கிடைக்காமல் வெறுங்கையுடன் திரும்பும் நாட்கள் எமக்கு நஷ்டமானவை. காரணம், எரிபொருள் செலவுகளை ஒப்பேற்றுவதற்குக் கூட, எமக்கு வருமானமிராது. இந்த நஷ்டத்தை முதலாளி பொறுப்பேற்கமாட்டார். அடுத்த நாட்களில் வருமானம் கிடைக்கும் போது, இந்த செலவை நாங்கள் முதலாளிக்கு வழங்கிவிட வேண்டும்" என்று அவர்களின் தொழிலிலுள்ள கஷ்ட,நஷ்டங்கள் குறித்து பேசினார்கள் அவர்கள்!
இந்தப் பகுதி கடல் தொழிலாளர்களின் தேவையாக அரசாங்கத்திடம் அல்லது உங்கள் வாக்குளைப் பெற்று அமைச்சர்களாகிப் போனவர்களிடம் எதையாவது கேட்பதென்றால், எது கேட்பீர்கள் என்று, சற்று வயதில் இளையவராகத் தெரிந்த ஒருவரிடம் விசாரித்தோம். அவர் சற்றும் தாமதிக்காமல் கூறினார்; "எங்களுக்கு ஒரு இழுவைத் துறை முகம் தேவை. கடலிலுள்ள படகு மற்றும் தோணிகளை இயந்திரம் மூலம் கரைக்கு இழுக்கும் வசதியுள்ள ஒரு மீனவ இழுவைத் துறைமுகம் தேவை"!
இப்படிப் போராட்டமே வாழ்க்கையாகிப் போன மீனவர்கள், தங்கள் வலை மற்றும் உபகரணங்களை பாதுகாப்பாக வைப்பதற்குரிய வாடி வசதிகளை இப்பகுதிகளில் நம்மால் காண முடியவில்லை! கிடுகு ஓலைகளால் கட்டப்பட்ட, மிகச்சிறிய வாடிகளே இப்பகுதிகளில் மிக அதிகமாகத் தெரிந்தன. கடந்த காலங்களில் இவ்வாறான ஓலை வாடிகள் பல தீப்பிடித்து எரிந்ததும், மீனவர்கள் தமது தொழில் உபகரணங்களை இழந்து தவித்ததும் சோகமான பதிவுகள்!
"மூன்று நாட்களுக்கு முன்பு ஆழ்கடலுக்குச் சென்ற நாங்கள், கடும் காற்று வீசியதால் வழி தப்பிப் போனோம் தெரியுமா" என்றார் ஆரம்பத்தில் நம்முடன் பேசிய பாறூக்! அவரை நாம் ஆச்சரியத்துடன் பார்த்தோம். "அப்படியா? பிறகென்ன ஆனது?" கவலை கலந்த ஆர்வத்துடன் வினவினோம். "ஒரு நாள் முழுக்க, நடுக்கடலிலேயே கிடந்தோம். அடுத்த நாள், எங்களைத் தேடி ஒரு படகில் ஆட்கள் வந்தார்கள். அதன் பிறகுதான் கரைக்கு வர முடிந்தது" என்று அந்தத் திகில் அனுபவத்தை மிகச் சாதாரணமாகச் சொல்லி முடித்தார் பாறூக்.
பாறூக்கும் அவர் நண்பர்களும் கரை திரும்பியது சந்தோஷமான செய்திதான்!ஆனால், சிலவேளை இவ்வாறு வழி தப்பும் படகுகள் கரை திரும்பாமல் கூட போவதுண்டு!
அவ்வாறான நிகழ்வுகள் அந்தப் பிரதேசத்தவர்களுக்கு சோகமாக இருக்கும். ஊடகங்களுக்கு வெறும் செய்தியாகிப் போகும். ஆனால், திரும்பாமலே போனவர்களின் குடும்பத்துக்கு?
கடற்றொழிலாளர்களின் வாழ்க்கை - சந்தோஷங்களால் நிரம்பிய துயரம் எனலாம். அல்லது,துயரங்களால் நிரம்பிய சந்தோஷம் எனலாம்! உவர்ப்புகளாலான அவர்களின் வாழ்க்கையை படிக்கப் படிக்க, நமது கண்களுக்குள்ளும் கரிக்கும் உப்பு!
கடற்றொழிலாளர்களின் பிள்ளைகள் இப்போதெல்லாம் கல்வியிலும் நாட்டம் கொள்ள ஆரம்பித்துள்ளதால், இவர்களின் வாழ்க்கை முறையானது, கொஞ்சம் கொஞ்சமாக நல்ல முன்னேற்றங்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளமையும் இங்கு குறித்துச் சொல்லத்தக்கது.