*மன்னார் ஆலய வண பிதா தெரிவிப்பு
வடக்கு- தெற்குப் பகுதி மக்களிடையே தொடர்பினை ஏற்படுத்தி அதன் ஊடக பரஸ்பர உறவுகளை கட்டியெழுப்புவதன் மூலமே சமாதான பாதையை நோக்கிச் செல்ல முடியுமென மன்னார் ஆலய வண பிதா விக்டர் சோசை தெரிவித்துள்ளார்.
தென் பகுதியிலிருந்து மன்னாரின் நிலை குறித்த உண்மை நிலையினை அறிந்து கொள்ளும் வகையில் அங்கு விஜயம் செய்த நல்லிணக்கக் குழுவினருடனான சந்திப்பிலேயே மன்னார் ஆலய தந்தை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இங்கு விஜயத்தை மேற்கொண்டதன் மூலம் இப்பகுதி மக்கள் படும் கஷ்டங்களை நேரடியாகக் கண்டு கொண்டீர்கள், இதனை தென்பகுதி மக்களிடம் எடுத்துக் கூறவேண்டும்.
குறிப்பாக, இன்று வடக்கும் தெற்கிற்குமிடையில் போக்குவரத்துத் தடை காரணமாக இரு பகுதி மக்களிடம் புரிந்துணர்வு குறைவடைந்து செல்கின்றது. எனவே, இரு பகுதி மக்களுக்கும் சுதந்திரமாகப் போக்குவரத்துகளை மேற்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்தி அவர்களுக்கிடையில் உறவுப் பாலம் அமைத்து இன ரீதியான ஒற்றுமையை ஏற்படுத்த முடியும்.
இந்த பரஸ்பர உறவை கட்டியெழுப்புவதன் மூலமே நாட்டில் சமாதானத்தை எட்டுவதற்கான பாதை நோக்கி நகர முடியுமென தெரிவித்தாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதையடுத்து அவர்கள் இப்பகுதி மக்கள் படும் இன்னல்களைத் தென்பகுதி மக்களுக்கு எடுத்துரைப்பதாக உறுதியளித்ததுடன், மன்னாரிலுள்ள அகதிமுகாம், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், வர்த்தகர்கள், மீனவர் சங்க பிரதிநிதிகள், அரச அதிபர் உட்பட சமயத் தலைவர்களுடன் சந்திப்புகளை மேற்கொண்டும் எதிர் நோக்கும் பிரச்சினையைக் கேட்டறிந்தனர்.