ரொஷான் நாகலிங்கம்
மட்டக்களப்பு மாவட்ட வாக்காளர் அட்டைகள் நாளை முதல் தபாலகங்கள் ஊடாக விநியோகிக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு உதவித் தேர்தல் ஆணையாளர் சி. கிருஷ்ணானந்தலிங்கம் தெரிவித்ததுடன் இம்முறை 600க்கு மேற்பட்ட வாக்களிப்புப் பெட்டிகள் தேவையான நிலையில் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் மட்டக்களப்பு மாவட்ட நிலைமை தொடர்பாக கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
"மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா, பட்டிருப்பு, மட்டக்களப்பென மூன்று தேர்தல்த் தொகுதிகள் உள்ளன. கல்குடா தொகுதியில் 94,359 பேரும், பட்டிருப்பு மற்றும் மட்டக்களப்பு தொகுதிகளில் முறையே 81,830, 154,961 பேரென மொத்தமாக 330,950 பேர் வாக்களிக்கத் தகுதிப் பெற்றுள்ளனர்.
இவர்களுக்கான வாக்காளர் அட்டைகள் நாளை திங்கட்கிழமை முதல் 40 உப தபாலகங்கள் ஊடக விநியோகிக்கப்படவுள்ளது. இவ்விநியோகங்கள் யாவும் மே 2 ஆம் திகதி நிறைவுபெறவுள்ள நிலையில் வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள் 2 முதல் 10 ஆம் திகதி மாலை 4 மணிக்கு முன்னர் தமது பகுதியிலுள்ள தபாலகங்களுக்குச் சென்று தமது அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டைகளைப் பெற முடியும்.
மட்டக்களப்பு தொகுதியில் 362 வாக்களிப்பு நிலையங்கள் உள்ள போதிலும் எமக்கு 600க்கு மேற்பட்ட வாக்குப் பெட்டிகள் தேவையாகவுள்ளன. இதற்கான நடவடிக்கைகளை மாவட்டத் திணைக்களம் எடுத்துள்ளது. 28,29 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள தபால் மூலம் வாக்களிப்பில் பணியாற்றவுள்ள ஊழியர்களுக்கு எதிர்வரும் 22 ஆம் திகதி பயிற்சிப் பட்டறையொன்று நடத்தப்படவுள்ளது. இதன் போது பாதுகாப்புப் படையினரின் உயர் அதிகாரிகளும் பங்கு பற்றவுள்ளனர்.
இதேவேளை, வாக்குச் சீட்டுகள் இன்று வந்தடையுமென எதிர்ப்பார்க்கப்படுகின்ற நிலையில் இதனைப் பாதுகாப்பதற்கு படையினரின் உதவியைக் கோரியுள்ளோம். இத் தேர்தலை நடத்துவதற்கு மொத்தமாக 5,400 ஊழியர்கள் தேவையாகவுள்ள நிலையில் இவர்களைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கையை தான் முன்னெடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.