*அனைவர் மீதும் வழக்குத் தொடர வாய்ப்பு
வேலூர்: வேலூரில் நளினியை பிரியங்கா சந்தித்த இடம் தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இந்த சர்ச்சை உண்மையென நிரூபிக்கப்படுமானால் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்ய முடியும் எனக் கூறப்படுகிறது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் பெண்கள் சிறையில் உளளார் நளினி. இவரைக் கடந்த 19 ஆம் திகதி ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா சந்தித்தார். இச்சந்திப்புக் குறித்து இரு வாரங்களுக்குப் பின் செய்தி வெளியானது. பிரியங்காவும் சந்திப்பை ஒப்புக்கொண்டார்.
ஆனால், இருவரும் எங்கே எப்போது சந்தித்தார்கள்? சிறை விதிமுறைகளை மீறி நளினியைச் சந்தித்தாரா பிரியங்கா என்ற கேள்விகள் இப்போது எழுந்துள்ளன.
நளினியை பிரியங்கா சுமார் 19 நிமிடங்கள் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்புக் குறித்த விபரம் நளினியின் வழக்கறிஞர்கள் மூலம்தான் வெளியாகி உள்ளதே தவிர, என்ன பேசினோம் என்ற விபரம் பிரியங்கா தரப்பிலிருந்து இதுவரை வெளியிடப்படவில்லை. வேலூரில் நளினியை பிரியங்கா சந்தித்த இடம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. வேலூர் பெண்கள் சிறை அருகே உள்ள `கிகா' எனப்படும் மண்டல சிறை சீரமைப்புப் பயிற்சிக் கல்லூரி விருந்தினர் மாளிகையில் நளினியை பிரியங்கா சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
ஆந்திரம், தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகிய தென்மாநிலங்களுக்கான சிறை அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிப்பதற்கான நிலையம் இதுவாகும். 1979 இல் மத்திய அரசால் இந்த மையம் திறக்கப்பட்டது. உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழகத்தில் மட்டுமே இத்தகைய பயிற்சி மையம் உள்ளது. சிறைத்துறை அதிகாரிகள், அலுவலர்களுக்கு இங்கு குறுகிய காலப் பயிற்சி அளிக்ப்படுகிறது. குளிரூட்டி வசதிகளுடன் 7 அறைகள் கொண்ட விருந்தினர் மாளிகை இம்மையத்தில் உள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் முக்கிய சிறை அதிகாரிகள் இங்கு தங்குவது வழக்கம்.
இந்த விருந்தினர் மாளிகை கடந்த 19 ஆம் திகதி மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டுள்ளது.
ஏராளமான கார்கள் வந்துள்ளன. பொலிஸ் அதிகாரிகள் குவிந்துள்ளனர்.
இந்தப் பயிற்சி மையத்தின் உயரதிகாரி ஒருவரிடம் இது குறித்துக் கேட்டபோது, சந்திப்பு நடந்ததாகக் கூறப்படும் திகதியில் தாம் விடுமுறையில் இருந்ததாகப் பதில் அளித்தார். தண்டனை பெற்ற கைதி ஒருவரை நீதிபதியின் அனுமதியின்றி சிறைக்கு வெளியே ஒரு பொது இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தல், பேசுதல் சட்டவிரோதமானது. எனவே, இச்செயலுக்காக பிரியங்கா, நளினி மற்றும் சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, வேலூர் மத்திய சிறையில் நளினியின் கணவர் முருகன் அடைக்கப்பட்டுள்ளார். ராஜீவ் கொலை வழக்கில் அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை முருகனை வார இதழ் ஒன்றின் நிருபர் சந்தித்தாராம். அவர் வேறு பெயரில் முருகனைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேநேரம், வேலூர் அருகே பிரம்மபுரத்தில் நளினியின் குடும்பத்தினர் சொந்தமாக வீடு வாங்கியுள்ளனர். இலங்கையைச் சேர்ந்த முருகனின் பெற்றோர், வேலூர் வரும்போதெல்லாம் இங்கு தங்குவது வழக்கம்.
நளினியின் தாயார் தாதி பத்மாவும் தம்பி பாக்கியநாதனும் சென்னையில் உள்ளனர். வெளிநாட்டில் பயிலும் நளினியின் பெண், விடுமுறையில் சென்னை வரவுள்ளதாகவும் அப்போது வேலூர் சிறையில் உள்ள தாயாரைச் சந்திக்கக் கூடும் என்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.