* தேர்தல் மூலம் வெளிப்படுத்துமாறு ஹக்கீம் அழைப்பு
கிழக்கில் அரசு அமுல்படுத்த நினைக்கும் மேலாதிக்க திணிப்பை மாகாண சபைத் தேர்தலுடன் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இல்லாவிடில் மிகவும் ஆபத்தான நிலைமைக்கு முகம் கொடுக்கவேண்டியிருக்கும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எச்சரித்திருக்கிறார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மாகாண ஊழியர் தொழிற்சங்கங்கள் இரண்டினது பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது;
"ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை உடைத்துச் சின்னாபின்னப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. மாகாண சபைத் தேர்தலுக்குப் பின் இதை இன்னும் தீவிரமாகச் செயற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது. எனவே, இத்தேர்தலில் அரசாங்கத்துக்கு அதிகூடிய சவால்களுடன் முகம்கொடுக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாகவே எமது பாராளுமன்ற ஆசனங்களைத் துறந்து இத்தேர்தலில் நாம் மூவரும் களத்தில் இறங்கியுள்ளோம். இந்தச் செயல் பலருக்கு ஆச்சரியத்துக்குரிய விடயமாக இருந்தாலும் இது கட்சிக்கு உற்சாகத்தையும் வெற்றிக்கான சரியான வியூகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது என்றே சகலரும் உடன்படுகின்றனர். பசீர் சேகுதாவூத்தும் ஹசனலியும் இவ்விடயத்தை மிகவும் தெளிவாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் .
அடுத்து வரவிருக்கும் பொதுத் தேர்தலை விட இந்தத் தேர்தலை நாம் பெரிய தேர்தலாக கருதிச் செயற்படவேண்டியிருக்கிறது. இத்தேர்தலோடு மு.கா. அரசின் அராஜகத்தையும் அது கிழக்கில் அமுல்படுத்த நினைக்கின்ற மேலாதிக்க திணிப்பையும் முடிவுக்குக் கொண்டுவராவிட்டால் மிகவும் ஆபத்தான நிலைமைக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும். அடுத்த கட்டமாக இந்தக் கட்சியை அழித்தொழிப்பதற்கு மிக மோசமான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் தயாராகியிருக்கிறது.
கட்சியின் மரச்சின்னம் தொடர்பாக கட்சித் தலைமைத்துவத்துக்கு நான் வந்த பிறகு இதனைக் காப்பாற்றுவதற்கு மட்டுமே நான் 30 வழக்குகளுக்கு மேல் பேசியிருக்கிறேன். பல தடவைகள் கட்சிச் சின்னத்துக்கு பாரிய அச்சுறுத்தல்கள் வந்தபோதும் கட்சியும் அதன் சின்னமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக அதற்கெல்லாம் முகம் கொடுத்து வெற்றியும் கண்டிருக்கிறோம்.
இப்போது நடக்கும் மாகாண சபைத் தேர்தலில் போனஸ் ஆசனங்கள் மாவட்டங்கள் அடிப்படையில் அன்றி மாகாணங்களுக்கே கொடுக்கப்படுகிறது. இந்த 2 போனஸ் ஆசனங்கள் கூடுதலான வாக்குகளை மாகாணத்தில் பெறும் ஒரு கட்சிக்கே வழங்கப்படும். ஆட்சி அமைக்கும் வாய்ப்பும் முழு மாகாணத்திலும் ஒரே கட்சி ஒரே சின்னத்தில் அதிக வாக்குகளை பெற்றிருந்தால் மட்டுமே வழங்கப்படும். எனவே, அமைக்கும் வியூகங்களும் முன்னைய வியூகங்களை விட வித்தியாசமாகவே அமைய வேண்டியிருந்தது.
அரசாங்கம் பிள்ளையான் குழுவை வைத்துக்கொண்டு எமது கட்சிக்கு அநியாயங்களை கட்டம் கட்டமாக செய்து வந்து கட்சியை அழிக்க திட்டமிட்டிருக்கும் நிலையில்தான் பதவிகளையும் பாராளுமன்ற ஆசனங்களையும் துறந்தோம். இத்தகைய உணர்வுபூர்வமான முடிவை எடுத்து நாம் வகுத்திருக்கும் தற்போதைய தேர்தல் வியூகத்தை கிழக்கின் மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த முஸ்லிம்கள் நன்கு புரிந்துகொண்டு இப்போது ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
இத்தேர்தலில் நாம் தனித்துப் போட்டியிட்டிருந்தால் தேர்தலின் தீர்மானிக்கும் சக்தி யார் என்ற கேள்வியே அரசுக்கு ஏற்பட்டிருக்காது. ஏனெனில், இலகுவாக அரசாங்கம் வென்றிருக்கும். ஐ.தே.க.வும் ஆகக்கூடியது மூன்று ஆசனங்களுடன் முடங்கிப்போயிருக்கும். ஐ.தே.க.வுடன் இணைந்து போட்டியிடுகின்றபோது முஸ்லிம் காங்கிரஸுக்கு ஓரிரு ஆசனங்களை கூட்டிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. சேர்ந்து போட்டியிடுகின்ற போதுதான் வெற்றிக் கம்பத்தை எட்டலாம் என்ற விடயத்தை அரசாங்கமே தெளிவாக உணர்ந்திருக்கிறது. ஐ.தே.க.- முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு பெரிய சவாலாகிவிடும் என்று அரசாங்கம் உணர்ந்திருந்ததால்தான் ஆரம்பத்தில் இருந்தே இத்தகைய ஒரு கூட்டு உருவாவதை தடுப்பதற்கு அரசாங்கமே பல கொந்தராத்துக்களை பலருக்கு கொடுத்து செயற்படுத்த முயற்சித்தது.
இந்த நிலையில் இன்று ஜனாதிபதியின் சுகோதரர் ஜனாதிபதி பாதுகாப்புப் படைப் பிரிவினரோடு திருகோணமலையில் முகாமிட்டிருக்கிறார். `வரட்டும் ஹக்கீம் அவருக்கு ஒரு பாடம்படிப்பித்துத் தான் போவது' என்று கடந்த இரண்டு மூன்று நாட்களாக நிற்கிறார். இதற்கெல்லாம் பயந்து ஒளிந்து நிற்கும் பனங்காட்டு நரியல்ல முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் என்பதை அவர் உணர்ந்துகொள்ள வேண்டும். அதேநேரம், 10 அமைச்சர்கள் திருகோணமலையில் முகாமிட்டு தேர்தலில் என்னென்ன தில்லுமுல்லுகளை செய்யலாம் என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏனெனில், அவர்களுக்கு முஸ்லிம்கள் மத்தியில் வெற்றிலைச் சின்னத்தை சந்தைப்படுத்துவது இலகுவான வேலையல்ல. மு.கா. எடுத்த முடிவின் அறிவுபூர்வமான தன்மையை மக்கள் நன்கு அடையாளம் கண்டுகொண்டுள்ளார்கள்.
கணிசமான தமிழர்களுடைய வாக்குகள் சூறையாடப்பட இடமளிக்கப்படுமாக இருந்தால், அதுதான் அரசுக்கு வெற்றிக்கான ஆதாரமாக அமையும் என்பது அரசின் நிலைப்பாடு. அதேநேரம், தன்னிச்சையாக, சுயவிருப்புடன் வாக்களிக்க தமிழர் முன்வருவார்கள் என்றிருந்தால் அவர்கள் நிச்சயமாக வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்பது எங்களுடைய எதிர்பார்ப்பு. எனவே, இந்த விடயத்தில் மு. காங்கிரஸ் மிக நேர்மையாக நடந்துகொள்ளும். இவ்வளவு அடாவடித்தனங்களையும், அட்டூழியங்களையும் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கும் இந்த அரசாங்கத்தின் அராஜகம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்பதும் இத்தேர்தலில் எமக்கு பிரதானமானது.
இணைந்த வடகிழக்கும் தீர்வல்ல; பிரிந்த கிழக்கும் தீர்வல்ல என்பது தான் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடாகும். தீர்வு இவை இரண்டுக்கும் இடையில் தான் இருக்கிறது. அதை அடைவதற்கான ஒரு இடைக்கால சந்தர்ப்பமாகத்தான் இதனை நாங்கள் பயன்படுத்தலாம். முஸ்லிம்களுக்கான தனியலகுச் சுயாட்சி என்ற விடயம் தான் எங்களுக்கான முதலமைச்சருக்கான உத்தரவாதம். பிரிந்த கிழக்கு அல்ல என்பதை இந்தத் தேர்தலில் நாங்கள் பார்க்கப் போகிறோம். முஸ்லிம்களுக்கு முதலமைச்சர் பதவி ஐ.தே.க. கூட்டினால் கிடைக்கலாம் அல்லது சந்தர்ப்ப வசத்தினாலும் கிழக்கில் செயற்படும் ஒரு குழுவின் அட்டூழியத்தால் தமிழர்களுக்கு அது போகலாம்.
இவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால் அது நிரந்தமான, பாரிய விபரீதங்களுக்கு வழிகோலுகின்ற ஒரு விடயமாகத்தான் இருக்கும். எனவே, நாம் பாரிய பொறுப்புணர்வுடன் இவ்விடயங்களை அணுக வேண்டியிருக்கிறது.
இன்று பலரும் அடைய நினைக்கும் இந்த நிர்வாகம் கூட தொடர்ந்தும் சமூகங்களை துருவப்படுத்தும் நிலைக்கு கொண்டு போகும். "இது கிழக்கு மாகாணத்துக்கான தேர்தல் அல்ல. இது வடகிழக்கு பிரிவு சம்பந்தமான ஒரு சர்வஜன வாக்கெடுப்பு" என்று பசில் ராஜபக்ஷ தெரிவித்திருப்பது குறித்து தமிழர்களும் சிந்திக்க வேண்டும். இத்தேர்தலில் போட்டியிடுவது பிரிக்கப்பட்ட கிழக்கை அங்கீகரிக்கும் விடயமாக ஆகிவிடும் எனக் கருதி விலகியிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸுடன் அடிக்கடி கூடி பேச்சு நடத்திவருகிறது. முஸ்லிம் காங்கிரஸை ஒரு நேசசக்தியாக அவர்கள் பார்க்கிறார்கள் என்பதற்கான சமிக்ஞைகள் இதில் தெரிகின்றன.
வடக்கு யுத்தத்தை இந்த வருடத்துடன் முடித்துவிடலாம் என்று நினைத்திருந்த அரசாங்கம் அதை அடுத்த வருடத்துக்கு பிற்போட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிகள் நாட்டில் தொடர்ந்தும் கூடிக்கொண்டே போகிறது. மிக விரைவில் படுமோசமாக இந்த நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்துக்கு போகிற ஒரு நிலைமை உருவாகி வருகிறது.
விலைவாசி உயர்வு ஒரு புறம், எந்தவிதத்திலும் அரசினால் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறது. பணவீக்கம் கட்டுக்கடங்காமல் போகிறது. திறைசேரியில் எதற்கும் பணம் இல்லை. கிழக்கு அபிவிருத்தி என்று பெரிதாக கூறித்திரிந்தாலும் வெளிநாடுகள் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மிக இறுக்கமான நிபந்தனைகளை விதித்து இருக்கின்றன. இந்த நிபந்தனைகளை வெளிநாடுகள் வழங்கும் நிதி உதவிகளுடன் தொடர்புபடுத்தியிருக்கும் நிலையில் நிதி உதவிகள் வராமல் இன்று தடைப்பட்டு நிற்கின்றன. பல நாடுகளினால் ஏற்கனவே வாக்குறுதி அளிக்கப்பட்ட நிதி உதவிகளும் கடந்த வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்களும் கூட இன்று வரமுடியாத நிலையில் உள்ளன. எனவே, திறைசேரி இப்போது பெரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. இவையெல்லாவற்றையும் நிவர்த்திக்கும் மாய மந்திரமாகவே இந்தக் கிழக்குத் தேர்தலை அரசாங்கம் பார்க்கிறது".