* நெருக்கடியில் தவிக்கும் மக்கள்
வடபகுதியில் இரவுநேர விமானத் தாக்குதல்கள் உட்பட உக்கிரமான போருக்கு தமிழ்மக்கள் முகம்கொடுத்துவரும் மோசமான நிலைமையில் தென்னிலங்கையில் அத்தியாவசிய உணவான அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதுடன் முன்னொரு போதுமில்லாத வகையில் அதிகரித்துச் செல்லும் பணவீக்கத்தையும் எதிர்கொள்ளவேண்டிய அவலநிலை மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் பிரகாரம் பணவீக்கம் தற்போது 24 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மீளமைக்கப்பட்ட நுகர்வோர் விலைச் சுட்டெண்ணானது பணவீக்கத்தை 21.6 சதவீதமென மதிப்பிட்டிருக்கின்ற போதும் இரு கணிப்பீடுகளுமே பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது பணவீக்கம் மிக உயர்வாக இருப்பதையே சுட்டிக்காட்டுகின்றன. பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளில் பணவீக்கம் 5% - 7% மாகவே காணப்படுகின்றது.
அரிசி வகைகளின் விலைகள் இந்த வருடம் 68 சதவீதமாக அதிகரித்துள்ளன. உதாரணமாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியானது கிலோ 40 ரூபாவிலிருந்து சில வாரங்களில் 85 ரூபாவாக உயர்ந்துவிட்டது.
காலநிலை பாதி ப்பு, புத்திசாலித்தனமற்ற இறக்குமதி கொள்கைகள், உலக சந்தையில் விலை அதிகரிப்பு என்பனவற்றால் அரிசி விலை மேலும் அதிகரிக்கும் அபாய நிலைமை ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு உரிய காலத்தில் இந்தியாவிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வது புத்திசாதுரியமான விடயமென வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்தன. வெளிநாட்டு விநியோகஸ்தர்களிடம் அரசாங்கம் பதிவுகளை மேற்கொள்வது சிறந்ததென அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
அண்மைய காலங்களில் அரசாங்கம் தனியார் வர்த்தகத்துறையில் தலையீடுகளை மேற்கொண்டுள்ளதால் பொருளாதாரம் மற்றும் சமூக நலன்புரி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அரசின் புதிய கட்டுப்பாட்டு விலை அறிவிப்புக்கு ஆட்சேபனை தெரிவித்து கடந்த வியாழக்கிழமை கொழும்பு மொத்த விற்பனைச் சந்தை மூடப்பட்டது.
இலங்கையில் வீட்டுச் செலவினத்தில் 80 சதவீதத்தை உணவுப் பொருட்களுக்கான கொள்வனவு உள்ளடக்கிவிடுவதால் அவற்றின் விலை அதிகரிப்பால் மக்கள் பெரும் துன்பத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.
சராசரியாக குடும்பமொன்று தனது மாதாந்த செலவினத்தில் 4 ஆயிரம் ரூபாவை அரிசிக்காக மட்டும் செலவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இது தாங்கிக்கொள்ளமுடியாத சுமையாகும். வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்கள் தமது வயிற்றை இறுகக் கட்டிக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இது ஏற்கனவே போஷாக்கின்றி வாழும் மக்களின் நிலைமையை மேலும் மோசமாக்கிவிடும்.
தொகை மதிப்பீட்டு, புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அறிக்கையின் பிரகாரம் இலங்கையின் மொத்த சனத்தொகையான 2 கோடியில் 1 கோடிப் பேர் தினமும் ஆகக் குறைந்த அளவான 2,030 கலோரிகளையே உள்ளெடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது. உண்மையில் வறியவர்கள் 1696 கலோரி உணவையே உட்கொள்கின்றனர். ஏனையோர் 2194 கலோரிகளை உள்ளீர்க்கின்றனர்.
இலங்கையின் ஆள்வீத வருமானம் 1599 டொலர்கள் என்று அரசாங்கம் பெருமையாக கூறுகிறது. ஆனால், யுனிசெப் அறிக்கையின் பிரகாரம் 5 வயதுக்கு குறைவான 14 சதவீதமான குழந்தைகள் போஷாக்கின்றி இருப்பதாகவும் 29 சதவீதமான குழந்தைகள் எடை குறைவானவர்களாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.