ஏ.தேவராஜா
வடபகுதியில் மிகப் பெரிய கிரிக்கெட் போட்டியாகக் கருதப்படும், யாழ்.மத்திய கல்லூரி, சென்.ஜோன்ஸ் கல்லூரிகளுக்கிடையிலான 102 வது வருடாந்தக் கிரிக்கெட் போட்டியில் யாழ்.மத்திய கல்லூரி இனிங்ஸால் வெற்றிபெற்றுள்ளது.
யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான 3 நாள் கிரிக்கெட் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய சென்.ஜோன்ஸ் கல்லூரி, யாழ்.மத்திய கல்லூரி வீரர்களின் சிறந்த பந்துவீச்சுக்கு முகம் கொடுக்க முடியாது 64 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பந்து வீச்சில் நவநீத் 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், கோபிகன் , செல்ரன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
மத்திய கல்லூரி அணி 1 ஆவது இனிங்ஸில் 8 விக்கெட்டுகள் நஷ்டத்துக்கு 301 ஓட்டங்களைப் பெற்றதும் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. துடுப்பாட்டத்தில் நவநீத் 73 ஓட்டங்களைப் பெற்றார். சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி 2 ஆவது இனிங்ஸில் 104 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அணித்தலைவர் ஹரிபிரவீன் இறுதிவரை ஆட்டமிழக்காது 53 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்து வீச்சில் கோபிகன் 4 விக்கெட்டுகளையும், செல்ரன் 3 விக்கெட்டுகளையும், நவநீத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.
இப்போட்டியின் ஆட்டநாயகனுக்கான பரிசும், சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான பரிசும் மத்திய கல்லூரி அணி வீரர் நவநீத்துக்கு வழங்கப்பட்டது. கடந்த வருடமும் இவ்விரு பரிசுகளும் நவநீத்துக்கு வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
சிறந்த பந்து வீச்சாளருக்கான பரிசும் மத்திய கல்லூரி அணி வீரர் கோபிகனுக்கு வழங்கப்பட்டது.
யாழ்.மத்திய கல்லூரி அணி வீரர்களான, செல்ரனுக்கு சகலதுறை வீரருக்கான பரிசும், சிறந்த பந்துத் தடுப்பாளருக்கான பரிசு பிரியதர்சனுக்கும் வழங்கப்பட்டது.
3 நாட்களைக் கொண்ட இப் போட்டி இம்முறை ஒன்றரை நாளில் முடிவடைந்ததும் குறிப்பிடத்தக்கது.