|
கலைஞன்
பிரியங்காவின் வருகையின் நோக்கம் சிறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டதும் உடனடியாகவே முதல் மாடியிலுள்ள சிறைத்துறை கண்காணிப்பு அதிகாரியின் அலுவலகத்துக்கு நளினி கொண்டுவரப்பட்டார். நளினிக்கும் அப்போது தான் எதற்காக அவசர அவசரமாக அழைத்து வரப்படுகிறேன் என்பது தெரியாமலே இருந்தது. ஆனால், அங்கு பிரியங்காவைக் கண்டதும் நளினி அதிர்ச்சி அடைந்தார். பிரியங்கா தன்னை சந்திக்க விரும்புவது நளினிக்கு தெரிவித்திருந்த போதும் அது இவ்வளவு விரைவில் நடக்குமென நளினி எதிர்பார்த்திருக்கவில்லை.
நளினி அங்கு வந்ததும் அவரை சிறிய புன்முறுவலுடன் பார்த்த பிரியங்கா, தான் நளினியுடன் தனியாகப் பேச வேண்டும் எனக் கூறினார். இதையடுத்து சிறைக் கண்காணிப்பு அதிகாரி உட்பட அனைவருமே அங்கிருந்து வெளியேறினர். அந்த அறையினுள் பிரியங்காவும் நளினியும் மட்டுமே அமர்ந்திருந்தனர். சிறிதுநேரம் இருவரும் எதுவும் பேசாது ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருந்தனர்.
விடுதலைப் புலிகளா கொலை செய்தார்கள்?
சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த நளினியை தனக்கு பக்கத்தில் அழைத்து அமர வைத்தார் பிரியங்கா. அவர் நளினியுடன் உரையாட முற்பட்டபோது, தந்தையின் நினைவு வந்ததால் துக்கத்தை அடக்கமுடியாமல் கண்ணீர் விட்டழுதார். உடனே அருகிலிருந்த நளினியும் அழுதுவிட்டார். பின்னர் பிரியங்கா தன்னைத் தேற்றிக்கொண்டு, நளினியின் கையை ஆறுதலாகப் பற்றியபடி பேசத் தொடங்கினார். இருவருமே உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டனர்.
தனது தாயார் சோனியா காந்திக்கு நளினி அனுப்பிய கடிதங்களையும் சோனியா காந்தி சுகவீனமுற்றிருந்த போது நளினி அனுப்பிய தந்தியையும் பிரியங்கா நினைவுகூர்ந்தார். `உன்னைப் பார்க்கச் சொல்லி யாரும் என்னை அனுப்பவில்லை. சொந்த விருப்பத்திலேயே உன்னைப் பார்க்க வந்தேன்' என்று நளினியிடம் பிரியங்கா கூறினார்.
பின்னர் `எனது அப்பாவை விடுதலைப் புலிகளா கொன்றது?' என நளினியிடம் பிரியங்கா கேட்டார்.
அத்துடன், எனது அப்பாவை கொலை செய்ய யார் யார் உதவினார்கள்? இக் கொலைச் சதியில் ஈடுபட்டது யார்? அப்பாவை கொலை செய்யுமளவுக்கு அவர் செய்த தவறுகள் என்ன? அவரின் இறுதி நிமிடம் எவ்வாறிருந்தது போன்ற கேள்விகளையும் பிரியங்கா கேட்டார்.
இக் கேள்விகளுக்கு பதிலளித்த நளினி, கொலைச் சதித்திட்டம் குறித்து எனக்கு கடைசி நிமிடம் வரை எதுவும் தெரியாது. நான் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்றது உண்மை. ஆனால், எதற்காகப் போகிறோம் என்று தெரியாது என்று கூறினார்.
என் தந்தை நல்ல மனிதர் அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தால் இந்தக் கொலையை செய்திருக்க மாட்டீர்கள் என்று பிரியங்கா கூறியபோது நளினி பதில் கூறாது அழுது கொண்டிருந்தார்.
இந்தக் கொலையை திட்டமிட்டது யார் என்று பிரியங்கா கேட்டபோது இதற்கு பதில் தனக்கு தெரியவில்லையென நளினி கூறினார். அதேபோலவே, இந்தக் கொலையை நடத்தியது யார் என்று கேட்டபோது, தனு தான் குண்டை வெடிக்கச் செய்தார். அவருக்கு மட்டும் தான் கொலைக்கான பின்னணி தெரியுமென நளினி கூறினார்.
இந்தக் கொலையில் புலிகளுக்கு தொடர்புண்டா என்ற பிரியங்காவின் கேள்விக்கு அது குறித்து எனக்குத் தெரியாது. ராஜீவை கொல்ல தனுவுக்கு உத்தரவிட்டது யார் என்றும் எனக்குத் தெரியாதென்றார் நளினி.
உங்கள் கணவர் முருகன் புலி உறுப்பினரா என்று பிரியங்கா கேட்க, இல்லை முருகனுக்கு கூட இந்தக் கொலை குறித்த விபரங்கள் தெரியாது. என்னைப் போலவே அவருக்கும் கடைசியில் தான் எல்லாம் தெரிந்தது என்று நளினி கூறினார்.
இவர்கள் எப்படி உங்களிடம் அறிமுகமானார்கள் என்று பிரியங்கா கேட்க, நான் சிறுவயதிலிருந்தே அன்புக்காக ஏங்கினேன். என்னிடம் யார் அன்பாக இருந்தாலும் அவர்களுடன் ஒன்றிவிடுவேன். அவர்களுக்கு உதவுவேன். அந்த வகையில் தான் சிவராசன், முருகன் ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது என்று கூறினார்.
மேலும், தனது குழந்தைகள், படிப்புக் குறித்தெல்லாம் நளினியுடன் பேசிய பிரியங்கா நளினியின் மகள், அவரது கல்வி, தாயார், அவர்களது நிலைமை குறித்தெல்லாம் கேட்டார்.
இருவருக்குமிடையிலான இச்சந்திப்பு 19 நிமிடங்கள் வரை நடைபெற்றது. இதன் பின்னர் பிரியங்கா நளினியிடமிருந்து விடைபெற்றார்.
இச்சந்திப்புக் குறித்து பிரியங்கா கூறுகையில்; மார்ச் 19 ஆம் திகதி நளினியை வேலூர் சிறையில் நான் சந்தித்து பேசியது உண்மை. நான் சந்தித்த வன்முறை மற்றும் இழப்பிலிருந்து வெளிவந்து அமைதிகாண நான் மேற்கொண்ட பாதை இது. நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற எனது தாய் முயற்சி செய்தார்.
கோபம், வெறுப்பு, மற்றும் வன்முறை ஆகியவற்றில் எனக்கு நம்பிக்கையில்லை. எனது வாழ்க்கையில் இந்த விஷயங்கள் மேலோங்க நான் இடமளித்ததில்லை. இந்த சந்திப்பு எனது சொந்த விருப்பத்தின் பேரில், தனிப்பட்ட முறையில் நடந்ததொன்று. இதற்கு மதிப்பளிக்கப்பட்டால் நான் மகிழ்ச்சியடைவேன் என்றார்.
இது குறித்து பிரியங்காவின் சகோதரர் ராகுல்காந்தி கூறுகையில்;
நளினியை சந்திக்க வேண்டுமென்பது பிரியங்காவின் பலநாள் விருப்பம். எனது குடும்பம் வெறுப்பு மற்றும் கோபத்தை சுமந்தது இல்லை. நளினியை பிரியங்கா சந்தித்தமை தொடர்பில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார்.
இதேவேளை, ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், நளினி உள்ளிட்டோருக்கு உயர் நீதிமன்றால், தண்டனைகள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், யார் கொலை செய்தது? ஏன் கொலை செய்யப்பட்டாரென பிரியங்கா கேட்பது பலரை ஆச்சரியப்படவைத்துள்ளது.
இந்தக் கேள்விகளே பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியுள்ளதுடன், தவறான விமர்சனங்கள் ஏற்படவும் காரணமாகிவிட்டது.
இவ்வாறான நிலையில் பிரியங்கா காந்தி - நளினி சந்திப்பு தமிழகத்திலும் இலங்கையிலும் எவ்வகையான பிரதிபலிப்புகளை ஏற்படுத்தப் போகின்றது? இச் சந்திப்பின் மூலம் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஏதாவது மாற்றங்கள் ஏற்படுமா என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை தேடுவது நேரத்தை வீணடிக்கும் செயலாகவே அமையும். |