|
விதுரன்
மன்னாரில் மடுவை நோக்கிய முனையில் மட்டும் கடந்த ஒரு வருடத்தில் ஆறு கி.மீற்றர் தூரம் படையினர் நகர்ந்துள்ளனர். இந்தக் களமுனையில் இதுவொரு இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதியல்ல. அரசியல் நோக்கத்திற்காகவே இந்தக் களமுனையில் பல நூற்றுக் கணக்கான படையினர் மடிந்துள்ளனர். அரசின் தகவல்படி தினமும் இங்கு மூன்று படையினர் உயிரிழப்பதுடன் 25 முதல் 30 படையினர் படுகாயமடைந்த நிலையில் களத்திலிருந்து அப்புறப்படுத்தப்படுகின்றனர். எனினும் உண்மையான இழப்புகள் இதைவிட அதிகமென்றே கூறப்படுகிறது.
வன்னிக்கள முனையில் திறந்தவெளிச் சமர்க்களத்தை கொண்டது மன்னார் களமுனையென்பதால் இங்கு அதிகரித்த படையயினரின் எண்ணிக்கையும் கனரக ஆயுதங்கள் போன்ற பாரிய ஆயுதங்களின் எண்ணிக்கையுமே வெற்றி, தோல்விகளைத் தீர்மானிக்கின்றன. எனினும் இவ்விரு பலமும் புலிகளை விட படையினரிடமே அதிகமிருந்தும் அந்தச் சமர்க்களத்தில் எதிர்பார்த்த வெற்றியை படையினரால் பெற முடியாதிருப்பது அங்கு இடம்பெறும் பாரிய படைநகர்வுகளுக்கு பெரும் பின்னடைவாகவேயுள்ளது.
அதேநேரம், வவுனியா, மணலாறு களமுனை அடர்ந்த காடுகளைக் கொண்டிருப்பதால் இங்கு படையினர் பலத்த சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இந்த மூன்று களமுனைகளிலும் புலிகளின் போராளிகளின் எதிர்த்தாக்குதல்கள் படையினருக்கு பலத்த இழப்புக்களையும் பின்னடைவுகளையும் ஏற்படுத்தும் அதேநேரம், பெரும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகின்றது. அனுபவமுள்ள போராளிகளை விட அனுபவம் குறைந்த போராளிகள் இந்தக் களமுனைகளில் போரிட்டாலும் அவர்கள் பெரும் அனுபவசாலிகளைப் போன்று போரிடுவது படையினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
படையினரைப் போல் கனரக ஆயுதங்களுடனல்லாது சிறிய ரக ஆயுதங்கள் மூலமும் தந்திரோபாயத் தாக்குதல்கள் மற்றும் புதுப்புது உத்திகள் மூலமும் தினமும் அவர்கள் படையினருக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்திவருவதால் வடபகுதி கள முனையில் படையினர் களைப்பும் விரக்தியுமடைந்து வருகின்றனர். |