இரண்டாயிரம் கிலோமீற்றர் தூரத்திலுள்ள இலக்கை தாக்கக்கூடிய அணுஆயுத ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாகச் சோதித்துள்ளது.
பாகிஸ்தான் கடந்த டிசம்பர் மாதம் முதல் பெப்ரவரி மாதம் வரை பல தடவைகள் ஏவுகணை சோதனைகளை நடத்தியது.
இந்நிலையில் நடைபெற்று முடிந்த தேர்தலின் பின்னர் புதிய அரசு பதவியேற்ற பின்னர் முதற்தடவையாக நேற்று முன்தினம் பாகிஸ்தான் ஹகீன்-2 அல்லது ஹட்ப்-6 என்ற இவ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளது.
இது தரையிலிருந்து ஏவப்பட்டால் 2 ஆயிரம் கி.மீ. தூரத்திலுள்ள தரையிலுள்ள மற்றொரு இலக்கை துல்லியமாக குறிபார்த்து தாக்கும் வல்லமையுடையது.
இவ் ஏவுகணையில் அணு ஆயுதங்களையும் ஏனைய வெடி பொருட்களையும் ஏற்றிவைத்து எதிரிகளின் இலக்குகளை தாக்க முடியும்.
இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. சோதனை நடத்தப்பட்ட இடம் பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை. ஆனால், சோதனையை பிரதமர் யூசுப் கிலானி, பாதுகாப்பு அமைச்சர் அகமது முக்தர், கூட்டு இராணுவ சபைத் தலைவர் தாரிக் மஜீத் ஆகியோர் நேரில் பார்த்தனர்.
சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதை தொடர்ந்து இதில் ஈடுபட்ட விஞ்ஞானிகளுக்கும் அதிகாரிகளுக்கும் பிரதமர் கிலானி பாராட்டும் வாழ்த்துகளும் தெரிவித்ததுடன் அவர் மேலும் தெரிவிக்கையில்;
இந்த ஏவுகணை சோதனை, பாகிஸ்தானின் பாதுகாப்பு வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும். எங்களது புதிய அரசு பாகிஸ்தானின் பாதுகாப்பு தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும். நாட்டின் இராணுவ திட்டங்களுக்கு நாடு முழுவதும் ஒருமித்த ஆதரவு நிலவுகிறது. பாதுகாப்பு தேவைக்கு ஏற்ப நாட்டின் இராணுவ திட்டங்கள் பலப்படுத்தப்படும். இருப்பினும், தெற்கு ஆசியாவில் அமைதி நிலவ நாங்கள் உறுதி அளிக்கிறோமெனத் தெரிவித்தார்.
இதேவேளை, ஷகீன்-2 ஏவுகணை சோதனை வெற்றிக்காக, ஜனாதிபதி முஷாரப்பும் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த ஏவுகணை கடந்த 2004 ஆம் ஆண்டு முதல்முறையாக சோதித்து பார்க்கப்பட்டது. இதையடுத்து, நேற்று இரண்டாவது முறையாக சோதித்து பார்க்கப்பட்டது.