* யு.என்.எச்.சி.ஆர். கோரிக்கை
2.4 மில்லியன் ஆப்கானிஸ்தான் அகதிகளை 2009 இற்குள் சொந்த நாட்டிற்குத் திருப்பியனுப்பும் திட்டத்தை பாகிஸ்தான் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருப்பதாக ஐ.நா.வின் அகதிகளுக்கான அமைப்பான யு.என்.எச்.சி.ஆர். தெரிவித்துள்ளது.
இத் திட்டம் சாத்தியமற்றதும் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதுமென பாகிஸ்தானிலுள்ள யு.என்.எச்.சி.ஆரின் பிரதிநிதி கிளைன் கினெஞ்மிட் தெரிவித்துள்ளார்.
அடுத்த வருட முடிவிற்குள் அதிகளவான அகதிகளை ஆப்கானுக்குத் திருப்பியனுப்ப முடியுமெனத் தான் தொடர்ந்தும் நம்புவதாகத் தெரிவித்துள்ள பாகிஸ்தான், தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடும் தலிபான்கள் அகதி முகாம்களை தமது புகலிடமாகப் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.
இவர்களில் பெரும்பாலான அகதிகள் 1980 களில் ஆப்கான் மீதான சோவியத் ஒன்றியத்தின் படையெடுப்பின் போது இடம்பெயர்ந்தவர்களாவர்.
ஆனால் அதிகளவிலான அகதிகள் முகாம்களை விட நகரப்பகுதிகளிலேயே வசிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆப்கானுடனான உறவு விரிசலடைந்திருந்த காலப்பகுதியான 2007 முற்பகுதியில் ஆப்கான் அகதிகளை திருப்பியனுப்பும் திட்டத்தை பாகிஸ்தான் அறிவித்தது.
இத் திருப்பியனுப்பும் நடவடிக்கைகள் சிலவேளைகளில் தன்னிச்சையாக நடைபெறலாமெனக் கருதப்பட்ட போதும், பெரும்பாலானோர் தாம் ஆப்கானுக்கு திரும்புவதற்கு விரும்பவில்லையெனத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அகதிகளைத் திருப்பியனுப்பும் திட்டத்தை மீளாய்வு செய்யவேண்டுமென பாகிஸ்தானிடம் கோரிக்கை விடுத்துள்ள கினெஞ்மிட், திருப்பியனுப்பப்படும் அகதிகள் சட்ட விரோத குடியேற்றவாசிகளாக மீண்டும் பாகிஸ்தானுக்குள் நுழையும் சாத்தியம் உள்ளது. இவ்வாறு திரும்புபவர்களை போராளிகள் தம்முடன் இணையுமாறு வற்புறுத்தலாம். எனவே இந் நடவடிக்கை எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதுடன், பிராந்திய ஸ்திரத்தன்மையையும் பாதிக்குமெனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஆப்கான் அகதிகளுக்கான பாகிஸ்தான் ஆணையாளர், அகதிகளின் சுமையை தனது நாட்டினால் தனித்து ஏற்க முடியாதெனவும் 2009 இற்குள் தமது இலக்கை தாம் அடைந்து விடுவோமெனவும் தெரிவித்துள்ளார்.