* ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தெரிவிப்பு
மேதினம், தோட்டத் தொழிலாளர்களின் விடுதலையை நோக்காக கொண்டு, தொழிற்சங்கங்களால் கொண்டாடப்பட வேண்டுமே தவிர, தொழிற் சங்கங்களின் பலத்தை காட்டுவதற்காக அல்ல என ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளரான பிரபா கணேசன் தெரிவித்தார்.
மேலும், இந்த நிலைப்பாட்டினையே, மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் வெளிப்படுத்தியிருப்பதாகவும் பிரபா கணேசன் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மே முதலாம் திகதி நடைபெறும் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, மலையக தோட்டத் தொழிலாளர்கள் எதிர் நோக்கும் குறிப்பான பிரச்சினைகள் தொடர்பாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
மேதினம் தோட்டத்தொழிலாளர்களின் விடுதலைக்காக தொழிற்சங்கங்களால் நடாத்தப்படவேண்டுமே தவிர தொழிற்சங்கங்களின் பலத்தை காட்டுவதற்காக அல்ல என்பதே மேலக மக்கள் முன்னணி, ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய அமைப்புகளின் தலைவரான மனோ கணேசன் எம்.பி.யின் நிலைப்பாடாகும்.
இன்று தோட்டத்தொழிலாளர்கள் விலைவாசி உயர்வினால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களது வேலைக்கேற்ற ஊதியம் வழங்கப்படுவதில்லை. தோட்ட நிர்வாகங்களின் மூலமாக கிடைக்கப்பெற்ற பல சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளன. தோட்ட குடியிருப்பு பிரச்சினைகள் பெருமளவில் எழுந்துள்ளன. நிர்வாகங்களின் மூலமாக வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. இறப்பர் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இருவர் செய்ய வேண்டிய வேலைகளை ஒருவருக்கு அளித்து அதன் மூலம் 75 வீத வரவு தொகையை கம்பனி நிர்வாகம் கொள்ளையடிக்கின்றது. போதிய கல்வி, சுகாதார, தண்ணீர், மின்சார, போக்குவரத்து மற்றும் தபால் வசதிகள் செய்து கொடுக்கப்படுவதில்லை. இதேபோன்று பல அடிப்படை வசதிகளின்றி தோட்டத்தொழிலாளர்கள் விரக்தியின் மட்டத்திலே வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.
இந்நிலையில் எதிர்வரும் மே தினம் இவர்களது வாழ்க்கையிலே விடிவை ஏற்படுத்தும் கோஷத்தை முன்வைத்தே நடத்தப்படவேண்டும். மாறாக வெறுமனே தொழிற்சங்க பலத்தை காட்டுவதற்காக நடத்தப்படுமேயானால் அது தோட்டத் தொழிலாளர்களுக்கு செய்யும் அப்பட்டமான துரோகமாகும்.
இவ்வருட மேதினம் அனைத்து மலையக தோட்டத் தொழிற்சங்கங்களாலும் நடாத்தப்படவிருப்பதாக அறிகிறோம். இத்தருணத்தை பயன்படுத்தி அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் தொழிற்சங்கங்களும், வெளியில் இருக்கும் தொழிற்சங்கங்களும் அரசாங்கத்திற்கும், தோட்ட நிர்வாகத்திற்கும் பாரிய அழுத்தத்தை கொடுக்க வேண்டும். மாறாக அரசாங்க பிரதிநிதிகளை தனது மேடைக்கு அழைத்து தமது தொழிற்சங்க பலத்தை அவர்களுக்கு உணர்த்தி அதன் மூலமாக தமது அரசியல் இலாபத்தை பெறமுயல்வார்களேயானால் அது வரலாற்றில் மன்னிக்க முடியாத குற்றமாகும்.