* செயலாளர்நாயகம் ஹசன் அலி
மே மாதம் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலை வடக்கு கிழக்கு இணைப்பு சம்பந்தமான ஒரு சர்வஜன வாக்கெடுப்பாகவே ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கருதுவதாக அதன் செயலாளர் நாயகமும் அம்பாறை மாவட்ட முதன்மை வேட்பாளருமான எம்.ரி.ஹசன் அலி தெரிவித்தார்.
நிந்தவூர் அரசடித் தோட்டத்தில் இடம்பெற்ற மகளிர் சமாஜக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
மே மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலை வடகிழக்கு இணைப்பு சம்பந்தமான ஒரு சர்வ ஜனவாக்கெடுப்பாகவே ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கருதுகின்றது.
இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளருமாகிய எம்.ரி.ஹஸன் அலி , நிந்தவூர் அரசடித் தோட்டத்தில் மகளிர் சமாஜக் கூட்டமொன்றில் சென்ற 17 ஆம் திகதி உரையாற்றிய போது குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது;
"வட கிழக்கு மண்ணில் நெடுங்காலமாக வாழ்ந்து வரும் சிறுபான்மைச் சமூகங்கள் தங்களது தாயகத்தில் நியாயமான சமூக அடிப்படையிலான அதிகாரப் பகிர்வுடன் கூடிய ஒரு அரசியல் தீர்வை எதிர்பார்த்திருந்த வேளையில் திடீரென ஒரு அதிரடி நடவடிக்கையாக பெரும் தேசிய கடும் போக்குவாதிகள் வடக்கிலிருந்து கிழக்கைப் பிரித்துவிட்டு இம்மண்ணில் வாழ்கின்ற இரு சிறுபான்மை சமூகத்தினரையும் முதலமைச்சரைப் பெற்றுக் கொள்வதற்காக ஒன்றுடன் மற்றொன்றை மோதவிடும் கைங்கரியத்தைச் செய்து வருகின்றனர்.
வடக்கிலிருந்து கிழக்கைப் பிரிக்கும் போதும் அல்லது வடக்குடன் நிரந்தரமாகக் கிழக்கை இணைக்கும் போதும் முஸ்லிம்களின் நிபந்தனையாக ஒரு முஸ்லிம் பெரும்பான்மை மாகாணம் அவர்களின் தாயகபூமியில் உருப்பெற வேண்டும் என்பதே மறைந்த தலைவர் அஷ்ரஃபின் அபிலாஷையாகும். ஒரு முஸ்லிம் முதலமைச்சரைப் பெற்றுக் கொள்வதற்காக இன்று நாம் பெரும்பான்மை சமூகத்தினரிடம் கையேந்த வேண்டிய சூழலை இன்றைய கிழக்கு மாகாணம் ஏற்படுத்தி உள்ளது. குரங்கு அப்பம் பங்கிட்ட கதைபோன்று தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இந்த முதலமைச்சர் பதவியை பெரும்பான்மை சமூகத்தினர் இனிமேல் பங்கிடுவார்கள் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தற்போது அரசினால் பிரிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணம் ஒரு முஸ்லிம் பெரும்பான்மை மாகாணமுமல்ல. அதில் ஒரு முஸ்லிம் முதலமைச்சர் வர வேண்டும் என தலைவர் அஷ்ரஃப் ஒரு போதும் கனவு காணவுமில்லை. தனியான ஒரு முஸ்லிம் பெரும்பான்மை மாகாணம் அமைக்கப்பட்டு அதன்மூலம் எப்போதும் எந்தக் கட்சியில் இருந்தாகிலும் ஒரு முஸ்லிம் முதலமைச்சர் வென்று வர வேண்டும் என்றே அவர் விரும்பினார்.
எனவே, முஸ்லிம் மாகாண சபையொன்றினை முஸ்லிம்களுக்குத் தராமல் வெறுமனே இந்தக் கிழக்கைப் பிரித்ததை முஸ்லிம் சமூகம் ஏற்றுக் கொள்கின்றதா? இல்லையா? என்பதற்கான ஒரு சர்வஜன வாக்கெடுப்பாகவே இத்தேர்தலை முஸ்லிம் காங்கிரஸ் எதிர்கொள்கின்றது. அதுமட்டுமல்ல கிழக்கைப் பிரித்துவிட்டு முஸ்லிம்களின் இருப்பைப் பிரதிபலிக்காத வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வமான புதிய மாகாணக் கொடியை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்கின்றார்களா? இல்லையா? என்பதற்கான ஒரு சர்வஜன வாக்கெடுப்பாகவும் இத்தேர்தலை நாம் எதிர்கொள்கின்றோம்.
பொத்துவிலிலிருந்து புல்மோட்டை வரையுள்ள முஸ்லிம்களின் பூர்வீகப் காணிகள் காடு வளர்ப்பு, புனித பூமி விஸ்தரிப்பு, கரும்புச் செய்கை, கல்லோயாத் திட்டம் , மீள்குடியேற்றம் என்ற போர்வைகளில் ஆங்காங்கே அபகரிக்கப்பட்டு வருவதை முஸ்லிம்கள் அங்கீகரிக்கின்றார்களா? இல்லையா? என்பதற்கான பதிலையும் இத்தேர்தலில் நாங்கள் காட்ட வேண்டியிருக்கிறது.
அம்பாறை மாவட்டத்தில் வாழும் தமிழ்பேசும் சமூகங்கள் தங்களது தாய் மொழிப்பிரதேசத்தில் எவ்வித தடங்கலுமின்றி தமிழ் மொழியில் நிர்வாகம் செய்வதற்கான ஒரு கரையோர மாவட்டம் வேண்டுமா? இல்லையா? என்பதற்கான பதிலை அளிப்பதற்கான ஒரு தேர்தலாகவும் இதனை அவர்கள் எதிர்கொள்கின்றார்கள்.
எனவே தான் முக்கியத்துவம் வாய்ந்த சர்வஜன வாக்கெடுப்புக்கொப்பான இத்தேர்தலில் முஸ்லிம் மக்கள் மிகவும் அவதானத்துடன் வாக்களிக்க வேண்டியுள்ளது. முஸ்லிம் சமூகத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் பெறுமதி வாய்ந்த முஸ்லிம்களின் வாக்குகளைக் கவர்ந்து செல்வதற்காக வெறும் அபிவிருத்தித் திட்டங்களையும் , தொழில் வாய்ப்புகளையும் பணங்களையும் காட்டுகின்ற ஒரு கலாசாரம் இன்று நமது பிரதேசங்களில் பல அமைச்சர்களால் அறிமுகப்படுத்தப்படுகின்றது.
அதுமட்டுமல்லாது அரச ஊடகங்கள் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பியும் வருகின்றன.
முஸ்லிம் வாக்காளர்கள் நன்றாக அரசியல் மயப்படுத்தப்பட்டவர்கள் . அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது. அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது இடம்பெயர்ந்த மக்களுக்காக வழங்கப்படவிருந்த உணவுப் பொட்டலங்கள் வாக்காளர்கள் மத்தியில் பகிர்ந்தளிக்கப்பட்டபோது அவற்றை எல்லாம் பெற்றுக் கொண்ட பின்னர் முஸ்லிம்கள் எமக்கு 82 வீதமான வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்தார்கள். அதேபோன்று நமது கிழக்கு மாகாண முஸ்லிம் வாக்காளர்களும் அவர்களைத் தேடிவரும் கனிமத்துப் பொருட்களைப் பெற்றுக் கொண்டு வழக்கம் போல முஸ்லிம் காங்கிரஸின் கரத்தைப் பலப்படுத்த வேண்டும்.
இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து இத்தேர்தலில் போட்டியிடுகின்றது. தனித்துப் போட்டியிட்டு இந்த மாவட்டத்தின் ஆட்சியை நாம் வெல்ல முடியாது. எனவே, மிதவாத போக்குள்ள ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதன் மூலம் இம்மாகாணத்தில் வாழ்கின்ற மிதவாதப் போக்குள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகங்களின் கூட்டு முயற்சியில் பெறப் போகும் இந்த வெற்றி நிச்சயமாக கடும்போக்குவாதிகளை இந்த மண்ணிலிருந்து நிர்வாக ரீதியாக பலவீனப்படுத்திவிடும்.