* அமைச்சர் பேரியல் அஷ்ரப் கேள்வி
அஷ்ரப் மறைவுக்கு பின்னர் தற்போதைய தலைமைத்துவத்தின் கீழ் கடந்த ஏழரை ஆண்டுகளில் முஸ்லிம் மக்களுக்கு ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாதித்து கொடுத்தது என்னவென அமைச்சர் பேரியல் அஷ்ரப் கேள்வியெழுப்பியுள்ளார்.
அம்பாறையில் வியாழக்கிழமை இடம்பெற்ற வேட்பாளர்கள், ஆதரவாளர்களுடனான சந்திப்பின்போது உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வியெழுப்பிய பேரியல் அஷ்ரப் மேலும் தெரிவித்ததாவது;
கிழக்கில் உள்ள பள்ளிவாசல், உலமாக்கள், புத்திஜீவிகள், சமூக இயக்கங்கள் எல்லாம் இணைந்து முஸ்லிம் அரசியல்வாதிகள் எல்லாம் ஒன்றுபட்டு வாருங்கள் என்று கோஷமிட்டனர். அதற்கென கடந்த மாதம் ஒரு தினத்தில் பாராளுமன்றத்தில் உம்மா கட்சியினர், உலமாக்கள் இணைந்து ஒன்றுகூட்டினார்கள். அதில் நான் உட்பட அமைச்சர்கள் ரிசாத்பதியுதீன், அதாவுல்லா, அமீர் அலி, மயோன் முஸ்தபா, அக்கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ரவூப் ஹக்கீம், ஹசன் அலி, பசீர் சேகுதாவூத் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அவர்களிடம் இத்தேர்தலில் கிழக்கினைச் சேர்ந்த சகல பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற முஸ்லிம் கட்சிகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து பொதுவான ஒரு சின்னத்தில் கிழக்கு மாகாண தேர்தலில் போட்டியிடுவோம் என்று கூறினோம். அமைச்சர் அதாவுல்லாவை பிரதம அமைச்சராக அல்லது ஹசன் அலியை முதல் அமைச்சராக வைத்து போட்டியிடுவோம் என்றும் கூறினோம். அதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் கிழக்கில் அதன் தனித்துவத்தை விட்டுக்கொடுக்க முடியாது. அதன் போராளிகள் கட்சி உறுப்பினர்கள் இதற்கு உடன்படமாட்டார்கள் என்று ஹக்கீம் கூறினார்.
யாராவது வந்து என்னுடன் இணைந்து கடல்கோள் அனர்த்த மீள்கட்டுமான வேலைகளில் ஈடுபட்டார்களா? அல்லது ஆகக் குறைந்தது ஆதரவாவது தெரிவித்தார்களா? தேர்தல் காலத்தில் மட்டும் இப்பகுதிகளில் முஸ்லிம் வாக்குகள் கேட்பதற்கு மட்டுமே வருகின்றனர். சவூதி அரசினால் அக்கரைப்பற்று நுரைச்சோலையில் 500 வீடுகளைக் கட்டுவதற்கு காணிப்பிரச்சினை ஏற்பட்டது. அவ்விடத்தில் பெரும்பான்மையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அட்டப்பள்ளத்தில் வீடுகட்டுவதற்கு காணிப்பிரச்சினை ஏற்பட்டது. பொத்துவிலிலும் வீடுகட்டுவதற்கு பிரச்சினை ஏற்பட்டது. இவற்றையெல்லாம் அணுகுகின்ற சில வழிமுறைகள் உள்ளன.
சவூதி வீடமைப்புத் திட்டம் பற்றி அக்கரைப்பற்று நுரைச்சோலை காணி சம்பந்தமாக ஜனாதிபதியை சந்தித்து அவரிடம் பிரச்சினைகளை தெரிவித்தேன். அவர் அதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுத்துக்கொடுத்தான் பயனாகவே இன்று அக்கரைப்பற்றில் 500 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. பிரச்சினைகள் ஏற்படாவண்ணம் பொலிஸ் காவலரண் கூட அமைக்கப்பட்டுள்ளது. கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை காணியின்மையால் தான் கடல்கோள் அனர்த்த மீள்கட்டமைப்பு காலம் தாழ்த்தப்பட்டது. காணிகளில் மண் நிரப்புவதற்கே நீண்ட காலம் எடுபட்டது. தற்போது அப்பிரதேசங்களில் வீடமைப்புத் திட்டங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
கிழக்கில் உள்ள சிங்கள மக்கள் கிழக்கை விடுவித்ததன் பயனாக ஒட்டுமொத்தமாக இந்த அரசுக்கு ஆதரவளிக்க காத்து நிற்கின்றனர். அதேபோன்று ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்த பிள்ளையான் குழுவினரும் அரசை ஆதரிக்கின்றனர். சற்று சிந்தித்து பாருங்கள். எமது பகுதியில் அபிவிருத்தி ஏதாவது நடைபெற்றுள்ளதென்றால் அது பொதுஜன ஐக்கிய முன்னணி அரசிலேயே தான்.
இவ் வைபவத்தில் பிரதியமைச்சர் எஸ். நிஜாமுதீன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுபவர்களான எம்.பி.ஏ. அஸீஸ், சாய்ந்தமருது சலீம், மருதமுனை உவைஸ் ஆகியோரும் உரையாற்றினர்.