கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையில் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் இருந்து ஆங்கில மொழி மூலம் தோற்றிய 26 மாணவர்களில் 25 மாணவர்கள் உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர்.
இவர்களில் அப்துல் கபூர் பாத்திமா சாஜிதா என்ற மாணவி 10 பாடங்களிலும் `ஏ' தரத்தில் சித்தி பெற்றுள்ளதாக கல்லூரி அதிபர் எம்.ஐ.எம். அமிறுத்தீன் தெரிவித்தார்.
முகம்மது முஸ்தபா பாத்திமா நஜா என்ற மாணவி 9 ஏ,பீ சித்தியையும், செய்யது முகம்மது பாத்திமா சஸ்னா 8 ஏ, 2 பீ சித்தியையும், முகம்மது ஜஃபர் சிராஜீதீன் 7 ஏ, 3 பீ மற்றும் முகம்மது கபீல் அகமட் சர்ஜி 7 ஏ, பீ, சி, எஸ் சித்திகளையும் பெற்றுள்ளதாகவும் பரீட்சைக்கு தோற்றிய 26 மாணவர்களும் ஆங்கிலமொழியில் ஏ சித்திகளை பெற்றுள்ளார்கள் கல்லூரி அதிபர் தெரிவித்தார்.
2002 ஆம் ஆண்டு ஆங்கில மொழி மூலம் தரம் 6 இல் கற்கை நெறியை ஆரம்பித்த மாணவர்களே முதல் முறையாக ஆங்கில மொழி மூலம் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றி கிழக்கு மாகாணத்திலேயே சிறந்த பெறுபேற்றை பெற்றமைக்கு அன்று முதல் இன்று வரை பாடுபட்டு உழைத்த அதிபர்கள், ஆசிரியர்கள், வலயத்தலைவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள், நலன் விரும்பிகள், பெற்றோர்கள் அனைவருக்கும், ஆங்கில மொழி மூலம் கற்பிக்கப்படும் தரம் 6 தொடக்கம் தரம் 11 வரையான வகுப்புகளுக்கு பொறுப்பனவலயத்தலைவர் எஸ்.எச்.ஆர்.எஸ். ஹமீட் நன்றியை தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த வருடம் நடைபெற்ற கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் இருந்து தமிழ் மொழி மூலம் தோற்றிய 136 மாணவர்களில் 93 மாணவர்கள் உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளதாகவும் அப்துல் றஸீட் முகம்மட் பசாம் என்ற மாணவன் 10 பாடங்களிலும் ஏ தரத்தில் சித்தி பெற்றுள்ளதாகவும் தரம் II வலயத்தலைவர் எஸ்.ஏ.சி.எம். அஷ்ரப் தெரிவித்தார்.
பஸ்லூல் ஹக் ஹஸ்னி அகிமட் என்ற மாணவர் 9 ஏ, பீ உதுமாலெப்பை வசீம் அகமட் 8 ஏ, பீ , சி,முகமட் லாபீர் அகமட் சுமையில் 8 ஏ, பீ சித்திகளையும் பெற்றுள்ளனர்.
நாட்டில் 50 அரசாங்க பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு ஆங்கில மொழி மூலம் உயர்தர கற்கை நெறிகள் இப்பாடசாலைகளில் இந்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதில் இரு முஸ்லிம் பாட சாலைகளும் உள்ளடங்குகின்றன அதில் ஒன்று தான் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையாகும்
இவ்வருடம் உயர்தரத்திற்கு தெரிவாகியுள்ள தமிழ், ஆங்கில மொழி மூல மாணவர்களுக்கான கற்கை நெறிகள் இம்மாதம் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் வெளி இடங்களில் இருந்து வந்து சேரும் மாணவர்ளில் குறிப்பிட்டளவு மாணவர்களுக்கே விடுதியில் இடம் இருப்பதால் முன் கூட்டியே வந்து இணைந்து கொள்ளுமாறும் அதிபர் மேலும் தெரிவித்தார்.