* வடக்கு மாகாண சபை உதவி செயலர் தெரிவிப்பு
பல்கலைக்கழகக் கல்விக்கு தெரிவாகும் மாணவர்கள் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியமாகும். பல்கலைக்கழகத்தில் முதல்தரப் பட்டதாரியாகச் சித்தியடைந்தாலும் ஆங்கிலத் தேர்ச்சி இல்லாவிட்டால் முன்னுக்கு வரமுடியாது என்று வடக்கு மாகாணசபையின் உதவிச் செயலாளர் ஆர்.உமாகாந்தன் திருகோணமலை மாவட்டப் பல்லைக்கழக மாணவர் ஒன்றியம் நடத்திய 2008 கலை, விஞ்ஞானம், வர்த்தகம், வினாடி வினாப்போட்டியின் நிறைவு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பேசும்போது வலியுறுத்தினார்.
கடந்த சனிக்கிழமை திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் இந் நிகழ்வு திருகோணமலை நியூ செஞ்சுரி லயன்ஸ் கழகத்தின் அனுசரணையுடன் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் உதவிச் செயலாளர் மேலும் பேசுகையில்;
"திருகோணமலை மாவட்டப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மாவட்டத்தின் கல்வித்துறை வளர்ச்சியுடன் மாவட்ட மக்களின் முன்னேற்றத்தையும் உறுதி செய்யும் முகமாக தனது செயற்றிட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும்".
ஒன்றியம் பல வழிகளில் மாவட்ட மக்களின் நலனைப் பேணும் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வந்துள்ளதை பிரதம அதிதி பாராட்டினார். ஷ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் அதிபர் எம்.இராஜரத்தினம் பேசும் போது;
"கோட்டா அடிப்படையில் மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகக் கல்விக்கு தெரிவு செய்யப்படுவதற்குப் பதிலாக திறமையின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிபெறுவதற்கு ஏற்ற வகையில் மாணவர் சமுதாயத்தைத் தயார்படுத்தும் நடவடிக்கைகளை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மேற்கொள்ள வேண்டும்.
மாவட்ட ரீதியில் கோட்டா அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதி கிடைத்தால் போதும் என்ற மன நிலையை மாற்றி அமைக்க வேண்டும்" என்றார்.
சிறப்பு அதிதியான கொழும்பு தும்பற நிறுவன எந்திரி ஆர். வருணன், திருமலை மாவட்டப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்றிட்டங்கள் மாவட்ட வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக அமைகின்றது என்று குறிப்பிட்டார். கடற்கோள் அனர்த்தம் ஏற்பட்ட போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருமலை மாவட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முதலில் களத்தில் இறங்கி உதவி செய்ததையும் வருணன் நினைவு கூர்ந்தார்.
வினா- விடைப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்குப் பரிசுகள், சான்றிதழ்களை அதிதிகள் வழங்கினர். கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.