* பிரதி கல்வி அமைச்சர் சச்சிதானந்தன்
அரசாங்கம் இலவசக் கல்விக்காக பெருந்தொகையான நிதி மற்றும் வள ஒதுக்கீடுகளை மேற்கொண்டு வரும் நிலையில், மேலதிக கல்விக்காக மாணவர்கள் ஏன் பிரத்தியேக வகுப்புக்கு செல்ல வேண்டுமென பிரதி கல்வி அமைச்சர் மு. சச்சிதானந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கற்பித்தலை முறையாக மேற்பார்வை செய்யவென, வலய மற்றும் கோட்ட அதிகாரிகள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் என பல மட்டங்களில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் மேலதிக கல்விக்காக வேறு இடங்களுக்கு ஏன் செல்லவேண்டி ஏற்படுகின்றது எனவும் அவர் தனது அறிக்கையில் வினவியுள்ளார்.
மாணவர்களுக்கான கற்பித்தல் பணியை உரிய முறையில் மேற்பார்வை செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், சமகால கல்வி நிலைமைகளின் போக்கு தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு மேலதிக வகுப்புக்கள் நடாத்துவதற்குப் பதிலாக ரியூசன் வகுப்புக்களை நடாத்துகின்றார்கள். மாணவர்களுக்கு பாடசாலைகளில் சிறந்த முறையில் கல்வி கற்பித்தால் அவர்கள் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்படாது. கல்வி அமைச்சு இலவசக் கல்விக்கென பெருந்தொகையான பணத்தினை ஒதுக்கும்போது மாணவர்கள் பணம் கொடுத்து கற்கின்ற நிலையை ஒருபோதும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஓரிரு பாடசாலைகளில் ஆசிரியர்கள் பிரத்தியேக வகுப்புக்களை நடாத்துகின்றார்கள். உண்மையில் இது வரவேற்கத்தக்கது. இவர்களைப் போன்று ஆசிரியர்கள் ஒவ்வொருவரும், சேவை அடிப்படையில் மாணவர்களுக்கு கல்வியினை வழங்க வேண்டும். மாணவர்களை இனங்கண்டு அவர்களின் தரங்களுக்கேற்ப வகுப்புக்களை பிரிவுகளாக பிரித்து கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும்.
பாடசாலைகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் செயற்பாடானது, காலத்திற்கு காலம் மாற்றியமைக்கப்படுகின்றது. அதனடிப்படையில் ஆசிரியர்கள் செயல்படுகின்றார்களா என ஆசிரிய ஆலோசகர்கள் பாடசாலைகளுக்கு சென்று பார்வையிட வேண்டும். இவ்வாறான செயற்பாடுகளின் மூலமே மாணவர்களின் பெறுபேறுகளை சிறப்பானதாக உயர்த்த முடியும்.
இலங்கையின் கல்விமுறையில் அளவுரீதியிலான வளர்ச்சி ஏற்பட்டாலும் தரமான கல்வி வளர்ச்சி ஏற்பட்டுவிட்டதென கூறிவிடமுடியாது. எமக்குள்ள அடுத்த சவால், நாட்டில் அனைவருக்கும் தரமான கல்வியினை வழங்குவதாகும். ஒரு பாடசாலையானது தரமான கல்வியினை வழங்குகின்றதா என்பதை அப்பாடசாலை சார்ந்த சமூகத்தின் வெளிப்பாட்டின் மூலமே இனங்காண முடியும்.
கல்வி என்பது நாளைய சமூகத்திற்கான நபர்களை இன்று தயார்படுத்துவதாகும். சமூகத்திற்கு பயன்படாதோரை சமூகத்திற்கு வழங்குவது நிறுத்தப்படுவதன் மூலமே தரமான கல்வியை பாடசாலை வழங்குகின்றது எனக்கொள்ள முடியும்.
பாடசாலைகளும் வகுப்பறைகளும் அறிவினை மாணவர்கள் நுகரும் இடமாக இருக்கும் நிலை மாற்றப்பட்டு, அறிவினை உற்பத்தி செய்யும் இடமாக மாற்றப்படல் வேண்டும். அதில் மாணவர்களும் ஆசிரியர்களும் பங்குகொள்ளல் வேண்டும்.
மாணவர்கள் விரிவுரைகளின் போது பேசா மடந்தைகளாக வாசிக்கப்படும் குறிப்புக்களை மட்டும் எழுதி வைக்கும் ஆட்களாகவன்றி கற்றலில் சுறுசுறுப்பாக பங்குபற்றுபவர்களாக மாற வேண்டும். பாடசாலைகள் வெறுமனே கற்பித்தல் நிறுவனங்களாக அன்றி பூரணமான கல்விக் காரியாலயங்களாக மாறவேண்டும்.
அறிவினை பெறல், திறனை வளர்த்தல், நல்ல மனப்பாங்கினை உருவாக்கல் என்பன பாடசாலையில் இடம்பெறல் வேண்டும். அதாவது, மாணவர்கள் தமக்கு ஒப்படைக்கப்பட்ட பணியினை நேர்த்தியாக செய்து முடிக்கத் தேவையான ஆற்றல்கள் வளர்க்கப்படல் வேண்டும்.
மாணவன் தனக்கும், தனது குடும்பத்திற்கும் பயன்படக்கூடியவனாக உருவாக்கப்பட வேண்டும். தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் பயன்தரக்கூடிய பயன்பாட்டுக்குரிய மனவளத்தினை உருவாக்கி வழங்க வேண்டிய பணி கல்வியை போதிக்கின்ற ஆசிரியர்கள் அதிபர்களின் கடமையாகும்.
மேற்கூறிய இலக்குகள் நிறைவுபெற பாட உள்ளடக்கம், அப்பாடத்தினை கற்பிக்கின்ற முறை என்பன காலத்திற்கு காலம் மாற்றியமைக்கப்படல் வேண்டும். பாடசாலைகளில் மாணவர்களின் ஆளுமை விருத்திக்கான சகல செயற்பாடுகளும் முறையாக இடம்பெறுவது அவசியமென்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.