வவுனியாவில் வெள்ளை வானில் வந்தவர்களினால் விசாரணைக்கென கூட்டிச் செல்லப்பட்ட லொறிச்சாரதி காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் தாண்டிக்குளத்தில் சகோதரியுடன் வசித்து வந்த 51 வயதான மருதையா யோகராசா என்ற லொறிச் சாரதியே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் இதுவரை வீடு திரும்பவில்லை எனச் சகோதரியும் மைத்துனரும் வவுனியா பொலிஸில் புகார் தெரிவித்துள்ளதுடன் மனித உரிமைகள் ஆணைக்குழு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றிலும் முறைப்பாடுகள் செய்துள்ளனர்.
கைதானவர் தலையில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர் எனவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இவரது மனைவி, பிள்ளைகள் யாழ்ப்பாணத்தில் வசித்து வருவதுடன் இவர் வவுனியாவில் சகோதரியுடன் தாண்டிக்குளத்தில் தங்கியிருந்து லொறிச்சாரதியாக வேலை செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.