நாட்டிலுள்ள நீர்வீழ்ச்சிகளிலும் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்துப் பரவலாக புகார் தெரிவிக்கப்பட்டு வருவதுடன் இவற்றின் பாதுகாப்பு போதியளவு இல்லையெனவும் நீர்வீழ்ச்சிப் பாதுகாப்பு அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.
கடந்த வருடங்களில் நாடளாவிய ரீதியில் உள்ள பல்வேறு நீர்வீழ்ச்சிகளில் இதுவரை 801 மரணங்கள் சம்பவித்துள்ளன.
நாட்டில் உள்ள மொத்தம் 212 நீர்வீழ்ச்சிகளில் 48 பாதுகாப்பற்ற நீர்வீழ்ச்சிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 4 நீர்வீழ்ச்சிகள் மிகவும் ஆபத்தானவைகளாக அமைந்துள்ள போதிலும் இவற்றில் பாதுகாப்பு அறிவுறுத்தல் பலகைகள் கூடப் பொருத்தப்படவில்லையென இரத்தினபுரியை மையமாகக் கொண்டு செயற்படும் நீர்வீழ்ச்சி பாதுகாப்பு சுற்றாடல் மையத்தின் தகவல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையிலுள்ள நீர்வீழ்ச்சிகளில் மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படும். இரத்தினபுரி (குருவிட்ட) போபத் எல்ல நீர்வீழ்ச்சியிலேயே அதிக மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இங்கு ஏற்பட்டுள்ள மொத்த மரணங்களின் எண்ணிக்கை 66 ஆகும். இதற்கு அடுத்த இடங்களில் ராவனா எல்ல நீர்வீழ்ச்சியில் 37 மரணங்கள், ரத்தோட்டை, பம்பரகிரி நீர்வீழ்ச்சியில் 18 மரணங்கள், தலவாக்கலை டெவோன் நீர்வீழ்ச்சியில் 14 மரணங்கள் என்ற அடிப்படையில் மரணங்கள் ஏற்பட்டுள்ளன.
இவற்றில் ஒரே தடவையில் அதிக மரணங்கள் தெனியாய கொள்ளுதொல நீர்வீழ்ச்சியில் 5 மரணங்களும் இதற்கு அடுத்தபடியாக பேக்கர்ஸ் நீர்வீழ்ச்சியில் 3 மரணங்களும் ஒரே தடவையில் ஏற்பட்டுள்ளன. 2008 ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 14 பேர் நீர்வீழ்ச்சிகளில் மரணமடைந்துள்ளனர் என மேற்படி அமைப்பின் தலைவர் இந்திகவீரவர்தன தெரிவித்தார்.
தற்கொலை முயற்சி, குடிபோதை அறியாமை, மூளைக்கோளாறு நீரலையில் அடித்துச் செல்லல், பௌதீக அமைப்பு அறிவுறுத்தல்கள் இன்மை போன்றவையே இம்மரணங்களுக்குக் காரணமென சுட்டிக்காட்டப்படுகிறது.