தூக்கிலிடப்பட்ட ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைன் இரு பெரும் தவறுகளை இழைத்திருப்பதாக ஈராக்கிற்கான முன்னாள் இந்தியத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
கடைசிவரை அமெரிக்காவின் அடாவடித்தனத்துக்கும் மிரட்டலுக்கும் அடிபணியாத இரும்பு மனிதராகத் திகழ்ந்த சதாம் ஹுசைன் மீது அமெரிக்காவுக்கு கோபம் வர அவர் செய்த இரு பெரும் தவறுகளே காரணம் என ஈராக்கிற்கான இந்தியாவின் முன்னாள் தூதர் ரஞ்சித்சிங் கல்ஹா தெரிவித்துள்ளார்.
அவர் அண்மையில் எழுதி வெளியிட்டுள்ள `தி அல்டிமேட் பிரைஸ்' என்ற புத்தகத்தில் இந்தத் தகவலை அவர் பகிரங்கப்படுத்தியுள்ளார்.
சர்வதேச மசகு எண்ணெய் சந்தையில் அமெரிக்க டொலரின் புழக்கத்தைக் கடுமையாக எதிர்த்து வந்த சதாம் ஹுசைன், 2000 ஆம் ஆண்டு தங்களது நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யும் பெற்றோலியத்துக்கு அமெரிக்க டொலரை வாங்க மறுத்தார்.
அத்துடன், உடனடியாக 10 பில்லியன் வைப்பு நிதியாக இருந்த அமெரிக்க டொலரை அப்படியே யூரோவுக்கு மாற்றி மேலும் தனது எதிர்ப்பை கடுமையாகத் தெரிவித்தார். இதனால், சதாம் ஹுசைன் மீது அமெரிக்காவின் ஆத்திரப் பார்வை திரும்பியது.
ஈராக் இது போன்ற நடவடிக்கையில் இறங்கியதும் அவ்வழியை ஈரானும் பின் பற்றியது. இதைத் தொடர்ந்து பெரும்பாலான பெற்றோலிய ஏற்றுமதி நாடுகளும் ஈராக்கின் அமெரிக்க டொலர் புறக்கணிப்பு வழியை பின்பற்றத் தொடங்கின. இது அமெரிக்காவுக்கு கடும் அதிர்ச்சியை அளித்ததுடன், சதாமின் மீதான கோபத்தையும் அதிகரித்தது.
சதாமின் இது போன்ற நடவடிக்கையை தங்களுக்கு அவர் விடுக்கும் நேரடி சவாலாகவும் அமெரிக்கா ஒரு கட்டத்தில் எண்ணத் தொடங்கியது. இதன் பின்னரும் சதாமின் நடவடிக்கைகளை அனுமதித்தால் அது தனக்கு பெரும் துன்பமாகவே முடியும் என்றும் அமெரிக்கா கருதியது.
அன்று முதல் சதாமுக்கு எதிராக அமெரிக்கா தருணம் பார்த்து காய் நகர்த்த ஆரம்பித்தது. இருப்பினும் இதற்கெல்லாம் சதாம் ஹுசைன் அஞ்சவில்லை. தனது அமெரிக்க டொலர் நிராகரிப்பை அவர் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வந்தார்.
இது போன்ற நிலையில், அடுத்த தவறாக அமெரிக்காவை மேலும் கோபப்படுத்தும் விதமாக சதாம் ஹுசைன் மற்றொரு செயலில் ஈடுபட்டார். தங்களது நாட்டில் அமெரிக்காவை சாராத எண்ணெய் கம்பனிகளுக்குத்தான் ஒப்பந்தத்துக்கு அனுமதி என்பதுதான் அது. சதாமின் இந்த நடவடிக்கை அமெரிக்காவை ஒருகணம் அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன், அவர் மீதான கோபத்தையும் கடுமையாக்கியது.
எனினும் இதனால், சதாமுக்கு எதிரான நடவடிக்கையை எடுக்க அமெரிக்காவால் முடியவில்லை. அவரை அனுசரித்துப் போக வேண்டிய கட்டாய நிலைக்கே அமெரிக்கா ஆளாகியிருந்தது. காரணம், தங்களது பெரும் பகுதி எரிபொருள்தேவைக்கு அமெரிக்கா ஈராக்கை சார்ந்திருந்ததே ஆகும்.
இருப்பினும் சதாம் ஹுசைனை பழி தீர்க்க வேண்டும் என்பதில் மட்டும் அமெரிக்கா குறியாக இருந்தது. அதை வெற்றிகரமாக நிறைவேற்றியும் விட்டது என ரஞ்சித் சிங் கல்ஹா தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.