* சர்தாரி கூறுகிறார்
தேவையேற்படுமானால் பிரதமராவேன் என பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவர் ஆஸிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கணவரான சர்தாரி பி.பி.ஸி.செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :-
"அடுத்து நடைபெறும் பாராளுமன்ற இடைத்தேர்தலில் நான் போட்டியிடுவேன். தற்போதைய ஆட்சி நிர்வாக அமைப்பில் முக்கிய பங்காற்றக்கூடியவர் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப்.
ஆளும் கூட்டணிக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை பலம் கிடைக்கும் நிலை ஏற்பட்டால் முஷாரப்புக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்படும் என்பது உறுதி.
சிந்து மாகாணத்தின் லர்கானா தொகுதிக்கு (பெனாசிர் பூட்டோவின் தொகுதி) நடைபெற உள்ள இடைத்தேர்தலில் நானும் எனது சகோதரி பர்யால் தால்பூரும் வேட்பு மனுத் தாக்கல் செய்யவுள்ளோம்.
முஷாரப்பை நான் வெறுக்கவும் இல்லை, விரும்பவும் இல்லை. அரசியல் ஆதரவு திரட்டும் நோக்கில் நாங்கள் முஷாரப்புக்கு ஆதரவு தெரிவித்தோம். பாகிஸ்தான் நலனைக் கருத்தில் கொண்டு யாருடனும் மோதல் போக்கை விரும்பவில்லை. இப்படிச் சொல்வதால் முஷாரப்புக்கு ஆதரவாக நாங்கள் செயல்படுவதாக அர்த்தம் காணக்கூடாது.
பாகிஸ்தானில் மாற்றம் வரவேண்டும் என்பதற்காகவே வாக்காளர் எங்களுக்கு ஆதரவு கொடுத்து வெற்றிபெற உதவியுள்ளனர். சொன்னபடி நாங்கள் மாற்றத்தைக் கொண்டுவருவோம். ஆனால் அது அனைத்து சூழ்நிலையைப் பொறுத்து அமையும்.
கடந்த ஆண்டு நெருக்கடி நிலை அமுலில் இருந்தபோது முஷாரப் பிறப்பித்த உத்தரவின்பேரில் பதவி நீக்கப்பட்ட நீதிபதிகள், மீண்டும் வேலையில் சேர்க்கப்படவேண்டும் என்பதில் கட்சி தீர்மானமாக உள்ளது. நீதித்துறை சீர்திருத்தம் தொடர்பான திட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
பாகிஸ்தானில் நெருக்கடி நிலைச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டுவர முஷாரப் கடந்த ஆண்டு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு சட்டத்தை விலக்கிவைக்க அவர் மேற்கொண்ட நடவடிக்கை அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு அப்பாற்பட்டவை.
பெனாசிரின் கொலை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும்படி இன்னும் இருவாரத்தில் ஐ.நா.விடம் பாகிஸ்தான் அரசு கோரிக்கை விடுக்கும். ஆனால் இந்த விடயத்துக்கு அதிகாரிகள் குறுக்கீடு விளைவிப்பார்கள் என்று அஞ்சத் தேவையில்லை" என்றார் சர்தாரி.