அக்கரபத்தனை ஊட்டுவள்ளி தோட்ட முகாமையாளரை இடமாற்றம் செய்யக் கோரி அத்தோட்டத்தைச் சேர்ந்த இரண்டாயிரம் தொழிலாளர்கள் கடந்த 14 ஆம் திகதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வேலை நிறுத்த போராட்டத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி ஆகிய தொழிற்சங்கத்தை சார்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தோட்ட முகாமையாளரை 5 மணிநேரம் தோட்ட காரியாலயத்தில் சிறை பிடித்து வைத்திருந்ததை அடுத்து அக்கரபத்தனை பொலிஸார் சம்பவம் நடந்த 18 ஆம் திகதி மாலை 5 மணிக்கு சென்று முகாமையாளரை மீட்டுள்ளனர்.
அத்தோட்ட பிரிவில் உள்ள காரியாலயம் மற்றும் தோட்ட முகாமையாளரின் இல்லம், தேயிலை தொழிற்சாலை அனைத்திற்கும் அக்கரபத்தனை பொலிஸார் பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.
இத்தோட்ட நிர்வாகம் வரையறுக்கப்பட்ட அக்கரப்பத்தனை பிளான்டேசனுக்கு சொந்தமானதாகும். மேலும் இத்தோட்டம் 6 பிரிவுகளை கொண்டுள்ளதுடன் சுமார் இரண்டாயிரம் பேர் இந்த ஆறு பிரிவிலும் தொழில் புரிகின்றனர்.
தோட்ட முகாமையாளர் அடாவடித்தன நிர்வாகத்தை மேற்கொண்டதாலேயே வேலை நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தோட்டத் தொழிலாளர்களின் சிறு சிறு பிரச்சினைகளை கூட கணக்கெடுக்காது எதற்கெடுத்தாலும் தனது சொந்த பலத்தைப் பயன்படுத்தி பொலிஸாரை கொண்டு அடக்கு முறையை கையாள்வதாகவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். தொழிலாளர்கள் மீது பல முறைப்பாடுகளை தோட்ட முகாமையாளர் அக்கரப்பத்தனை பொலிஸில் பதிவு செய்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அக்கரப்பத்தனை உயர் அதிகாரி ஷ்ரீதரன் தெரிவித்துள்ளார்.