* இரத்தினபுரி புதிய நகரில் சம்பவம்
இரத்தினபுரி புதிய நகரத்திலுள்ள நீதிமன்ற சந்தியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் 4 பேர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஆட்டோவும் தனியார் பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
ஆட்டோவில் சென்றவர்களே உயிரிழந்ததுடன் படுகாயமடைந்துள்ளனர்.
குருவிட்ட பகுதியிலிருந்து இரத்தினபுரிக்கு வந்த ஆட்டோ முன்னால் சென்ற வான் ஒன்றை முந்திச்செல்லமுற்பட்டபோது, எதிரே மொனராகலையிலிருந்து வந்த தனியார் பஸ்மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் 4 ஆண்கள் ஸ்தலத்தில் உயிரிழந்ததுடன் ஒரு பெண் படுகாயமடைந்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு விருந்தினர் வீடொன்றுக்கு ஆட்டோவில் சென்றவர்களே விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
இது சம்பந்தமாக பஸ் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் அனைவரும் குருவிட்ட பகுதியை சேர்ந்தவர்களாவர்.