மோதரையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பிள்ளையின் தந்தையான முச்சக்கரவண்டி சாரதியை வெள்ளைவானில் சிவில் உடையில் வந்தவர்கள் கடத்திச் சென்றுள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திலும், வாழ்க்கைத் தொழில் தொழில்நுட்ப பயிற்சி பிரதி அமைச்சருமான பெ. இராதாகிருஷ்ணனிடமும் குடும்பத்தினர் புகார் செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் கைதடியை பிறப்பிடமாக கொண்ட 26 வயதுடைய தம்பிராஜா கார்த்தீபன் என்ற இளம் குடும்பஸ்தரே கடந்த 19 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணியளவில் புதுச்செட்டித்தெருவில் வைத்து கடத்தப்பட்டுள்ளார்.
இவர் கடத்தப்பட்டது தொடர்பாக மனைவியான கார்த்தீபன் சுஜிதா பிரதி அமைச்சரிடம் தெரிவித்ததாவது;
1997 ஆம் ஆண்டு கொழும்புக்கு வந்த எனது கணவரை 2003 ஆம் ஆண்டு நான் திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு ஒரு குழந்தையுண்டு. எனது கணவருடன் அளுத்மாவத்தை 702/6, என்ற விலாசத்தில் வசித்து வருகின்றேன்.
சம்பவ தினம் எனது கணவர் இரவு 10 மணியாகியும் வீடு திரும்பாத நிலையில் கொட்டாஞ்சேனை பொலிஸார் எமது வீட்டைத் தேடிவந்து எனது கணவரது முச்சக்கரவண்டி புதுச்செட்டித்தெருவில் நிறுத்தப்பட்டிருப்பதாகவும், பொதுமக்களின் தகவலையடுத்து முச்சக்கரவண்டியை கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றதாகவும், தெரிவித்து, எனது கணவரைப் பற்றி விசாரித்தார்கள். அதைத் தொடர்ந்து கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திற்கு சென்று கணவர் காணாமல் போனது தொடர்பாக புகார் செய்தேன். அத்துடன், சம்பவம் நடந்த இடத்திலிருந்தவர்கள் தெரிவித்த தகவலின்படி சனிக்கிழமை மாலை 6 மணியளவில் முச்சக்கரவண்டியில் புதுச்செட்டித் தெருவுக்கு சென்றுகொண்டிருந்த எனது கணவரை பின்தொடர்ந்த வெள்ளை வான் அவரை இடைமறித்து முச்சக்கரவண்டியை நிறுத்தி பலவந்தமாக சிவில் உடையில் வந்தவர்கள் ஏற்றிச் சென்றதாக தெரிவித்தனர்.
எனக்கோ, எனது கணவருக்கோ எதுவிதமான அநாவசிய தொடர்புகள் எவருடனும் இருந்ததில்லை. நிரபராதியான எனது கணவரை கண்டுபிடித்து தாருங்கள் என்று தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் என்.கே. இலங்ககோனிடம் பிரதி அமைச்சர் புகார் செய்துள்ளார்.