வடக்கு- கிழக்கு மனித உரிமை செயலகத்தின் இயக்குநரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான அருட்தந்தை கருணாரட்ணம் அடிகளாரின் படுகொலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
வடக்கு- கிழக்கு மனித உரிமை செயலகத்தின் இயக்குநரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான அருட்தந்தை கருணாரட்ணம் அடிகளார் 20 ஏப்ரல் 2008 அன்று மாங்குளம்- மல்லாவி வீதியில் இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினரால் நடாத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
மாங்குளம் பகுதியில் உள்ள தேவாலயத்தில் இறை வழிபாட்டினை முடித்துக்கொண்டு கருணாரட்ணம் அடிகளார் தனது வெள்ளை நிற ஊர்தியில் திரும்பிக்கொண்டிருந்த வேளையில் நண்பகல் 12.30 மணியளவில் இவரது ஊர்தி மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.
மக்களின் நலனுக்காகவும் மனித உரிமை நிலைமையினை மேம்படுத்துவதற்காகவும் எப்போதும் உழைத்து வந்த ஒரு செயற்பாட்டாளரை இலங்கை அரசாங்கம் வேண்டும் என்றே இலக்கு வைத்திருக்கிறது. மக்கள் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி அர்ப்பணிப்போடு செயற்பட்டு வந்த இத்தகையதொரு தொண்டனைக் கோரமாகக் கொலை செய்தமையின் ஊடாக மனித உரிமையினை மதித்துச் செயற்படுவதில் தான் எந்தளவிற்கு இழிநிலையில் இருக்கின்றது என்பதனை இலங்கை அரசாங்கம் மீண்டுமொரு முறை நிரூபித்திருக்கின்றது.
மனித உரிமைச் செயற்பாட்டாளர்களையும் தமிழ் மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் மனித உரிமை ஆர்வலர்களையும் இலக்கு வைத்துத் தாக்குதலை நடாத்தும் இலங்கை அரசினது செயற்பாட்டை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
மனித உரிமை மீறல்களில் தொடர்ந்தும் ஈடுபட்டுவரும் இலங்கை அராங்கத்தினது இத்தகைய போக்கினைச் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் சர்வதேச நாடுகளும் வன்மையாகக் கண்டிப்பதோடு இது போன்ற மோசமான மனித உரிமை மீறல்களில் அரசாங்கம் தொடர்ந்தும் ஈடுபடாமல் இருப்பதற்கு இலங்கை அரசிற்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டுமென்றும் கோருகின்றோம்.
தனது இளம் வயது முதலே மக்கள் பணியில் ஈடுபட்டு வந்த கருணாரட்ணம் அடிகளாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.