புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் விமானத் தாக்குதலில் சிக்குண்டு கால்களில் படுகாயப்பட்டதைத் தொடர்ந்து அவருடைய கால் அகற்றப்பட்டுவிட்டது எனவும், பிரபாகரன் உயிரிழந்துவிட்டார் எனவும் தற்போது அவருக்குப் பதிலாகப் போலிப் பிரபாகரன் ஒருவரே செயற்படுகிறார் எனவும், பிரபாகரனுக்கு கடும் நீரிழிவு நோய்த்தாக்கம் காரணமாக கால் அகற்றப்பட்டது எனவும், இதற்காக அவர் வெளிநாட்டுக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளார் எனவும் இவ்வாறே பலவாறான ஊகத் தகவல்கள் கடந்தகாலங்களில் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்ட நிலையில் தான், அண்மையில் கொல்லப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரின் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக பிரபாகரன் ஏனைய தமிழ்க்கூட்டணி உறுப்பினர்களுக்கு முன்பாக மேற்கூறிய எல்லாத் தகவல்களையும் ஊகங்களே என்று நிரூபிக்கும் வகையில் பகிரங்கமாகத் தோன்றியிருந்தார்.
தற்போது, பிரபாகரன் பற்றி வன்னிப் பிரதேசங்களிலிருந்து கடந்த வாரங்களில் பாதுகாப்புப் படையினர் தரப்புக்குத் தெரிவிக்கப்படும் தகவல்களுக்கேற்ப அவர் பகல்வேளைகளில் குறிப்பிட்ட இரகசிய நிலக்கீழ் பதுங்கு குழிகளில் இருந்துவிட்டு இரவுவேளைகளில் வெளியே தாராளமாக நடமாடி வருவதாகவும் இவ்வாறு பிரபாகரன் வன்னியிலுள்ள பிரதான புலிகள் இயக்க முகாம்கள், பயிற்சி முகாம்களுக்குச் சென்று அங்கு பயிற்சி செயற்பாடுகள், யுத்த நடவடிக்கைகளுக்கான திட்டமிடல் போன்ற முக்கிய விடயங்களை அவதானித்தும் முகாம் தலைவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியும் இயக்கப் பணிகளைச் செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் தீவிர விமானக்குண்டு வீச்சுத் தாக்குதல்களால் புலிகள் இயக்கத்தின் முக்கிய முகாம்கள், தொடர்பு நிலையங்கள் மற்றும் கடற்புலிகள் முகாம்கள் முதலியன முற்றாக அழிக்கப்பட்ட நிலையிலும், புலிகள் இயக்க முக்கிய தலைவர்கள் விமானக் குண்டுவீச்சுகளில் கொல்லப்பட்டுவிட்ட நிலையிலும் பிரபாகரனும் மற்றும் முன்னணித் தலைவர்களும் விமானக் குண்டு வீச்சுகளையிட்டு பெரும் பீதியடைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதனாலேயே அண்மைக் காலமாக அவர்கள் பகல்வேளைகளில் வெளியே நடமாடாது பதுங்கியிருந்துவிட்டு இரவுவேளைகளில் சுயாதீனமாக நடமாடி வருவதாகவும் முக்கிய இயக்கக் காரியங்களை இரவுவேளைகளிலேயே செய்துவருவதாகவும் இந்த வகையில் யுத்தத் திட்டமிடல்களுக்காக பிரபாகரனுக்கு அடுத்த உயர்மட்டத் தலைவர்கள் வன்னியின் பிரதான படையணித் தலைவர்கள் ஆகியோர் பிரபாகரனை இரவு நேரங்களில் சந்திப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இந்தத் தகவல்கள் வன்னிப் பிரதேசங்களிலிருந்து மட்டுமன்றி அண்மையில் படையினரிடம் அடைக்கலம் தேடி வந்துள்ள புலிகள் இயக்க முக்கிய உறுப்பினர் ஒருவராலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனும் அவருடைய முன்னணித் தலைவர்களும் துணிந்து இரவில் நடமாடி வருவதற்குக் காரணம் விமானக் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் பகல் வேளைகளில் மட்டுமே விமானப்படையினரால் நடத்தப்படுவதாகவும் ஆயினும் மேற்படி தகவல்களைத் தொடர்ந்து விமானப்படையினர் இரவுவேளைகளிலும் விமானத் தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். இந்த வகையில் கடந்த 15 ஆம் திகதி இரவு முல்லைத்தீவு பிரதேசத்தில் முத்தையன் கட்டுக்குளம் பகுதியிலுள்ள காட்டுப் பிரதேசத்தில் அமைந்துள்ள புலிகளின் பிரதான முகாம் நிலையம் மீது விமானப்படையினர் விமானக் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இரவில் நடத்தப்பட்ட இந்த விமானத் தாக்குதல் வெற்றிகரமாக அமைந்ததாகவும் குறித்த புலிகளின் கட்டுக்குளம் பிரதான முகாம் விமானக்குண்டு வீச்சில் முற்றாக அழிக்கப்பட்டதாகவும் விமானப்படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இந்த விமானக்குண்டுவீச்சு 15 ஆம் திகதி இரவு 11.15 மணியளவில் நடத்தப்பட்டது. ஆயினும், 15 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விமானக் குண்டுவீச்சு பற்றி புலிகள் இயக்கத்தினர் வாய் திறக்கவில்லை. பதிலாக 17 ஆம் திகதி முல்லைதீவு விசுவமடுப் பகுதியிலுள்ள புலிகளின் பிரதான யுத்த ஆயுதங்கள், உபகரணங்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த பெரிய களஞ்சிய முகாம் தொடர்கள் மீது விமானப்படையினர் விமானத் தாக்குதல் மேற்கொண்டு முற்றாக அழித்த சம்பவத்தின் போது விசுவமடுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவீச்சு பொது மக்கள் வாழும் பகுதியில் நடத்தப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுபற்றி குற்றஞ்சாட்டியிருக்கும் புலிகள் இயக்க சமாதான அலுவலகமும் அவர்களின் இணையத்தளமும் மற்றும் புலிகளின் சார்பு இணையத்தளங்களும் விமானப்படையினர் விசுவமடு பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அதில் 15 வயதுள்ள பாடசாலை மாணவி உயிரிழந்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளன.
எவ்வாறாயினும், 15 ஆம் திகதி விமானப்படையினர் இரவு நேரத்திலேயே கட்டுக்குளம் பகுதியிலுள்ள புலிகளின் பிரதான காட்டு முகாம்மீது தாக்குதல் மேற்கொண்டு முற்றாக அழித்திருப்பது விமானப்படையினரின் வெற்றிகரமான இரவுநேர விமானத் தாக்குதலாக அமைந்துள்ளதாக விமானப்படைத் தரப்பு தெரிவித்துள்ளது.
லங்காதீப விமர்சனம்: 20.04.2008