ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி, டிராவிட்டின் பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. காயம் காரணமாக சச்சின் இடம்பெற முடியாமல் போனது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பின்னடைவாக அமைந்தது.
ஐ.பி.எல். `ருவென்ரி - 20' தொடரின் லீக் சுற்று நடக்கிறது. நேற்று முன்தினம் மும்பையில் நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, டிராவிட் தலைமையிலான பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணியை சந்தித்தது. இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக உடல்தகுதி சோதனையில் சச்சின் தேறவில்லை. இதையடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கப்டன் பொறுப்பை ஹர்பஜன் ஏற்றார். நாணயச் சுழற்சியில் வென்ற இவர் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தொடக்கம் பரிதாபமாக அமைந்தது. சகிர்கான் வேகத்தில் தொடக்க வீரர் ரோஞ்சி (8) போல்டானார். இதற்கு பின் சகிர்கான் வீசிய `பவுன்சரில்' தார்ன்லியின் இடது புருவத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து `ரிட்டையர்ட் ஹேர்ட்' முறையில் அவர் பெவிலியன் திரும்பினார்.
அடுத்து வந்த சனத் ஜெயசூர்யா, சகிர்கானின் துல்லிய `த்ரோவில்' 29 ஓட்டங்களுக்கு ரன் அவுட்டானார். தனது அசத்தல் ஆட்டத்தை தொடர்ந்த உத்தப்பா பவுண்டரிகளாக விளாசினார். வினய் குமார் வீசிய 12 ஆவது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்து ஓட்டத்தை விரைவாக உயர்த்தினார். இவர் 48 ஓட்டங்களுக்கு அகில் பந்தில் வெளியேறினார். கடைசிக் கட்டத்தில் அனுபவ பொலக் (28) விளாசித் தள்ளினார். இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 165 ஓட்டங்கள் எடுத்தது.
பின்னர் களமிறங்கிய பெங்களூர் ரோயல்ஸ் அணியில் சந்தர்போல் (16), டிராவிட் இணைந்து நிதானமாக ஆடினர். இந்த நேரத்தில் ஹர்பஜன் வீசிய 9 ஆவது ஓவர் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல் இரண்டு பந்தில் ரோஸ் டெய்லர் இரண்டு சிக்சர் அடித்து மிரட்டினார் 5 ஆவது பந்தை கப்டன் டிராவிட் (32), அடிக்க, மிகவும் தாழ்வாக பிடித்த ஹர்பஜன் அவுட் கோரினார். பந்து தரையில் பட்டதாக டிராவிட் அதிருப்தி தெரிவித்தார். ஆனால், நடுவர் கையை உயர்த்த வேறுவழியின்றி வெளியேறினார். இதற்கு பின் ஜெயசூர்யா சுழலில் ரோஸ் டெய்லர் (23) சிக்கினார். அடுத்து விராத் கோஹ்லி (23) கலக்கினார்.
இக்கட்டான நேரத்தில் தென் ஆபிரிக்க வீரர்களான கலிஸ், பவுச்சர் பொறுப்பாக ஆடினர். கலிஸ் 25 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. கடைசி ஓவரில் 3 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை. குல்கர்னி வீசிய இந்த ஓவரின் முதல் நான்கு பந்துகளில் 3 ஓட்டங்கள் கிடைத்துவிட, பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ஓட்டங்களை எடுத்து வெற்றிபெற்றது. பவுச்சர் 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமலிருந்தார்.