இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்) போட்டியில் சௌரவ் கங்குலி தலைமையிலான கொல்கத்தா நைற் ரைடர்ஸ் அணி இரண்டாவது வெற்றியைப் பெற்றது.
கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்டத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது ரைடர்ஸ் அணி.
பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக பெங்களூரில் நடந்த முதல் ஆட்டத்தில் 140 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களில் மாற்றம் மேற்கொள்ளவில்லை. டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு இது முதல் போட்டி.
நாணயச் சுழற்சியில் வென்று முதலில் ஆடிய டெக்கான் சார்ஜர்ஸ் அணி 18.4 ஓவர்களில் 110 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. ஆரம்பம் முதலே டெக்கான் அணி கிடுகிடுவென விக்கெட்டுகளை இழந்தது. 71 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்தது. அந்நிலையில் அவுஸ்திரேலிய வீரர் அண்ட்ரூ சைமண்ட்ஸ் அதிகபட்சமாக 32 ஓட்டங்களை எடுத்தது, அணி சரிவிலிருந்து மீள உதவியது.
அவுஸ்திரேலிய விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் 23 ஓட்டங்களைக் குவித்தார். லட்சுமண், ரோஹித் சர்மா, வாஸ், ஓஜா ஆகியோர் டக் அவுட்டானது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. முரளி கார்த்திக் 3 விக்கெட்டுகளையும் அகர்கார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இலகுவான இலக்குடன் அடுத்து ஆடிய கொல்கத்தா அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட்டுகளை இழந்து 112 ஓட்டங்களைக் குவித்து வெற்றி பெற்றது. இக்கட்டான நிலையில் 38 ஓட்டங்களைக் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் ஹஷி. அவரே ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.
மெக்கலம் (5), பொண்டிங் (0) உள்ளிட்ட 3 வீரர்களை 21 ஓட்டங்களுக்கு இழந்து தவித்தது கொல்கத்தா அணி. அதன் பின் கங்குலி- டேவிட் ஹஷி ஜோடி அணியைச் சரிவிலிருந்து ஓரளவு மீட்டது. இந்த ஜோடி 4 ஆவது விக்கெட்டுக்கு 47 ஓட்டங்களை எடுத்தது.
14 ஓட்டங்களை எடுத்திருந்த போது ஓஜா வீசிய பந்தில் கிளீன் போல்டானார் கப்டன் கங்குலி. அதன் பின் இருக்கும் பந்துகளுக்கு இணையான ஓட்டங்களுடன் ஆட்டத்தைத் தொடர்ந்தது அணி.
அதேசமயம் எதிரணி பந்து வீச்சாளர்களின் சவாலை முறியடித்து வெற்றியை நோக்கி முன்னேறினார் ஹஷி. இவர் 43 பந்துகளில் 38 ஓட்டங்களைக் குவித்தார். ஓஜா வீசிய 19 ஆவது ஓவரின் கடைசிப் பந்தை சிக்ஸருக்கு விரட்டி ஈடன் கார்டனை மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் மூழ்கடித்தார் ஹஷி. இவரது எண்ணிக்கையில் ஒரு பவுண்டரியும் 3 சிக்ஸர்களும் அடங்கும்.
மின் தடையால் அதிருப்தி
கொல்கத்தா அணி வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த போது ஈடன் கார்டனில் இரவு 7 மணிக்கு மின் தடை ஏற்பட்டது. இதனால், முக்கிய பிரமுகர்களும் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர். 24 நிமிடத்துக்குப் பின்பே ஆட்டம் தொடர்ந்தது.
`ஸ்ரேடிய நிர்வாகிகளின் தவறால் தடை ஏற்பட்டுள்ளது, எங்களால் அல்ல' என கொல்கத்தா மின் பகிர்வு முகாமைத்துவ இயக்குநர் தெரிவித்துள்ளார்.