டமாஸ்கஸ்: பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸ் இஸ்ரேலை அங்கீகரிக்காதென அதன் அரசியல் பிரிவு தலைவரான ஹேல்ட் மிஷால் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற பேச்சுக்களைத் தொடர்ந்து அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டன் தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளிக்கும் முகமாகவே மிஷால் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் 1967 போரின் போது இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேம்,காஸா மற்றும் மேற்குக் கரை ஆகியவற்றை உள்ளடக்கிய பாலஸ்தீனத்திற்கே ஹமாஸ் இணங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அமைதியுடனான அயல்நாடாக இஸ்ரேல் இருப்பதை அங்கீகரிப்பதற்கு ஹமாஸ் தயாராகி வருவதாக ஜிம்மி கார்டன் தெரிவித்திருந்தார்.
நாடு கடந்த நிலையில் சிரியாவில் வாழும் மிஷால் மேலும் தெரிவிக்கையில்;
பாலஸ்தீன நாடு என்பது எந்தவித குடியேற்றங்களுமற்ற இயற்கையான இறையாண்மையுடன் ஜெருசலேமை தலைநகராகக் கொண்டிருக்க வேண்டும். 1967 இல் ஏற்படுத்திய எல்லைகளை இஸ்ரேல் விலக்கிக் கொள்ளுமானால் நாம் தற்காலிக யுத்த நிறுத்தத்திற்கு இணங்குவோம். 10 வருடங்களைக் கொண்ட ஒரு யுத்த நிறுத்த உடன்படிக்கையானது அங்கீகரிப்பதற்கான மாற்று வழியாக இருக்குமெனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஹமாஸின் நிலைப்பாட்டை மிஷாலின் கருத்து மாற்றப் போவதில்லையென தெரிவித்துள்ள அமெரிக்கா எந்தவொரு விடயத்திலும் கருத்துக்களை விட நடவடிக்கைகளே அதிகளவில் தேவையென தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தற்காலிக போர் நிறுத்தமொன்றுக்கு ஹமாஸ் இணங்காதென அதிகளவான இஸ்ரேலியர்கள் கருதுவதாக நிருபர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, கார்டரை சந்திப்பதற்கு இஸ்ரேலியப் பிரதமர் எஃகுட் ஒல்மேர்ட் மறுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.