*அறுதிப் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை
காத்மண்டு:நேபாளத்தில் நடைபெற்ற அரசியல் அமைப்பு நிர்ணய சபைக்கான தேர்தலில் மாவோயிஸ்ட்டுகள் எதிர்பாராத வெற்றியைப் பெற்றுள்ள போதிலும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதற்கான பலத்தை மாவோயிஸ்ட்டுகள் பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட உத்தியோகபூர்வ முடிவுகளின் பிரகாரம் 240 ஆசனங்களில் 120 ஆசனங்களை மாவோயிஸ்ட்டுகள் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில், விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் ஒதுக்கப்படும் ஏனைய 335 ஆசனங்களுக்கான போட்டியில் 30 வீதத்தினையே மாவோயிஸ்ட்டுகளால் வெற்றிகொள்ள முடியுமென பத்திரிகைகளில் வெளியாகும் தரவுகள் தெரிவிக்கின்றன.
இவ் விகிதாசார ஒதுக்கீட்டுக்கான முடிவுகள் இன்று மாலையே வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
விகிதாசார ஒதுக்கீட்டுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு முடிந்த பின்னரே உண்மையான நிலைவரம் தெரியவருமெனத் தெரிவித்துள்ள தேர்தல் ஆணையக பேச்சாளர் இதில் மாவோயிஸ்ட்டுகள் பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்கான சாத்தியங்கள் குறைவு. ஆனால், தனிப்பெருங்கட்சியாக உருவாகும் வாய்ப்புகள் உண்டெனத் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் 240 ஆண்டுகள் பழமைவாய்ந்த மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் புதிய அரசியலமைப்பை வரைவதற்குமான 601 உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்பு நிர்ணய சபையின் எஞ்சிய 26 உறுப்பினர்களையும் புதிய அமைச்சரவை தேர்ந்தெடுக்கும்.
உலகின் ஏழை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதென உறுதியளித்துள்ள மாவோயிஸ்ட்டுகள் ஏனைய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அரசை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வீண் சச்சரவுகள் நிறைந்துள்ள நேபாளத்தின் அரசியல் வரலாற்றில் மாவோயிஸ்ட்டுகள் தலைமையிலான அரசில் இணைவதற்கு பெரிய கட்சிகள் தயக்கம் காட்டுவதால் புதிய அரசை அமைப்பதற்கு காலதாமதமாகலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட இறுதி முடிவுகளின்படி நேபாள காங்கிரஸ் 37 ஆசனங்களையும் கம்யூனிஸ்ட் யு.எம்.எல்.33 ஆசனங்களையும் மாதேஸி மக்கள் உரிமைகளுக்கான அமைப்பு 30 ஆசனங்களையும் தராய் மாதேஸி ஜனநாயகக் கட்சி 9 ஆசனங்களையும் சத்பாவனா கட்சி 4 ஆசனங்களையும் தொழிலாளர்கட்சி , மக்கள் முன்னணி மற்றும் சுயாதீன குழுக்கள் என்பன தலா 2 ஆசனங்களையும் தேசிய மக்கள் முன்னணி 1 ஆசனத்தையும் பெற்றுள்ளது.