*ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம்
யோ. நிமல்ராஜ்
மூதூர் அக்ஷன் பாம் நிறுவனத்துள் சென்றபோது படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்களிலிருந்து துர்நாற்றம் வீசியதுடன் காகங்கள் அவ் உடல்களை குதறியவண்ணம் இருந்தன. சில உடல்களில் விரல்களும் துண்டிக்கப்பட்டிருந்ததாக சாட்சி ஒருவர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
மூதூரில் பதினேழு அக்ஷன் பாம் ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக திருகோணமலை அக்ஷன் பாம் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்குகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
மூதூரில் அக்ஷன் பாம் நிறுவன ஊழியர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணைகள் ஜனாதிபதி ஆணைக்குழுவால் கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் திங்களன்று நடைபெற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் அவர் மேலும் சாட்சியம் வழங்குகையில்;
நான் 2005 மே முதல் 2007 டிசம்பர் வரை அக்ஷன் பாம் நிறுவனத்தில் கொள்வனவு உத்தியோகத்தராக கடமையாற்றினேன்.
கடந்த 2006 ஆகஸ்டில் அக்ஷன் பாம் ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக நான் கேள்விப்பட்டுள்ளேன்.
ஆனால், இவர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கான காரணம் எனக்குத் தெரியாது. 2007 டிசம்பருடன் அக்ஷன் பாம் நிறுவனம் அங்கு தனது பணிகளையும் நிறுத்திக்கொண்டது.
நான் திருகோணமலை அலுவலகத்திலேயே கடமையாற்றினேன் புல்மோட்டை, மூதூர் அலுவலகங்களிற்கும் சென்றதுண்டு.
உணவுப் பொருட்கள் மற்றும், மலசலகூடம், குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற பணிகளையே அக்ஷன் பாம் நிறுவனம் மேற்கொண்டிருந்தது.
எமது நிறுவனம் விநியோகம் செய்வதற்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதே எனது கடமையாகும்.
அன்றைய காலகட்டத்தில் பாதுகாப்பு நிலைவரம் பற்றி கூறினால் தரம் மூன்றிலேயே பாதுகாப்பு நிலை இருந்தது.
அந்நிலையில் நாம் எங்கும் சென்று வரலாம். என்னுடன் இன்னும் நான்கு கொள்வனவு உத்தியோகத்தர்கள் பணியாற்றி இருந்தார்கள்.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளிற்கும் நாம் எமது பணியின் நிமித்தம் செல்வதுண்டு. அத்துடன், அந்தப் பிரதேசங்களிலும் எமது சேவையை வழங்கியிருந்தோம். 2006 ஜூலை 31 ஆம் திகதி மூதூருக்கு அப்பணியாளர்கள் வாகனம் மூலம் திருகோணமலையிலிருந்து சென்றார்கள்.
ஆனால், அப்பதினேழு பேரில் ஒரு முஸ்லிம் பணியாளரும் 16 தமிழ் பணியாளர்களும் இருந்தனர்.
இவர்கள் எவ்வாறு தெரிவு செய்யப்பட்டிருந்தனர் என்பது எனக்குத் தெரியாது.
அன்றைய தினம் காலை ஒன்பது மணிக்குப் பின்னரே இரண்டு வாகனத்தில் அவர்கள் சென்றனர். அவர்களில் மூன்று சாரதிகளும், வெளிக்கள உத்தியோகத்தர்களும் திட்ட உதவியாளர்களுமாக பதினேழு பேர் இருந்தனர்.
வழமையில் காலை எட்டு மணி முதல் மாலை ஐந்து மணிவரையே அவர்களின் கடமை நேரமாக இருந்தது.
இவர்களுடன் மேலும் 15 பணியாளர்கள் இருந்தனர். ஆனால், அவர்கள் அலுவலகத்தில் தங்குவதில்லை. காலை வந்து மாலை சென்று விடுவார்கள்.
2006 ஆகஸ்ட் இரண்டாம் திகதி மூதூர் அலுவலகத்துடன் தொடர்புகொண்டபோது சாரதியாகப் பணியாற்றும் ஆனந்தராஜா என்பவர் அங்கு சூழ்நிலை அபாயகரமானதாக இருப்பதாகவும் அங்கு தொடர்ந்து இருக்க முடியாத நிலை உள்ளதாகவும் கூறினார்.
அத்துடன், விடுதலைப்புலிகள் சுற்றுவட்டாரங்களில் இருப்பதாகவும் மோதல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறியதுடன் விரைவில் மூதூர் அலுவலகத்திலிருந்து தம்மை அழைத்துச் செல்லுமாறும் என்னிடம் கூறினார்.
சர்வதேச ரீதியில் செயற்பட்டுவரும் உதவி அமைப்பு ஒன்றின் பணியாளர்கள் மீது இவ்வாறானதொரு கொடூரச் சம்பவம் நடைபெறமாட்டாது என்பதில் நாம் நம்பிக்கை கொண்டிருந்தோம்.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு சிங்களப் பணியாளர்கள் அழைத்துச் செல்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.
மூதூர் அலுவலகத்தில் இப்பதினேழு பணியாளர்களும் இருந்தபோது அருட்தந்தை மணிவண்ணன் சென்று அவர்களை தன்னுடன் வருமாறு கேட்டும் அவர்கள் செல்லவில்லை என்பதை பின்னர் அறிந்து கொண்டேன்.
அத்துடன், சுவர்ணராஜ் என்பவர் கேட்டிருந்தும் அவர்கள் வெளியில் செல்லவில்லை.
இவ்வாறான சூழ்நிலையில் பொலிஸ், இராணுவம் மற்றும் கடற்படை ஆகிய முத்தரப்பினரையும் எம்மை மூதூரிற்கு செல்ல அனுமதிக்குமாறு கேட்டிருந்தும் அதற்கு அனுமதி கிடைக்கப்பெறவில்லை.
2006 ஆகஸ்ட் மூன்றாம் திகதிதான் எமக்கும் மூதூர் அக்ஷன்பாம் நிறுவனத்திற்கும் இடையில் இறுதித் தொடர்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதன் பின்னர் நான் அலுவலகத்தில் இருக்கவும் இல்லை மூன்றாம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ எவ்வாறான விடயங்கள் இரு அலுவலகர்கள் இடையேயும் பேசிக்கொள்ளப்பட்டதென்பதனை திருகோணமலை அலுவலகத்திலுள்ள வானொலி பதிவேட்டின் மூலம் அறிந்துகொள்ளலாம்.
பவன் என்பவரே அவ்வானொலி (VHS) பதிவேட்டிற்கு பொறுப்பானவராக இருந்தார்.
இவற்றின் பின்னர் ஐந்தாம் திகதி ராஜீஷ் என்பவர் தான் தொலைபேசி அழைப்பின் மூலம் இவர்கள் படுகொலை செய்யப்பட்ட விடயத்தை பிறேம் என்பவருக்கு கூறினார்.
பிறேம்தான் வானொலிப் பதிவுப் பிரிவின் முகாமையாளராக இருந்தார்.
மூதூரில் முதலாம் திகதி மோதல் ஆரம்பித்தவுடனேயே மூதூர் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்களின் பெற்றோர்கள் எமது அலுவலகத்திற்கு வந்து அவர்களை அழைத்து வருமாறு கோரினார்கள்.
பின்னர் இவர்களின் படுகொலை தொடர்பாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து அவர்களின் உடல்களையாவது கொண்டுவந்து தருமாறு கோரினார்கள்.
எப்படியாவது இறந்தவர்களின் உடல்களை மீட்டுத்தருவதற்கு ஏற்பாடு செய்வதாக பெற்றோரிடம் கூறினோம்.
4, 5 மற்றும் ஆறாம் திகதிகளில் மூதூரில் கடுமையான ஷெல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக அறிய முடிந்தது.
அந்நிலையில் ஆகஸ்ட் ஆறாம் திகதி இரு பொலிஸாருடன் வாகனமொன்றில் மூதூருக்கு புறப்பட்டோம்.
சேருநுவரவுடன் எம்முடன் வந்த இரு பொலிஸாரும் இறங்கிவிட்டனர். அதற்கு அப்பால் நாம் மட்டுமே பயணித்தோம்.
பின்னர் நேரே மூதூர் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று அவர்களுடன் மூதூர் அக்ஷன் பாம் அலுவலகத்திற்குச் சென்றோம்.
அங்கு அலுவலக முற்றத்தில் பதினேழு பணியாளர்களினதும் உடல்கள் வரிசையாகக் கிடந்தன.
உடல்களை காகங்கள் குதறிய வண்ணம் இருந்ததுடன் உடல்களிலிருந்து துர்நாற்றமும் வீசியது.
சில உடல்களின் விரல்கள் துண்டாடப்பட்டிருந்தன. படுகொலை செய்யப்பட்டிருந்த அனைவரையும் என்னால் அடையாளம் காண முடிந்தது.
அதனைத் தொடர்ந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் வழங்கப்பட்ட பொலித்தீன் பைகளில் உடல்களை வைத்து ட்ரக்டர் ஒன்றில் அவற்றை ஏற்றி திருகோணமலைக்கு கொண்டு வந்தோம்.