*அனுதாப செய்தியில் ஈழவேந்தன் தெரிவிப்பு
வடக்கு, கிழக்கில் அரசு மேற்கொண்டு வரும் மனித உரிமை மீறல்களை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்துவதில் முன்னின்று செயற்பட்ட கருணாரட்ணம் அடிகளாரின் படுகொலை தமிழ் மக்களை பேரதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் மா.க.ஈழவேந்தன் தெரிவித்துள்ளார்.
கருணாரட்ணம் அடிகளாரின் படுகொலை தொடர்பாக ஈழவேந்தன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் கி.சிவநேசன் மறைந்த 45 ஆம் நாளில் சிவநேசனுக்கு ஏற்பட்ட கதி இவருக்கும் ஏற்பட்டிருப்பது எம்மை கதிகலங்கச் செய்துள்ளது.
அரசியல்வாதியாகவிருப்பதும் சரி ஆத்மீகவாதியாகவிருப்பதும் சரி தமிழர் உரிமைக்காக குரல் எழுப்பின் அரசபயங்கரவாதத்திற்கு பலியாவதுதான் அவர்கள் நிலையாகியுள்ளது.
கருணாரட்ணம் அடிகளாரின் மனித உரிமைக்கான குரல் 2004 ஆம் ஆண்டு ஜெனிவாவில் ஒலித்தது. அண்மையில் நோர்வேயில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் இலங்கையின் வடகிழக்கில் ஏற்பட்டுள்ள மனித அழிவுகளைப்பற்றியும், அம்மண்ணின் அழிவுபற்றியும் அருட்திரு கருணாரட்டிணம் அடிகளார் வழங்கிய குறிப்புக்களின் அடிப்படையில் வைகோவின் உரை அமைந்திருந்தது. தாம் ஏன் சாகிறோம், நாம் ஏன் சாகடிக்கப்படுகிறோம் என்பதை விளக்கும் முறையில் அகிலம் எங்கும் எம் அழுகுரல் கேட்க வேண்டும் என்பது அடிகளாரின் குறிக்கோள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் பெரும் விபத்தில் சிக்கி உயிர் தப்ப முடியுமோ என்ற நிலையில் யாழ்ப்பாண மருத்துவமனையில் நீண்ட நாட்கள் தங்கியிருந்து வைத்தியம் செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகியிருந்தார். மனமுருகி வைத்தியர்கள் இவருக்கு துணைநின்ற போதும். நாம் அனைவரும் இறைஞ்சியதன் விளைவாக இறைவன் காட்டிய இரக்கமே இவரது உயிரைக் காத்தது. பெரும் விபத்தில் தப்பிய இவர் கிளைமோர் தாக்குதலுக்கு பலியானது நம் அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
கருணாரட்ணம் அடிகள் ஆற்றிய ஈடு இணையற்ற பணியை தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் நன்றி உணர்வுடன் நினைவு கூருவது உறுதி.