தேசிய கல்வி நிறுவகத்தால் நடத்தப்படும் கல்விமாணிக் கற்கை நெறியின் இறுதிப் பரீட்சை நேர சூசியில் திடீரென ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தினால் பரீட்சைக்குத் தோற்றிய ஆசிரிய மாணவர்கள் பலர் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 19 ஆம் திகதி நடைபெறவிருந்த முக்கியமான பாடங்கள் எதிர்வரும் 4 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டதாக பரீட்சை மண்டப மேற்பார்வையாளரினால் அதற்கு முன்தினம் (18 ஆம் திகதி) நண்பகலின் பின்பே வாய்மொழி மூலம் அறிவிக்கப்பட்டது.
அன்றைய தினம் (19) போயா தினமாகையால்தான் அன்றைய பரீட்சைகள் பிற்போடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
எனினும் போயா தினத்தன்று பரீட்சைகளோ மேலதிக வகுப்புகளோ நடாத்தக்கூடாதென கல்வி அமைச்சு பல வருடங்களுக்கு முன்னரே சுற்று நிருபம் மூலம் கல்வித்துறை சார்ந்த அனைத்து நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளது.
இலங்கையின் கல்வித்துறையைத் திட்டமிடுகின்ற முக்கியமானதொரு நிறுவனமான தேசிய கல்வி நிறுவகம் போயா தினத்தில் பரீட்சை நடத்த முற்பட்டதும் அதனைப் பின்னர் பிற்போட்டதும் அதனது திட்டமிடப்படாத செயற்பாடுகளை எடுத்துக் காட்டுவதாகவே அமைகின்றது.
2006 ஆம் ஆண்டு முடிவடைய வேண்டிய இக்கற்கை நெறி 2008 ஆம் ஆண்டிலேயே முடியவுள்ள நிலையில் இறுதிப் பரீட்சைகளைப் பிற்போட்டு காலம் கடத்துவதால் ஆசிரிய மாணவர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
அத்தோடு எமது நாட்டில் நடைபெறும் அனைத்து பொதுப் பரீட்சைகளும் வெள்ளிக்கிழமை மாலை நேரப் பாடங்கள் 2.30 மணிக்கே தொடங்குகின்றன. முஸ்லிம் மாணவர்கள் ஜும்மா தொழுகையை நிறைவேற்றும் பொருட்டே வெள்ளிக்கிழமை மாலை நேரப் பரீட்சைகள் தாமதமாகி தொடங்கப்படுகின்றன.
எனினும் கல்விமாணிக்கற்கைநெறியின் இறுதிப் பரீட்சைகளில் இம்முறை ஏனைய நாட்களில் போன்றே மாலை நேரப் பரீட்சைப் பாடங்கள் வெள்ளிக்கிழமையும் 1 மணிக்கே தொடங்கும் வகையில் நேரசூசி தயாரிக்கப்பட்டுள்ளது.