*பா.உறுப்பினர் நௌஸாத்
ஆட்சியை அமைப்பதற்கு சக இனமக்களின் ஆதரவு அவசியம் தேவைப்படுகின்ற இன்றைய அரசியல் சூழலில், இனரீதியான காணி சுவீகரிப்பு எந்த வகையில் சாத்தியமாகுமென பாராளுமன்ற உறுப்பினர் நௌஸாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமாச் செய்த ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீமின் இடத்திற்கு நியமிக்கப்பட்ட ஏ.எம்.எம். நௌஸாத் பா. உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட பின் முதலாவதாக கலந்துகொண்ட கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றுகையில் அவர் கூறியதாவது;
"இலங்கையின் 20 வருடகால மாகாணசபை வரலாற்றில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராகவில்லை. அச்சந்தர்ப்பம் கிழக்கு மாகாணத்தில் மட்டுமேயுள்ளது. முஸ்லிம்களின் வாக்குகளால் முகவரி தேடிக்கொண்டு பெரிய அரசியல்வாதிகளாகியோர் முஸ்லிம் சமூகத்தின் இந்த அரசியல் உண்மைகளைச் துஷ்பிரயோகம் செய்வதை சமூகம் ஒருபோதும் மன்னிக்காது.
அத்தகையவர்களுக்கு நாம் நல்லபாடம் புகட்டுவதோடு, முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுக்க ஓரணியில் திரள்வது அவசிய"மென்றும் அவர் கூறினார்.
சம்மாந்துறை பிரதேச சபைத் தலைவர் எம்.ஐ.எம். மன்சூர் தலைமையில் நகர மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர், தவிசாளர் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலர் உரையாற்றினர்.