*பஸீர் சேகுதாவூத் கூறுகிறார்
முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்கவும் அபிலாசைகளை நிறைவேற்றவுமே அமைச்சுப் பதவிகளையும் பாராளுமன்ற ஆசனங்களையும் தூக்கி வீசிவிட்டு வந்துள்ளோம். எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டு இணைந்து அதிகப்படியான ஆசனங்களைப்பெற்று முதலமைச்சர் பதவியையும் தனதாக்கிக் கொள்ளுமென்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் மாகாண சபை தேர்தல் வேட்பாளருமான பஸீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
ஏறாவூர் ரிபாய் பள்ளிவாயல் முன்னால் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் பேரினவாதிகளுக்கு மட்டுமே இந்த நாடு சொந்தம், ஏனைய இனத்தினர் இங்கு வாழ்வதற்குத் தகுதியற்றவர்கள் என்று கூறுபவர்களுக்கும், அவர்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ள அரசாங்கத்திற்கும் கிழக்குவாழ் மக்கள் நல்ல பாடமொன்றினை எதிர்வரும் தேர்தலில் புகட்ட வேண்டும்.
நடைபெறவிருக்கும் தேர்தலில் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐ.தே.க.வின் அமோக வெற்றி தற்போதே உறுதியாகிவிட்டது.
அதுபோன்றே மட்டக்களப்பு மாவட்டத்தில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்கின்ற நாளில் அரசாங்கத்தின் கூலிப் படைகளின் தோல்வியும் நிச்சயிக்கப்பட்டுவிட்டது.
கிழக்கு மண் தமிழ் - முஸ்லிம் மக்களின் தாயக பூமியாகும். தமது மண்ணை பேரினவாதிகளின் கெடுபிடிகளிலிருந்து பாதுகாப்பதற்காக தமிழ் மக்களும் இம்முறை ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்பதற்கான முடிவினை எடுத்துள்ளனர்.
சிறுபான்மை சமூகம் கிழக்கு மாகாணத்தில் அடிமைப்பட்ட சமூகமாக நீண்டகாலம் தொட்டு இருந்து வருகிறது. தொடர்ந்தும் அதேநிலைதான் ஏற்படுமோ என அச்சமூகம் இன்று சிந்திக்கின்றது. பயம் நீங்கி நிம்மதியுடன் வாழ தமிழ் - முஸ்லிம் மக்கள் தோளோடு தோள் நின்று இந்தப் பயணத்தில் சென்று கிழக்கின் ஆட்சியை யானைச் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி கொள்ள வேண்டுமென்றார்.