*ஜனநாயகக் கட்சி பொதுச் செயலாளர் சல்மா ஹம்ஸா
வங்குரோத்தான அரசியல் கட்சிகளை நம்பி ஏமாந்துவிடாமல், சகல இன மக்களுக்கும் நன்மைகளைச் செய்துவரும் அரசாங்கத்தின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை மக்கள் ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு இலங்கை ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் சல்மா ஹம்ஸா தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கத்தின் வெற்றிலைச் சின்னத்தினை ஆதரித்தும், முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினதும் வெற்றியினை உறுதிப்படுத்து முகமாகவும் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேற்படி, கூட்டம் பெருந்திரளான மக்கள் முன்னிலையில் காத்தான்குடி குட்வின் சந்தியில் இடம்பெற்றது.
சல்மா ஹம்ஸா தனதுரையில் மேலும் குறிப்பிடுகையில்; ஐக்கிய தேசியக் கட்சி நீண்டகாலமாகவே அதன் வலிமையினை இழந்து அரசியல் வங்குரோத்து நிலையினை அடைந்துள்ளது.
மக்கள் ஆதரவு கிஞ்சித்தும் இல்லாத காரணத்தினாலேயே அக்கட்சி அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சிலபிரதேசங்களில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் போட்டியிடவில்லை என்பது உலகறிந்த விடயமாகும். ஆனால், மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கம் நாடளாவிய ரீதியில் பெரும் செல்வாக்கினைப் பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் மக்களின் பேரபிமானம் கொண்டுள்ள கட்சியாகும்.
இக்கட்சியின் தொடர் தேர்ச்சியான வெற்றிகள் மக்கள் அரசாங்கத்தின் பக்கம் நின்று ஜனாதிபதியினது மகிந்த சிந்தனையின் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு நல்ல ஆதரவினை வழங்கி வருகின்றனர் என்பதையே காட்டி நிற்கின்றன.
அரசாங்கத்தின் மூலம் அகில இலங்கை ரீதியில் ஆயிரக் கணக்கான கிராமங்கள் முன்னேற்றம் கண்டுள்ளன. காலம் காலமாக இருளில் மூழ்கிக் கிடந்த கிராமங்கள் மின்னொளியைப் பெற்றுள்ளன.
தொழில் வாய்ப்புகள், பொருளாதார மேம்பாடு, விவசாயத் துறையின் வளர்ச்சி, கல்வித்துறையின் முன்னேற்றம் என பல்வேறு துறைகளிலும் நாடு அபிவிருத்தி கண்டு வருகிறது. நமது பிரதேச மக்கள் தொடர்ந்தும் அரசுக்கு தமது ஆதரவினை வழங்குவதன் மூலம் எமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடிவதுடன், ஜனாதிபதியின் விருப்பத்தினைப் பெற்ற மக்களாகவும் நாம் ஆக முடியும்.
கிராமங்களின் முன்னேற்றத்திற்கு ஜனநாயக ரீதியில் நடைபெறும் தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளும் பெரும் பங்களிப்பினைச் செய்கின்றனர். இதில் பிராந்திய ரீதியில் நடைபெறும் தேர்தல்களும் கணிசமான முக்கியத்துவத்தினைக் கொண்டுள்ளன. மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கத்தின் சார்பிலான பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படின் நமது கிழக்கு மாகாணம் மேலும் அபிவிருத்தியில் செழிப்பதற்கும் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து செல்வதற்கும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.
இப்பிரதேசத்தின் படித்த இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்வதற்கும் நல்ல சந்தர்ப்பங்கள் கிட்டும்.
எனவே, இப்பகுதி மக்கள் தமக்குக் கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பினைத் தவறவிட்டுவிடாமல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களிப்பதுடன், மக்கள் பணிக்காக தம்மை நீண்டகாலம் அரசியலில் இணைத்துக்கொண்டு பாடுபட்டு வரும் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினதும் வெற்றியையும் உறுதிசெய்து தமக்கான நன்மைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.