*பாராட்டு விழாவில் பிரதியமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவிப்பு
"இருபத்தியிரண்டு வருடங்கள் நரிகளாக இருந்துகொண்டு தந்திரங்களை மேற்கொள்வதை விடுத்து, இரு வருடங்கள் சிங்கமாக இருந்து வீரத்துடன் செயல்பட்டு சமூகப் பணியாற்றுவதைப் பெரும் பாக்கியமாகக் கருதுகின்றேன். அத்துடன், நான் சார்ந்த சமூகத்தைப் பாதுகாக்கும், பாரிய பணியிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றேன்".
இவ்வாறு, பிரதி சுகாதார அமைச்சரும், பெருந்தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் அப்புத்தளை, இந்து கலாசார மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
ஜப்பானிய பல்கலைக்கழகத்தினால் பிரதி சுகாதார அமைச்சர் வடிவேல் சுரேஸின் சேவை நலனைப் பாராட்டி அவருக்கு வழங்கப்பட்ட "கலாநிதி" பட்டத்தையடுத்து அவரை கௌரவிக்கும் வகையில் அப்புத்தளை இந்து கலாசார மண்டபத்தில் பாராட்டுவிழா வெகு விமரிசையாக இடம்பெற்றது. அப்புத்தளை வர்த்தக சமூகத்தினர், சைவ இளைஞர் மன்றத்தினர், மக்கள் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள், அப்புத்தளை வாழ் தமிழ் மக்கள் ஆகியோர் இணைந்து மேற்படி விழாவினை ஏற்பாடு செய்திருந்தனர்.
பிரதி அமைச்சரைப் பாராட்டும் வகையில், அப்புத்தளை நகர் விழாக்கோலம் பூண்டிருந்தது. விழா ஆரம்பமாவதற்கு முன் நகர முதல்வர் சுமித் சமயதாச தலைமையில் மேளதாள வாத்திய இசைகளுடன் பிரதி அமைச்சர் நகர் ஊடாக ஊர்வலமாக விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
இங்கு பிரதி அமைச்சர் உரையாற்றுகையில்;
சர்வதேச அங்கீகாரத்துடன் எனக்கு வழங்கப்பட்ட "கலாநிதி" பட்டத்தைவிட தற்போது நடைபெறும் பாராட்டு விழாவினைக் கண்டு உள்ளம் பூரிப்படைகின்றேன். இவ்விழா பதுளை மாவட்ட மண்ணில் நடைபெறுவதையிட்டுப் பெருமைப்படுகின்றேன். ஆன்மீக, சமூக, வர்த்தக சமூகத்தினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் இணைந்து இவ்விழாவினை நடாத்தியிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகின்றது.
வெவ்வேறு கட்சிகளின் மூலம் உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவாகியிருக்கும் எமது சமூக உறுப்பினர்கள் அனைவருமே என்னுடன் இன்று இணைந்திருக்கின்றனர். தற்போது வெலிமடை, ஊவா - பரணகம, சொரணாதொட்டை ஆகிய பகுதிகளின் பிரதேச சபை உறுப்பினர்கள் மூவரும், எனது தலைமையை ஏற்றிருக்கின்றனர்.
என்னைப் பொறுத்தவரையில் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க பேதங்கள் என்னிடம் இல்லை. சமூகமே எனக்கு பிரதானம். அச்சமூகத்தைப் பாதுகாக்க வேண்டும். அச்சமூக மேம்பாட்டிற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படல் வேண்டும். இதுவே, எனது இலக்கு. கட்சிகள், தொழிற்சங்கமென்று எமது சமூகத்தை கூறுபோடுவதை என்னால் எவ்வகையிலும், அனுமதிக்க முடியாது" என்றார்.
அப்புத்தளை நகர சபைத் தலைவர் சுமித் சமயதாச தமதுரையில்;
எமது அரசின் வேலைத்திட்டங்களை தோட்டப்பகுதிகளில் மேற்கொள்வதற்கு தரகு முறைமையே, இதுவரை பின்பற்றப்பட்டு வந்தது. நடைமுறைப்படுத்தப்படும் திட்டம் அரசின் வேலைத்திட்டமென்பதையே தோட்டத் தொழிலாளர்கள் அறியாதிருந்துள்ளனர். ஆனால், இனிமேல் அத்தகைய தரகு முறைமை அவசியமில்லை.
தோட்டத் தொழிலாளர்களுக்கான ஏகோபித்த தலைவரான வடிவேல் சுரேஷ், எம்முடன் இருக்கின்றார். அவர் மூலமாக நேரடியாகத் தோட்டங்களுக்குள் சென்று தோட்டத் தொழிலாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதாகவுள்ளது. இத்தலைவர் கிடைக்க தோட்டத் தொழிலாளர்கள் பாக்கியம் செய்திருக்க வேண்டும். இவரது சேவை நலனைப் பாராட்டி சர்வதேச பல்கலைக்கழகம் வடிவேல் சுரேஷுக்கு `கலாநிதி' பட்டத்தினை வழங்கியிருக்கின்றது. எமது ஜனாதிபதிக்கு மிக நெருக்கமாக இவர் இருந்து வருவதனால் பல கோடி ரூபா செலவில் வேலைத்திட்டங்களை இவர், மேற்கொண்டு வருகின்றார் என்றார்.
பிரதேச சபை உபதலைவர் எஸ்.கே. நமசிவாயம் தமதுரையில்;
"கலாநிதி" பட்டம் பெற்றிருக்கும் எமது பிரதி அமைச்சர், நாட்டின் ஜனாதிபதியின் பெரு நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். அதனால், அவர் ஊடாக பல்வேறு வேலைத்திட்டங்களை எமது பகுதியில் ஆரம்பிக்க முடியும். இப்பகுதியின் விகாரகலை, ரொகாம்டன் ஆகிய தோட்டங்களின் தொழிற்சாலைகள் நீண்ட காலமாகவே மூடப்பட்டுக் கிடக்கின்றன. ஆகையினால், இத் தொழிற்சாலைகளில் தொழிற் பேட்டைகளை ஆரம்பித்து, ே தாட்ட இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்க ஆவண செய்ய வேண்டும்ீீ என்றார். மாற்றுக் கட்சிகளின் மூலம் வெலிமடை, ஊவா - பரணகம, சொரணாதொட்டை பிரதேச சபை உறுப்பினர்களான இராசலிங்கம், முரளிதரன், சந்திரசேகரன், ஆகிய மூன்று பேரும், பிரதி அமைச்சருடன் இணைந்ததுடன், தமக்கு வாக்களித்த மக்கள் பயன்படும் வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப் பிரதி அமைச்சர் தமக்கு உதவ வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்.