எமது சமூக அமைப்பில் நெருக்கடியான வாழ்க்கை இடம்பெயர்வுகள், பலதரப்பட்ட இழப்புகள் போன்ற காரணங்களால் மூத்தோர் பராமரித்தலென்பது பாரிய சுமையாக மாறி வருவதாக யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட விரிவுரையாளர் டாக்டர் ந.சிவராசா தெரிவித்தார்.
கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் அண்மையில் இடம்பெற்ற இளைப்பாறிய சுகாதார கல்வியாளரும் உளவளத்துறையாளருமான வைத்தீஸ்வரனின் மூத்தோர் பராமரிப்பு நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்;
"எமது நாட்டிலுள்ள மக்கள் தொகையில் மூத்தோர் முக்கிய இலக்கினராவர். ஆனால், இவர்களுக்கான ஆரோக்கிய வசதிகள், வளங்களை பெறுதல் போன்றவை இலகுவான காரியமில்லை. நாற்பது வயதுக்கு மேற்பட்ட அனைவரும் எம்மில் காணப்படும் அசாதாரண நிலைகளை உடனுக்குடன் இனம் கண்டு அதற்கேற்ப ஆரம்ப நிலையிலேயே வைத்திய ஆலோசனை பெறுவோமானால் பாரிய விளைவுகளில் இருந்து எம்மைக் காப்பாற்ற முடியும்.
சுகாதார அபிவிருத்தி முயற்சிகளைச் சிறுவயதில் கடைப்பிடித்து வருவோமானால் இயல்பு வாழ்க்கை வாழலாம். எம்மவர் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சூழல், கௌரவமாக மூப்படையும் வாய்ப்பு, அதற்கான அடிப்படைப் பொருளாதார வளம், வாழ்வதற்கான இருப்பிட வசதி முதலியன கிடைக்குமானால் இவ்வாறான நூல்கள் வெளிவர வேண்டிய அவசியமில்லை. ஆனால், எமது சமூக அமைப்பில் நெருக்கடியான வாழ்க்கை, இடம்பெயர்வுகள், பலதரப்பட்ட இழப்புகள் போன்ற காரணங்களால் "மூத்தோர் பராமரித்தல்" சமூகமட்டத்தில் பாரிய சுமையாக மாறிக் கொண்டு வருகிறது.
குடும்பத்தில் உள்ள பிள்ளைகள் யாவரும் வெளிநாடுகளில் இடம்பெயர்ந்து குடியேறியமையால் தாய், தந்தையர் அநாதரவாக தத்தளிக்கும் பல குடும்பங்களையும் காண்கிறோம்.
நடுத்தர வயதாக இருப்பினும் சரி இளையோர், மூத்தோராக இருப்பினும் சரி நாம் அனைவரும் ஊக்கமுடையவர்களாகவும் சுறுசுறுப்பாகவும் செயற்படுதல் அவசியம். எளிமையான முறையில் எமது அன்றாட வாழ்க்கையை அமைத்துக் கொள்ளல் இன்றியமையாததாகும். அயலாருடன் சுமுகமான உறவுகளை பேணி நடத்தல் முதுமையான காலத்திலும் சவால்களுக்கு முகம் கொடுக்கும் மனத்திடத்தை எமக்கு ஏற்படுத்தும். முதுமையான காலத்தில் அடிப்படைத் தேவைகளாக உணவு, உடை, இருப்பிட வசதிகள் ஆகியன அமைவதோடு குறைந்தது ஆறு மணித்தியாலங்கள் நித்திரை மிக அவசியம். நடுத்தர வயதிலிருந்து எம் அனைவருக்கும் போதியளவு ஓய்வு தேவை.
இன்று பலர் பொருளீட்டலில் கூடிய அக்கறை கொள்வதால் ஓய்வின்றி உழைப்பதைக் காண்கின்றோம். இந்நிலை தொடரின் நெஞ்சு படபடப்பு, அதி இரத்த அமுக்கம், சலரோகம், இருதய வியாதி, குடற்புண் போன்ற நோய்கள் ஏற்படலாம். இதனால், தேடிய சொத்தையே அனுபவிக்க முடியாத நிலையும் ஏற்படலாம். ஒவ்வொருவருக்கும் மன நிம்மதி அவசியம். நாம் அனைவரும் ஆன்மீக முயற்சிகளில் ஈடுபடுவது நல்ல பலனைக் கொடுக்கும்" என்றார்.
பிரதம அதிதியாக கலந்து கொண்ட இளைப்பாறிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி ஜெகநாதன் தனதுரையில்;
"எமது வாழ்க்கையில் பல பருவங்களை தாண்டி முதுமையைச் சந்திக்கின்றோம். உடல் நலிவடைதல், நோய்வாய்ப்படல் போன்ற காரணங்களால் சிலர் ஐம்பது வயதிலேயே முதுமைத் தோற்றத்தை பெறுவர். ஒரு சிலர் எழுபது வயதை அடைந்த பின்பும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் அன்றாட வாழ்க்கையை குதூகலமாக நடுத்தரவயதினரைப் போல் இசைவுபட வாழ்வதனையும் காண்கிறோம். நாம் மூப்படைந்தாலும் ஆரோக்கியமாக வாழவே ஆசைப்படுகின்றோம். எமது வாழ்க்கையை வளமாக வடிவமைத்தல் எமது கைகளிலேயே தங்கியுள்ளது என்றார்.
வீரகேசரி வாரவெளியீட்டின் பிரதம ஆசிரியர் கலாநிதி வி.தேவராஜ் தனது உரையில் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம். ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் நடந்து கொண்டால் அவர்களது வாழ்க்கை விபரிக்க முடியாத மனநிறைவைக் கொடுக்கும். ஒருவரை ஒருவர் மதித்து நடந்தல்; ஒருவருடைய பேச்சை மற்றவர் ஈடுபாட்டுடன் செவிமடுத்தல், மற்றவர் உணர்வுகளுக்கு மதிப்பளித்தல், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் நடந்து கொள்ளல். தேவையான இடத்தில் இயன்ற ஆலோசனை வழங்கல், ஒருவரின் நல்ல செயற்பாட்டை மெச்சுதல் பாராட்டுதல், அயலாருடன் சிநேகபூர்வமாகவும் அன்பான உறவைப் பேணுதல் போன்ற அம்சங்கள் குடும்ப உறவில் அடங்கும் படிமுறைகளாக கருதலாம்.
இதனை அவதானித்து உணர்ந்த பிள்ளைகளும் குதூகலமாக வாழும் நிலை உருவாகும். இச்செயற்பாடுகளே நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்பதற்கு உதாரணம்.
கணவன் மனைவி மூப்படைந்த காலத்தில் இவர்கள் வாழ்க்கை ஒன்றிணைந்ததாக அமைதல் மிக அவசியம். பொறுமையைக் கடைப்பிடித்து மற்றவர்களின் தேவையைக் கண்டு அதற்கேற்ப நடத்தல் மனநிறைவைத்தரும். மூப்படைந்த காலத்திலும், நோயுள்ள வேளையிலும் மற்றவர்கள் அவர்களது உணர்வுகளை மதித்து அன்றாட தேவைகளை உணர்வு பூர்வமாக நிறைவு செய்தல் சமூகத்தின் கடமை. நீண்ட காலம் குடும்பத்திற்காக, சமூகத்திற்காக பாடுபட்டு முதுமையானவர்களை அவர்களது பிள்ளைகளும் சமூகமும் கவனிக்க வேண்டியது கடமையாகும் என்றார்.
நூல் வெளியீட்டுரை நிகழ்த்திய சட்டத்தரணி சோ.தேவராஜா தனது உரையில்,
சமூக நிலைமையை நன்கு அறிந்து அதனை சிந்தித்து தனது ஆளுமையை ஆரோக்கிய நூல்களாக காலத்திற்கு காலம் நல்ல தரமான நூல்களை கா.வைத்தீஸ்வரன் வெளியிட்டுவருகிறார். இன்று வெளியாகின்ற "மூத்தோர் பராமரிப்பு" நூல் சகலரும் அறிந்து செயற்பட நல்ல வழிகாட்டியாக அமைந்துள்ளது. மூத்தோர் குடும்பத்திலும், சமூகத்திலும் மதிக்க வேண்டியவர்கள் என்பதை சிந்திக்க வைக்கிறது. மூத்தோர் பராமரிப்பு நூலில் பல்வேறு அரிய தகவல்களை பத்து தலையங்கங்களில் உள்ளடக்கி மிகவும் நுட்பமான முறையில் இலகுமொழியில் வெளியிட்ட கா.வைத்தீஸ்வரன் பாராட்டுக்குரியவர் என்றார்.
சுகாதாரக்கல்விப் பணியகத்தைச் சேர்ந்த வைத்திய கலாநிதி எம்.யோகவிநாயகம் தனதுரையில்;
சமூகத்தின் பற்றுக்காரணமாக கா.வைத்தீஸ்வரன் பல்வேறு நிகழ்வுகள் மூலம் சுகாதார தகவல்களை வெளிக்கொண்டுவருவதோடு சுகாதார நூல்களையும் வெளியிட்டு வருகிறார். இவரது நூல்கள் தரமானவையாக இருப்பதால் மக்களும் ஆதரவு வழங்குவதை அவதானிக்க முடிகிறது. அவரது பணி பாராட்டுக்குரியது என்றார்.
"மூத்தோர் பராமரிப்பு" நூலின் முதற்பிரதியை பேராசிரியர் சபா.ஜெயராசா, சமூக ஜோதி ச.இலகுப்பிள்ளைக்கு வழங்கினார். தொடக்கவுரையை கலாபூஷணம் சைவப்புலவர் சு.செல்லத்துரையும் ஏற்புரையை நூல் ஆசிரியர் கா.வைத்தீஸ்வரனும் நிகழ்த்தினார்கள்.