*அரசு ஆட்டம் கண்டிருப்பதாக கூறுகிறார் ஹக்கீம்
"கிழக்கில் பேரினவாத ஆக்கிரமிப்பிற்கான செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில் முஸ்லிம் காங்கிரஸை வீழ்ச்சியடைச் செய்து முஸ்லிம் சமூகத்திற்கு பாதிப்பை உருவாக்கும் அரசின் அராஜகத் தனத்தை ஜனநாயக ரீதியாக தோற்கடிப்பதற்காகவே பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றோம். எங்களது வெற்றி நிச்சயிக்கப்பட்டு விட்டதைக் கண்டு அராஜகம் செய்கின்ற அரசு ஆட்டம் கண்டிருக்கின்றது" என திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளரும் முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை திருகோணமலை மாவட்டத்தின் ரொட்டவெவ, ஜமாலியாபுரம், சோனகத்தெரு ஆகிய இடங்களில் இடம் பெற்ற ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். பெருந்திரளான முஸ்லிம், தமிழ் மக்கள் கலந்து கொண்ட இக்கூட்டங்களில் உரையாற்றிய ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது:
கிழக்கு மாகாணத்தில் இத்தேர்தல் பலாத்காரமாக திணிக்கப்பட்டபோதும் கூட முஸ்லிம் சமூகத்தின் ஜனாதிபதி தேர்தலாக இத்தேர்தலை நாங்கள் பார்க்கின்றோம். ஐக்கிய தேசியக்கட்சிக்கு இது பாராளுமன்றத் தேர்தல், அரசுக்கு மாத்திரம் தான் இது மாகாணசபைத் தேர்தல், என்ற பார்வை இன்று மக்களிடம் மேலோங்கி இருக்கின்றது.
முஸ்லிம் சமூகம் தனியான கலாசார விழுமியங்களை, தனித்துவமான குண இயல்புகளைக் கொண்ட ஒரு சமூகமாக இருக்கிறது. அதன் அரசியலை வடிவமைக்க முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி செயற்பட்டாலும் இக்கட்சி கிழக்கிலே வாழுகின்ற ஒட்டுமொத்த சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டிய தேவைப்பாட்டின் அடிப்படையில் சகோதர தமிழ்ச் சமூகத்தின் அபிலாஷைகளையும் அங்கீகரித்தே வந்திருக்கின்றது.
இரண்டு சமூகங்களையும் மோதவிட்டுக் பார்க்கின்றவர்கள் விஷமத்தனமான கதைகளை சொல்லி தமிழ், முஸ்லிம் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கின்ற நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் மிகுந்த நிதானத்துடனும் பொறுப்புடனும் மிக நேர்மையாக இத் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.
முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அந்தஸ்து என்பது கிழக்கில் வாழுகின்ற முஸ்லிம்களின் பலத்திலே தான் தங்கியிருக்கின்றது. அதை ஒன்று சேர்த்து தான் கிழக்கிலும் வெளியிலும் சிதறி வாழுகின்ற முஸ்லிம்களுக்கும் நாங்கள் முதுகெலும்பாக இருக்கிறோம். இந்த சமூகம் இழப்புக்களை சந்திக்கக்கூடாது என்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுகின்றோம்.
முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களைப் பறித்தெடுத்து கட்சியை உடைக்கலாம், சிதைக்கலாம். முஸ்லிம்களின் ஒற்றுமையை முழுமையாக அழிக்கலாம் என்றெல்லாம் திட்டம் போட்ட அரசாங்கங்கள் பலதடவை தமது திட்டங்கள் தோல்வியுற்றதைத் தான் கண்டிருக்கின்றார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெற்ற போது எமது கட்சிக்கு எதிராக ஒரு தடையையே கொண்டு வந்தார்கள். போட்டியிட்டால் முஸ்லிம்களெல்லாம் இக் கட்சிக்குத் தான் வாக்கு போடுவார்கள் என்கின்ற பீதி அரசுகளுக்கு தொடர்ச்சியாகவே இருந்து வருகின்றது.
இந்த நாட்டிலே முஸ்லிம்கள் காலம்காலமாக அனுபவித்து வந்த பல உரிமைகள் இந்த அரசினால் பறிக்கப்பட்டிருக்கின்றன. சரித்திரத்தில் ஒருபோதும் இல்லாத அளவுக்கு முஸ்லிம் அமைச்சர்கள் இருந்தும் இந்த உரிமைகள் பறிபோவதை யாராலும் தடுக்க முடியவில்லை. சிறுபான்மை மக்கள் குறித்து மிகப் பயங்கரமான ஒரு நிகழ்ச்சி நிரலோடு இந்த அரசு செயற்படுகின்றது.
1988 ஆம் ஆண்டு பாரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவியபோதும் வடகிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு 17 உறுப்பினர்களை வென்றெடுத்தோம். அதே போன்று இன்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவுகின்றது. அதையெல்லாம் மீறி முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை சரியான முறையில் வென்றெடுப்பதற்காக நாங்கள் போட்டியிடுகின்றோம். அச்சுறுத்தல்களையும் அடாவடித்தனங்களையும் கண்டு அலறியடித்துக் கொண்டு ஓடி ஒளிகின்ற கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் இருந்தது கிடையாது.
ஒரு சமூகம் பிரதேச, இன ரீதியாக முடக்கப்பட்டிருக்கின்ற ஒரு, சூழ்நிலையில் ஆட்சியைக் கைப்பற்றி விடலாம் என்ற அதீத கற்பனையோடு அரசாங்கம் இத்தேர்தலில் களமிறங்கி இருக்கின்றது. தமிழ் பேசும் சமூகங்களை அதனுடைய பாரம்பரிய பூமியிலே தொடர்ந்தும் அடக்கி ஆளுகிற, உரிமைகளைப் பறிக்கின்ற அரசுக்கு பாடம் புகட்டும் ஒரு சந்தர்ப்பம் இன்று எமக்கு வாய்த்திருக்கின்றது.
அரசும், விசமக் கருத்துக்கள் சொல்லும் சக்திகளும் தெரிவிக்கின்ற மாதிரி அதிகாரத்திற்காக போராடுகின்ற வெறும் கதிரைக்கான முஸ்லிம் காங்கிரசின் போராட்டமல்ல இது, கிழக்கு மண்ணிலே வாழுகின்ற தமிழ் பேசும் சமூகங்களை அடக்கி, ஒடுக்கி, பிரித்து அதில் குளிர்காய நினைக்கின்ற குள்ளநரிக் கும்பல்களுக்கு எதிரான ஒரு போராட்டமே இதுவாகும். பல கஷ்டங்களை நாங்கள் அனுபவித்திருக்கின்றோம். பரஸ்பரம் எங்களுக்குள்ளே நிறைய பகை இருந்திருக்கின்றது. அந்தப் பகைமையை இந்தத் தேர்தலில் பல விதங்களில் தங்களுடைய லாபங்களுக்காக பாவிக்க நினைப்பவர்களுக்கு மிகப் பக்குவமாக அரசியல் செய்து பழக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் இடம் கொடுக்கப் போவதில்லை.
தமிழ் பேசும் சமூகங்களின் ஒற்றுமைக்கும், நிரந்தர சமாதானத்திற்கும், சக வாழ்விற்கும் என்று எனது அரசியலை பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அர்ப்பணித்திருக்கின்றேன். நேர்மையானதொரு ஆட்சி நடக்கவேண்டும் என்பதற்கான உண்மையான முன்னுதாரணம் என்ன என்பதை காட்டுகின்ற மாபெரும் கடமையையும், பொறுப்பையும் எங்களுடைய தோள்களில் சுமந்தவர்களாக இத் தேர்தலில் களமிறங்கியிருக்கின்றோம்" என்றார்.